Thursday, January 31, 2013

முடிவுத்தொடங்கி (அந்தாதி) எழுதுவோமா?


முடிவுத்தொடங்கி(அந்தாதி) என்பது முடிவு(அந்தம்), தொடக்கம்(ஆதி) என்ற சொற்பிணையலால் ஏற்பட்டதே! மரபுக் கவிதையில் முதற் பாவின் ஈற்றடியில் முடியும் சீரும் அடுத்து வரும் பாவின் முதலடியில் தொடங்கிய சீரும்  ஒன்றாக அமைதலையே முடிவுத்தொடங்கி(அந்தாதி)  என்கிறார்கள். அதாவது, முடிகின்ற சீராலேயே அடுத்துத் தொடங்குதல் எனலாம். மரபுக் கவிதை புனைவது இலகுவானதல்ல, அதிலும் இவ்வகைப் பாக்களைப் புனைவது இலகுவாக அமைய வாய்ப்பில்லை.

புதுக்கவிதை விரும்பிகள் பலர் மரபுக் கவிதை அமைப்பைப் பேணி வருவதை நாம் அறிவோம், அந்த வகையில் புதுக்கவிதையிலும் முடிவுத்தொடங்கி(அந்தாதி) புனையலாமே! வழமை போன்று புதுக்கவிதை புனையும் வேளை முதற் பகுதியின் ஈற்றுச் சீர்(சொல்) அடுத்த பகுதியின் தொடக்கச் சீர்(சொல்) ஆக அமையும் வண்ணம் (அதாவது முடித்த சொல்லாலே தொடக்குதல்) முடிவுத்தொடங்கி(அந்தாதி) புனைய முயன்று பாருங்களேன்.

எப்போதும் எதுகை, மோனை கையாண்டால், எளிதாகப் பாக்களைப் படிக்க உதவுமே! ஆயினும் பாபுனையும் போது; முடிவுத்தொடங்கி(அந்தாதி)யாகப் பாபுனைந்தால் நினைவில் நிறுத்தவோ நினைவூட்டவோ முடியுமாமே! உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துகள்.

எடுத்துக்காட்டு:

படிக்க நினைத்து
நினைத்துப் படித்தபின் மறந்து
மறந்தும் படித்ததை மீட்டு
மீட்டுப் பார்க்கையில் படித்ததன் பயன்
பயன் ஈட்டும் போதே புரியும்
புரியும் ஐயா படிப்பின் அருமையும்!

என்னங்க, முதற் பகுதியின் ஈற்றுச் சீர்(சொல்) அடுத்த பகுதியின் தொடக்கச் சீர்(சொல்) ஆக அமைய வேண்டுமென்றவர்; ஆறு வரியில படிப்பின் அருமையைச் சொல்லுறாரே என்கிறீர்களா?

இரு பகுதிகளைக் கொண்ட ஒரு புதுப் பா(கவிதை) புனையாமலே, ஒரே புதுப் பாவி(கவிதையி)லே ஒவ்வொரு அடி(வரி)யின் ஈற்றுச் சீரு(சொல்லு)ம் அடுத்து வரும் அடியின் தொடக்கச் சீர்(சொல்) ஆக அமையப் புனைந்து விட்டேன். இதனை மரபுப் பாவி(கவிதையி)லே சீரந்தாதி என்பர்.

என்னடா இவரு முடிவுத்தொடங்கி(அந்தாதி) என்றார்; பின்னர் சீரந்தாதி என்று புனைந்து காட்டுகிறார்; ஒன்றுமே புரியலே என்கிறீர்களா? இதற்குத் தானண்ணே, அறிஞர்களின் கருத்தைக் கீழே தருகின்றேன் படிக்கவும்.

"ஒரு பாடலின் ஈற்றடியின் கடைச்சொல் (அந்தம்), வரும் பாடலின் தொடக்கச் சொல்லாக‌ (ஆதி) அமையும் இலக்கணமுறை அந்தாதி ஆகும்." என்பதற்கு http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF என்னும் விக்கிப்பீடியா தமிழ்ப் பதிப்பில் இவ்வாறு விளக்கப்பட்டுள்ளது.

அந்தாதி என்பது யாப்பியலில் ஒரு தொடை வகையையும், ஒரு பிரபந்த வகையையும் குறிக்கும். அந்தாதி என்னும் சொல் முடிவு என்னும் பொருள்படும் அந்தம், தொடக்கம் என்னும் பொருள்படும் ஆதி ஆகிய இரு சமசுக்கிருதச் சொற்களின் சேர்க்கையால் உருவானது. இதற்கேற்ப, ஒரு பாடல் முடிவில் உள்ள எழுத்து, அசை, சீர், சொல், சொல் அல்லது அடி அடுத்து வரும் பாடலின் தொடக்கமாக அமையும் பாடல்களால் ஆனது அந்தாதிச் செய்யுள் ஆகும். அடுத்தடுத்து வரும் அடிகள் அந்தாதியாக அமையும் போது அது அந்தாதித் தொடை எனப்படும். அந்தாதி அமைப்பு பாடல்களை வரிசையாக மனப்பாடம் செய்வதற்கு வசதியாக உள்ளது.

அந்தாதிகள் பல வகைகளாக உள்ளன; இவற்றுள் பின்வருவன அடங்கும்:
ஒலியந்தாதி, பதிற்றந்தாதி, நூற்றந்தாதி, கலியந்தாதி, கலித்துறை அந்தாதி, வெண்பா அந்தாதி, யமக அந்தாதி, சிலேடை அந்தாதி, திரிபு அந்தாதி, நீரோட்ட யமக அந்தாதி என விக்கிப்பீடியா தெரிவிக்கின்றது.

இதைவிட இன்னும் அழகாக, முடிவுத்தொடங்கி(அந்தாதி)யின் வகைகளை அலசுகிறார் அறிஞர் இளம்பூரணர். அறிஞர் இளம்பூரணர் கூறுவதை http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88 என்னும் விக்கிப்பீடியா தளத்தில் பார்க்கலாம். அதனைக் கீழே தருகின்றேன். அந்தாதித் தொடைக்கு எடுத்துக்காட்டாக, இளம்பூரணர் பின்வரும் பாடலைக் கொடுத்துள்ளார்.

உலகுடன் விளங்கும் ஒளிதிகழ் அவிர்மதி
மதிநலன் அழிக்கும் வளங்கெழு முக்குடை
முக்குடை நீழல் பொற்புடை ஆசனம்
ஆசனத் திருந்த திருந்தொளி அறிவன்
ஆசனத் திருந்த திருந்தொளி அறிவனை
அறிவுசேர் உள்ளமோ டருந்தவம் புரிந்து
துன்னிய மாந்தர் அஃதென்ப
பன்னருஞ் சிறப்பின் விண்மிசை உலகே

மேலேயுள்ள பாடலில் பல வகையான அந்தாதித் தொடைகள் பின்வருமாறு வந்துள்ளன.

முதலாம் இரண்டாம் அடிகள் - அசையந்தாதி
இரண்டாம் மூன்றாம் அடிகள் - சீரந்தாதி
மூன்றாம் நான்காம் அடிகள் - சீரந்தாதி
நான்காம் ஐந்தாம் அடிகள் - அடியந்தாதி
ஐந்தாம் ஆறாம் அடிகள் - சீரந்தாதி
ஆறாம் ஏழாம் அடிகள் - எழுத்தந்தாதி
ஏழாம் எட்டாம் அடிகள் - எழுத்தந்தாதி
எட்டாம் முதலாம் அடிகள் - சீரந்தாதி

மேற்படி விக்கிப்பீடியா தளத்தில் பொறுக்கித் தந்த எடுத்துக் காட்டுகளுடன் மரபுக்கவிதையில் பேணப்படும் முடிவுத்தொடங்கி(அந்தாதி) பற்றிய தெளிவைப் பெற்ற உங்களுக்கு அதிகம் பேசப்படும் பக்திப் பாடல்களில் 'அபிராமி அந்தாதி' ஐ மறந்திருக்க மாட்டியள். அபிராமி பட்டரால் இயற்றப்பட்டது. எடுத்துக்காட்டாக அதில் முதல் மூன்று பாடல்களைத் தருகின்றேன்.

1) உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத்துணையே.

2) துணையும் தொழும் தெய்வமும் பெற்ற தாயும் சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும் பனிமலர்ப்பூங்
கணையும் கருப்புச் சிலையுமென் பாசாங்குசமும் கையில்
அணையும் திரிபுர சுந்தரியாவதறிந்தனமே.

3) அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன், நினது திருவடிக்கே,-திருவே.- வெருவிப்
பிறிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்,
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே.

பிள்ளையார் காப்புடன் நூற்பயனும் உட்பட அபிராமி அந்தாதி நூறு பாடல்களையும் கீழ்வரும் இணைப்புகளைச் சொடுக்கிப் பார்க்கலாம்.
http://www.thamizhisai.com/devotional-songs/seerkazhi-govindarajan/sg01_abirami-andhathi.php
http://www.thamizhisai.com/devotional-songs/seerkazhi-govindarajan/sg02_abirami-andhathi.php

புதுக்கவிதை விரும்பிகளே! புதுக்கவிதையிலும் இப்படி முடிவுத்தொடங்கி(அந்தாதி) புனையலாமே! என இன்னோர் எடுத்துக்காட்டைத் தருகிறேன். புதுக்கவிதையிலும் முடிவுத்தொடங்கி(அந்தாதி) எழுத முயற்சி செய்யும் போது சற்று இறுக்கமாகப் புனைவீர்கள் என நம்புகின்றேன்.

அழகி ஒருத்தியை அணுகி
அணுகிய உடனே கேட்டேன் காதலை...
காதலாவது கத்தரிக்காயாவது என அறைந்தாள்
அறைந்தாளே குதிக்கால் பாதணியாலே!

பாதணியாலே பதப்படுத்திய அவளாலே
அவளாலே தான் அறிந்தேன் அவளுக்கு
அவளுக்குத் தான் ஆறு பிள்ளைகளாமே!

பிள்ளைகளாலே என்ன பயன்
பயன் என்னவோ பாதணி அடி வேண்டி
அடி வேண்டித் தானண்ணே காதலாம்
காதலாம் வந்ததாம் படிப்புப் பாழாப் போச்சாம்

படிப்புப் பாழாப் போச்சு என எண்ணி
எண்ணிப் பார்த்தால் அறிவீர்
அறிவீர் உழைப்புப் பிழைப்பும் போச்சே!

பிற அறிஞர்களின் பதிவுகளுடன் மீண்டும் சந்திப்பேன்.
(தொடரும்)

Sunday, January 27, 2013

பாரதியாரின் 'தமிழ்' என்னும் பா(கவிதை)


நான் படித்த பாவலர்களின் பாக்களிலே
பாரத நாட்டுப் பாவலர் பாரதியாரின்
தமிழ் எவ்வாறு மேம்பட வேண்டுமென
'தமிழ்' என்று தலைப்பிட்டுப் பாடிய பா
தமிழில் பாபுனைவோருக்கு அறிவுப் பா!

பாவலன் பாடும் பாடுபொருளைவிட
பாவலன் பாட்டில் வரும் தூரநோக்கு
எண்ணங்களை எண்ணிப் பாருங்களேன்...
முடிந்தால் பாரதியின் எண்ணங்களைப் போல
பாபுனைய விரும்புவோர் பாடுங்களேன்!

தமிழ்

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
      இனிதாவது எங்கும் காணோம்;
பாமர ராய், விலங்குகளாய், உலகனைத்தும்
      இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு
      வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
      பரவும்வகை செய்தல் வேண்டும்.

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
      வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்,
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை;
      உண்மை, வெறும் புகழ்ச்சி யில்லை;
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
      வாழ்கின்றோம்;ஒருசொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
      தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்!

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
      தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள்
      தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
      சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்;
      அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.

உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
      வாக்கினிலே ஒளியுண்டாகும்;
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
      கவிப்பெருக்கும் மேவு மாயின்,
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
      விழிபெற்றுப் பதவி கொள்வார்;
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
      இங்கமரர் சிறப்புக் கண்டார்.

ஆக்கியோன் பாரத நாட்டுச் சுப்பிரமணிய பாரதியார்

Tuesday, January 22, 2013

தமிழ் என்ன புளி நெல்லியா?


பிரெஞ்சுக் காரன்,
டொச்சுக் காரன்,
ஆங்கிலக் காரன்
எல்லோரும் தமிழ் பேசுறாங்க
நம்மாளுகள் மட்டும்
தமிழ் பேச மாட்டேங்கிறாங்க...

அமெரிக்காவிலும்
மாயன் இன முன்னோர்கள்
தமிழரின் வழித்தோன்றலாம்
சான்றுக்கு
மாயன் எழுத்துகளும்
தமிழ் எழுத்துகளும்
ஒன்றுபடுகிறதாம்...

ஆபிரிக்காவிலும் ஐரோப்பாவிலும்
சோவியத் உருசியாவிலும்
சீனக் கம்யூனிசக் குடியரசிலும்
முன்னை நாளில்
தமிழ் இருந்ததாகச் சான்றிருக்காம்...

ஆசியா தானாம்
தமிழுக்குத் தாய் மண்ணாம்
ஆசிய நாடுகளான
தமிழின் தாய் நாடாம்
பாரத(இந்திய) நாடு,
பாரத(இந்திய) நாட்டின் பிள்ளையாம்
ஈழ(இலங்கை) நாடு,
பாரத(இந்திய) நாட்டின் பேரப் பிள்ளைகளாம்
சிங்கை(சிங்கப்பூர்), மலே(மலேசியா) நாடுகள்
எங்கும் தமிழ் வாழ்வதாய் கூறிடினும்
கலப்பு/கூழ் (சாம்பாறு) கறி போல
பல மொழி கலந்து தமிழ் பேச
எப்படித்தானுங்க தமிழ் வாழும்?

தமிழ் என்ன புளி நெல்லியா?
தமிழ் பேச வாய் புளிக்கிறதா?

புளி நெல்லி கடிச்சு உண்டாலும் உண்டு
உண்ட பின் நீர் குடிச்சால்
இனிக்குமடா அடி நாக்கு!

படிக்கப் புளிக்கும் தமிழ் தானடா
பல்லைக் கடித்துப் படித்த பின்
அகத்தியனின் இலக்கணமும்
தொல்காப்பியனின் இலக்கண விளக்கமும்
வள்ளுவனின் குறளும் கம்பனின் பாட்டும்
படிக்கப் படிக்கத் தெரியுமடா
இனிக்கிறது தமிழென இனிக்கும் தமிழை!

தமிழைத் தேன்தமிழென
முன்னோர்கள் முன்மொழிந்தது
ஏன் தெரியுமா?
இனிக்கும் தமிழ்
தேன் போன்று தித்திக்கும் என்றே!

திக்கெட்டும் வாழும் தமிழா!
எனக்கெட்டிய தமிழை வைத்து
உனக்குப் பாபுனையப் படிப்பிப்பேன் - நீ
எனக்கு
உலகெங்கும் உயிரோடு தமிழ் வாழ
உன் பாவினில் எடுத்து விடு
கலப்பு/கூழ் (சாம்பாறு) கறி போலல்லாது
பிறமொழி கலவாத் தனித் தமிழை!

நம் தமிழ் வாழ்ந்தால் தானே
நாம் தலை நிமிர்ந்து
நாம் தமிழரென வாழ்வோம்
இவ்வுலகில்...!
திக்கெட்டும் வாழும் தமிழா!
கதைகள், கட்டு உரைகள்
நாடக, திரைக் கதை உரையாடல்
எல்லாம் எழுத வைப்பேன்
நான் - நீ
எனக்கு
உன் எழுத்தினில் புகட்டி விடு
உலகெங்கும் இனிக்கும் தமிழை!

Sunday, January 20, 2013

சோமசுந்தரப்புலவர் பா(கவிதை)


பாபுனைய விரும்பும் ஒவ்வொருவரும் சிறந்த பாவலர்களின் பாபுனையும் நுட்பங்களை கண்டறிதல் மிகவும் பயனுள்ளதாகும். இங்கு எளிமையான ஆடிப்பிறப்பில் நல்ல சாப்பாடாக
கூழும் கொழுக்கட்டையும் உண்ணும் நிகழ்வை புதுமையாக ஈழத்து யாழ்ப்பாணத்து நாவாலியூர் சோமசுந்தரப்புலவர் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளார். அவரது பாவைப் படித்ததும் நாவூறும் பாருங்கோ... பாபுனைய விரும்புவோர் அவரது நுட்பத்தைப் படித்து சிறந்த பாக்களைப் புனைய வாழ்த்துகிறேன்.

ஆடிப்பிறப்பு

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
பச்சை அரிசி இடித்துத் தெள்ளி,
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,

வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரில் சக்கரையுங்கலந்து,
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.

வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
வெல்லக் கலவையை உள்ளே இட்டு
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!

பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டு மாவுண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக வாயூறிடுமே

குங்குமப் பொட்டிட்டு பூமாஇலை சூடியே
குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் பாடிப்பும் படைப்போமே

வன்னப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே

வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல
மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தந் தோழர்களே
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

ஆக்கியோன்: ஈழத்து யாழ்ப்பாணத்து நாவாலியூர் சோமசுந்தரப்புலவர்

Friday, January 18, 2013

பாவலன் (கவிஞர்) ஆகலாம் எழுதுகோலைப் பிடி!


காதலிலே தோல்வியுற்ற
காளைக்குத் தெரிந்ததெல்லாம்
வாலையின் வண்ணங்களே...
வாலைக்குத் தெரிந்ததெல்லாம்
காளையின் எண்ணங்களே...
"
காதலி...
காதலித்துத் தோல்விகாண்...
அப்ப தான்
பா (கவிதை) புனையலாம்" என்று
சிலர் பிதற்றலாம்...
அதெல்லாம்
ஒரு பக்க எழுத்தெல்லோ!
ஏன்?
இப்படி வாவேன் வழிக்கு...
பார்த்தவனுக்குத் தான் தெரியும்
கண்ணால் பார்த்ததும் கெட்டதென...
கேட்டவனுக்குத் தான் தெரியும்
காதில் விழுந்ததும் கெட்டதென...
விசாரித்தவனுக்குத் தான் தெரியும்
சூழலில் நடந்தது உண்மையென...
மணந்தவனுக்குத் தான் தெரியும்
மூக்கில் நுழைந்தது மல்லிகை மணமென...
பட்டவனுக்குத் தான் தெரியும்
காலில் சுட்டது நெருப்பென...
தொட்டவனுக்குத் தான் தெரியும்
கையில் பட்டது சுடுநீரென...
உணர்ந்தவனுக்குத் தான் தெரியும்
தோலைத் தீண்டுவது குளிரென...
இப்படி - நீ
பட்டறிந்ததை வைத்திருந்தால்
சட்டெனச் சொல்ல எழும்
உண்மையை
அப்படியே எழுதிவிடு
அதுவே
நல்ல பாவாக(கவிதையாக) அமைந்து விடுமே!

Wednesday, January 16, 2013

யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்-003


எண்ணி எண்ணி
எத்தனையோ
எழுத்துக்கள் இருப்பினும்
சுட்டெழுத்துக்கள் இல்லாத
பேச்சு மொழியும் உண்டோ!
பொருளையோ ஆளையோ
சுட்டிக்கூற உதவும்
அ, இ, உ ஆகிய மூன்றும்
சுட்டெழுத்துக்களாம்!
அவன், இவள், உது என
சொல்லொடு சேர்ந்து நின்று
பிரிக்க முடியாத நிலையில் நிற்பது
அகச் சுட்டு ஆகுமே!
அம் மனிதன், இவ் வீடு, உப் பையன் என
சொல்லிலிருந்து
பிரிந்து நின்று சுட்டுவது
புறச் சுட்டு ஆகுமே!
இவன், இவள், இது என
அண்மையில் இருப்பதைச் சுட்டுவது
அண்மைச் சுட்டு ஆகுமே!
உவன், உவள், உது என
அண்மைக்கும் சேய்மைக்கும்
இடையில் உள்ளதைச் சுட்டுவது
இடைமைச் சுட்டு ஆகுமே!
அவன், அவள், அது என
சேய்மையில் இருப்பதைச் சுட்டுவது
சேய்மைச் சுட்டு ஆகுமே!
சுட்டெழுத்தால்
சுட்டிச் சொன்னாலும்
கேட்பதற்கு உதவும்
எ, யா, ஆ, ஓ, ஏ என்பன
வினா (கேள்வி) எழுத்துக்களாம்!
'எ' எனும் உயிரும்
'யா' எனும் உயிர்மெய்யும்
சொல்லின் முதலெழுத்தாய் வர
'ஆ', 'ஓ' ஆகிய உயிர்கள்
சொல்லின் ஈற்றெழுத்தாய் வர
'ஏ' எனும் உயிர்
ஏது? இவனே? என
சொல்லின் முன்னும் ஈற்றாகவும் வருமே!
எவன்?, எவள்? என்றவாறு
சொல்லுடன் சேர்ந்து நிற்பது
அகவினா ஆகுமே!
எப் பொருள்?, எம் மனிதன் என்றவாறு
சொல்லுக்கு வெளியே நிற்பது
புறவினா ஆகுமே!
மொழியின் முதல் பேச்சே
பேச்சின் முதல் சொல்லே
சொல்லின் முதல் வருவதே
மொழிமுதல் எழுத்தாம்!
பன்னிரு உயிரும்
க், ச், த், ந், ப், ம், வ், ய், ஞ் எனும்
உயிரேறிய ஒன்பது மெய்யும்
மொழிமுதல் வரும் எழுத்தாம்!
ஞமலி, ஞாலம், ஞெகிழி, ஞொள்கல் என
ஞகரம் நான்கு உயிரோடும்
யகரம் ஆறு உயிரோடும்
வகரம் எட்டு உயிரோடும்
எஞ்சிய
ககரம், சகரம், தகரம், நகரம், பகரம், மகரம் ஆகிய
ஆறும் பன்னிரு உயிரோடும்
மொழிக்கு முதல் வருமாம்!
மொழிமுதல் எழுத்தைப் போல
சொல்லின் ஈற்றெழுத்தே
மொழியீற்று எழுத்தாகும்!
மொழி விளங்காமைக்கு
சொல்லின் இறுதி எழுத்து
உறுத்தப்படாமையோ
விழுங்கப்படுதலோ
அதாவது
உச்சரிக்கப்படாமையோ
காரணம் ஆகுமே!
எகரம் ஒழிந்த (சேராது)
பதினொருயிர்களும்
க், ங், ச், ட், த், ப், ற் ஆகிய
ஏழு மெய்களும் ஒழிந்த (சேராது)
எஞ்சிய மெய் எழுத்துக்களுமாக
இருபத்திரண்டு
மொழியீற்று எழுத்துக்கள் உண்டாம்!
தமிழில், யாப்பில்
எழுத்துக்களைக் கணக்கிடுதல்
தமிழ் நெடுங்கணக்கு என்பர்!
இந்தக் கணக்கையும் உச்சி
முந்திக் கொள்கிறது
மூன்று போலி எழுத்துக்களாம்!
மஞ்சு என்றால் மேகம்
'மஞ்சு' என்பதற்குப் பதிலாக
'மைஞ்சு' என எழுதியதால்
'ம' இற்குப் பதிலாக 'மை' வந்தமை
அதுவும்
சொல்லின் முதலில் வந்தமை
என்பதாலே
'மை' என்பது முதற்போலியாம்!
இவ்வாறே பார்த்தால்
'அமச்சு' என்பதற்குப் பதிலாக
'அமைச்சு' என எழுதினால்
'ம' இற்குப் பதிலாக 'மை' வரலாம்
அதுவும்
மொழி முதலாகவோ
மொழியீறாகவோ வராமல்
இடையெழுத்தாக
'மை' வந்தமை இடைப்போலியாம்!
'சுடுகலன்' என்பதை
'சுடுகலம்' என எழுதுகையில்
'ன்' இற்குப் பதிலாக 'ம்' வருதலும்
அதுவும்
மொழியீறாக வருதலும் கடைப்போலியாம்!
போலி எழுத்துக்கள்
ஒரு போதும்
சொல்லின் பொருளை மாற்றாதே!
பா புனைந்தாலும்
பா வரிகளை இனிக்கச் சுவைக்க
எதுகை, மோனை துணைக்கு வருமே!
எதுகை, மோனைக்கு
இசைவான எழுத்து அமையாத போது
எழுத்துக்களின் இன எழுத்தையே
நாடவேண்டி வருகிறதே
உயிர்க்குறிலுக்கு
முறையாக அமையும்
உயிர் நெடில் இனமாகுமென
முன்னர் பார்த்தோம்!
உண்மையில்
எழுத்துக்களை உச்சரிக்கையில்
ஒலியின் பிறப்பிடம்
ஒலிக்கும் முயற்சி
ஒலிக்கும் கால அளவு
எழுத்தின் வடிவம் எல்லாம்
இனவெழுத்துக்களை
அடையாளப் படுத்துகின்றனவே!
உயிர் எழுத்துக்களில்
'அ' இற்கு
அ, ஆ, ஐ, ஓள இனமாக
'இ' இற்கு
இ, ஈ, எ, ஏ இனமாக
'உ' இற்கு
உ, ஊ, ஒ, ஓ இனமாக
'எ' இற்கு
எ, ஏ, இ, ஈ இனமாக
'ஐ' இற்கு
ஐ, அ, ஆ, ஓள இனமாக
'ஒ' இற்கு
ஒ, ஓ, உ, ஊ இனமாக
'ஓள' இற்கு
ஓள, அ, ஆ, ஐ இனமாக
அமையுமெனப் பார்க்கலாம்!
உயிர்மெய் எழுத்துகளில்
உயிருக்கு அமைவது போல
'க' இற்கு
க, கா, கை, கௌ இனமாக
'கி' இற்கு
கி, கீ, கெ, கே இனமாக
'கு' இற்கு
கு, கூ, கொ, கோ இனமாக
'கெ' இற்கு
கெ, கே, கி, கீ இனமாக
'கை' இற்கு
கை, க, கா, கௌ இனமாக
'கொ' இற்கு
கொ, கோ, கு, கூ இனமாக
'கௌ' இற்கு
கௌ, க, கா, கை இனமாக
அமையுமெனப் பார்க்கலாம்!
எழுத்துக்கள் தமக்குள்ளே
சுற்றிச் சுற்றி வந்தாலும்
குறிலுக்கு முறையாக அமையும்
நெடிலை இனமாக ஏற்று
பா புனையலாம் தானே!
பா புனையப் போகையிலே
அது, அஃது, ஒரு, ஓர் என
வேறுபடும் எழுத்துகளோடு
பாவோசையில் மாற்றம் தரும்
எழுத்துக்களாக அளபெடையும்
பார்த்துத் தானே போகவேணும்!
(தொடரும்)


முன்னையதைப் பார்க்க
http://paapunaya.blogspot.com/2013/01/002.html

Friday, January 11, 2013

இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்




தமிழுக்கு முதல் நாள்
தமிழாண்டுக்கு முதல் நாள்
தைத்திருநாள் பொங்கல் நாள்
பகலவன் ஒளிபட
பகலவனுக்கே படைத்துண்ணும் நாள்
தைப்பொங்கல் நாளில்
நல் எதிர்காலம் ஒளிர
சின்னப் பொடியன்
உங்கள் யாழ்பாவாணன் சிந்தும்
தைப்பொங்கல் வாழ்த்துகள்!

உலகெங்கும்
பா புனைந்து தமிழ் பரப்பும்
பாவலர்களுக்கும்
உலகெங்கும் தமிழ் பரப்ப
பா புனைய விரும்பும்
உறவுகளுக்கும்
எழுதுகோல் ஏந்தியே
உலகெங்கும் தமிழ் பரப்பும்
எழுத்தாளர்களுக்கும்
உலகெங்கும் தமிழ் பரப்ப
முழுமூச்சோடு இயங்கும்
தமிழ் உறவுகளுக்கும்
என்
இலக்கிய நட்புகளுக்கும்
எனது
தைப்பொங்கல் வாழ்த்துகள்!

இவ்வண்ணம்
உங்கள் யாழ்பாவாணன்
web: http://www.yarlpavanan.tk
email: yarlpavanan@hotmail.com

யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்-002

"எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்" என்பது
புலவர் ஓளவை அம்மா கூற்று!
எழுத்து உறுப்பிலே வரும்
எழுத்துக்களை வைத்துத் தான்
அசை உறுப்பைப் பார்க்கலாம்!
பாவினம் உறுப்பு ஒன்றிலே
எழுத்தெண்ணிப் பாவடிகளை
அமைக்கும் நிலையும் உண்டு!
யாப்பறிந்து பாபுனைகையிலே
எண்ணும் எழுத்தும்
கண்ணெனக் கருதுக...
பேச்சுக்கு முதல் வரும் ஒலியே
எழுத்து!
ஒலிக்கும் எழுத்தின்
ஒலியளவை வைத்தே
குறிலும் நெடிலும் வந்தாயிற்று!
எழுத்தொலியை அளக்க
"மாத்திரை" என்ற அலகுண்டு!
கண்ணிமைப் பொழுதோ
கைநொடிப் பொழுதோ
ஒரு மாத்திரையாம்!
குறுகிய ஒலியினை உடைய
, , , , ஒ என்பனவாம்
குறில் எழுத்துக்கள்!
நீண்ட ஒலியினை உடைய
, , , , , , ஔ என்பனவாம்
நெடில் எழுத்துக்கள்!
குறிலும் நெடிலும் இணைந்து முறையே
, , , , , , , , , , , ஔ ஆகிய
பன்னிரண்டும் உயிரெழுத்தாம்!
உயிரெழுத்துடனும்
மெய்யெழுத்துடனும்
இணையும் தனியெழுத்தே
உயிருக்கு அடுத்து வரும்
"" தான் ஆயுத (கருவி) எழுத்து!
"அய்யோ" என்பது சரியா
"ஐயோ" என்பது சரியா
"அவ்வை" என்பது சரியா
"ஓளவை" என்பது சரியா
தலையைப் பிய்க்கிற கேள்வி தான்!
தலையை உடைச்சுப் போடாதையும்...
இன உயிர் எழுத்துக்களை
- இனம் -
- இனம் -
- இனம் -
- இனம் -
- இனம் -
என்றவாறே
ஒரு நெட்டுக்கு ஒரு குறில்
இனமெனப் பார்த்தாலும்
'' இற்கும் '' இற்கும் இனமாக்க
குறில் ஒன்றுமில்லையே!
எப்படியோ
- இனம் -
- இனம் -
என்றும் ஏற்கப்பட்டாலும்
, உ ஆகிய குறில்கள்
இரண்டு நெட்டுக்கு இனமாவது எப்படி?
குறில் இன்றி
நெட்டெழுத்துத் தோன்ற
வாய்ப்பில்லையே!
கணப்பொழுது சிந்திக்கையில்
சுணக்கமின்றி
மூளை வேலை செய்தது...
+=அய் எனலாம்
+=அவ் எனலாம்
அடேங்கப்பா
இந்த 'அய்' தான் அந்த ''
இந்த 'அவ்' தான் அந்த ''
இப்ப ஒன்று மட்டும் புரியுது
'அய்' - கூட்டெழுத்து - ''
'அவ்' - கூட்டெழுத்து - ''
என்று தான் அமைந்திருக்கும்!
எழுத்துக்கு "ஐயோ"
யாப்பிற்கு "அய்யோ"
எழுத்துக்கு "ஓளவை"
யாப்பிற்கு "அவ்வை"
என்று தான்
யாப்பிலக்கணத்தில் பார்க்கமுடிகிறது!
நெட்டெழுத்தாக ஐ, ஔ ஆகிய
இரண்டையும் பாவிக்கலாம்...
இல்லாட்டிப் பாரும்
'அய்', 'அவ்' ஆகிய இரண்டையும்
கூட்டெழுத்தாகவும் பாவிக்கலாம்!
மனிதரின்
ஒலியுணர்வே
உயிரெழுத்தாயின்
உயிரின்றி இயங்காத
மனித உடலைப் போன்றதே
மெய் எழுத்துக்கள்!
மெய்யை உச்சரிக்கக்கூட
உயிரை இணைக்க வேண்டியிருக்கே...
'இக்', 'இங்', 'இச்', 'இஞ்',... என
உயிரைச் சேர்த்தே
மெய்யை வாயால் சொல்ல முடிகிறதே!
வல்லின ஒலியன்களான
க், ச், ட், த், ப், ற் என்பன
வல்லின மெய் எழுத்தாம்...
மெல்லின ஒலியன்களான
ங், ஞ், ண், ந், ம், ன் என்பன
மெல்லின மெய் எழுத்தாம்...
வல்லின ஒலிக்கும்
மெல்லின ஒலிக்கும்
இடைப்பட்ட ஒலியன்களான
ய், ர், ல், வ், ழ், ள் என்பன
இடையின மெய் எழுத்தாம்...
எழுத்தொழுங்கில்
எடுத்துச் சொல்லும் போது
க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம்,
ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் என்பன
மெய்யெழுத்து ஒழுங்காம்!
இன்னும் கொஞ்சம் போனால்
மெய்யோடு உயிரைச் செர்க்கையிலே
க் + = ; க் + = கா; க் + = கி; க் + = கீ;
க் + = கு; க் + = கூ; க் + = கெ ; க் + = கே;
க் + = கை; க் + = கொ; க் + = கோ; க் + = கௌ என
உயர், மெய் எழுத்துக்கள் ஆகலாம்!
கொஞ்சம் நில்லுங்கோ - இங்கு
மெய்யோடு;
உயர்க் குறில் இணையும் வேளை
உயர் மெய் குறிலும்
உயர் நெடில் இணையும் வேளை
உயர் மெய் நெடிலும்
தோன்றுவதைக் காண்பீரே!
அட! இங்கேயும் தான்...
"கய்யோ" என்பது சரியா
"கையோ" என்பது சரியா
"கவ்வை" என்பது சரியா
"கௌவை" என்பது சரியா
உயிரெழுத்தைப் படித்ததும்
இந்த 'கய்' தான் அந்த 'கை'
இந்த 'கவ்' தான் அந்த 'கௌ'
என்றவாறே
கூட்டெழுத்து, தனியெழுத்து
சிக்கல் தீர்ந்தததே!
மெய்  எழுத்துக்களில்
வல்லின மெய்களுக்கு முறையே
மெல்லின மெய்கள் இனமாயினும்
இடையின மெய்களுக்கு
இன எழுத்துக்கள் இல்லையே!
பேச்சுக்கு முதல் வரும்
ஒலியன்களான
உயர், ஆயுதம், மெய், உயர் மெய்,
குறில், நெடில், இன எழுத்து, கூட்டெழுத்து
என்றெல்லாம் அடுக்கி வர
சுட்டெழுத்து, வினா எழுத்து,
மொழி முதல் எழுத்து, மொழியீற்று எழுத்து
என்றெல்லாம் நீளுகிறதே!
(தொடரும்)

 முன்னையதைப் பார்க்க

புதிய பாவலர்களே!(கவிஞர்களே!)


புதிய பாவலர்களே!(கவிஞர்களே!)
நீங்கள்
கவிதை எழுதும் போது;
கவிதை வரிகளை
ஒடித்து முறித்து எழுதுவதைப் பார்க்கிறேன்.

"எடுத்துக்காட்டாக
கொதிக்கும் வெயிலில் நடந்து
கொண்டு தண்ணீருக்கும்
அலைந்து
கொண்டே நானும்
அக்கரைக்குப் போறேனே!"

இதனைப் பார்த்தால்
கவிதை இல்லை என்றே சொல்லலாம்.
ஒடித்து முறித்த வரிகளை
ஒரே வரியாக ஒழுங்குபடுத்தினால்
சிறந்த உரைநடையாகக் கருதமுடியும்.
பாவா(கவிதையா)க இதனை மாற்ற முயல்வோமே...

"கொதிக்கும் வெயிலில் நடந்து கொண்டு
தண்ணீருக்கும் அலைந்து கொண்டே
நானும்
அக்கரைக்குப் போறேனே!"

சொற்களை மாற்றாமல்
வரிகளில் மாற்றம் செய்ததும்
கவிதையாக மாறிய நுட்பம் என்ன?
ஆமாம்,
ஒவ்வொரு வரியிலும் உணர்வு முட்டுகிறதே!
அதாவது,
ஒவ்வொரு வரியிலும் ஒரு வீச்சு
அல்லது
வெளிப்படுத்தும் ஒரு செயல் தென்படுகிறதே!
புதிய பாவலர்களே!(கவிஞர்களே!)
உங்கள் கவிதைகளில் - இந்த
நுட்பத்தைக் கையாளுங்களேன்!

உங்கள் பா(கவிதை)
மேலும் சிறக்க...
நீங்கள்
எதுகை, மோனை வரக் கவிதை ஆக்கலாமே!
இரண்டு சீரின்(சொல்லின்) முதலெழுத்து
ஒரே எழுத்தாகவோ அதற்கொத்த இனவெழுத்தாகவோ
பொருந்தி வருதல் மோனை ஆகுமே!

எடுத்துக்காட்டாக
'மல்லிகாவின் மூக்கில் மின்னியது மூக்குமின்னியே!'
இவ்வடியில் "ம்" குடும்ப எழுத்துகள்
ஒவ்வொரு சீரின்(சொல்லின்) முதலெழுத்தாக அமைந்து
மோனையாக வந்துள்ளதே!

இரண்டு சீரின்(சொல்லின்) இரண்டாம் எழுத்து
ஒரே எழுத்தாகவோ அதற்கொத்த இனவெழுத்தாகவோ
பொருந்தி வருதல் எதுகை ஆகுமே!
எடுத்துக்காட்டாக
'படித்து முடித்தால் மீட்டுப்பார்!'
இவ்வடியில்
படித்து, முடித்தால் ஆகிய சீர்களில்(சொல்களில்
குறிலடுத்து 'டி' அமைந்து எதுகையாக வந்துள்ளதே!
குறிலடுத்து அல்லது நெடிலடுத்து
எதுகை அமைதலே சிறப்பாகுமே!

எதுகை, மோனை வைத்து
புதுக்கவிதை ஒன்று எழுதுவோமா?
அப்படியாயின்
ஒரு சூழலை நினைவில் மீட்போம்...
ஓராண்
ஒரு பெண்ணை
உள்ளத்தில் நினைத்ததும் - அவன்
எண்ணத்தில் தோன்றிய
பாவை(கவிதையை)ப் பாருமிங்கே...

"அன்பே! அழகே!
என்னைப் பார்த்ததும்
என்ன நினைத்தாயோ
எனக்குத் தெரியாது - ஆனால்
உனக்குத் தெரியாமலே
உன்னை நான் விரும்புகிறேன்...
உன்னால் முடிந்தால் - நீ
என்னை விரும்புவாயா!"

புதிய பாவலர்களே!(கவிஞர்களே!)
இனிவரும் காலங்களில்
நீங்கள் கவிதை வரிகளை
ஒடித்து முறித்து எழுதாமல்
உணர்வைச் சுட்டும்; செயலை வெளிப்படுத்தும்;
வீச்சான வரிகளாக எழுதுங்களேன்!

பொருத்தமான இடத்தில்
எதுகை, மோனை பாவிக்கலாமே...
எதுகை, மோனை பாவிக்கையில்
கவிதைக்கு ஓசை நயம் பிறக்குமே!
புதிய பாவலர்களே!(கவிஞர்களே!)
தங்கள் பாக்(கவிதை)களில் காணப்படும்
சிறு தவறுகளைத் திருத்தினால் கூட
பா(கவிதை) உலகில்
உங்களை வெல்ல எவர் வருவார்.