Sunday, April 28, 2013

யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்-008


வேற்றுமையும்
சொற்புணர்ச்சியும்
மிகும் இடமும்
சந்திப்தைப் பாரும்!
எடுத்துக்காட்டாக
உறிக்கண் + தயிர் = உறிக்கட்டயிர்
என்றவாறே
நின்ற சொல் 'ண்'; 'ட்' ஆகவும்
வந்த சொல் 'த'; 'ட' ஆகவும்
திரிந்தே
ஏழாம் வேற்றுமை விரியில்
சில இடங்களில் வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
பனை + தோள் = பனைத்தோள்
(பனையைப் போன்ற தோள்)
என்றவாறு பார்த்தால்
உவமைத் தொகையிலும்
வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாகப் பாரும்
நாய் + கால் = நாய்க்கால்(நாயினது கால்)
காவிரி + கரை = காவிரிக்கரை(காவிரியினது கரை)
என்றமைவதனால்
ஆறாம் வேற்றுமைத் தொகையில்
நின்ற சொல் அஃறிணையாயின்
வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
பழம் + கடை = பழக்கடை
(பழத்தை உடைய கடை)
(நின்ற ஈற்று மகரம் கெட
'பழ' என்பதில் அகரம் தோன்ற
வந்த வல்லினம் மிகுந்ததே!)
கஞ்சி + தொட்டி = கஞ்சித்தொட்டி
(கஞ்சியை ஊற்றி வைத்திருக்கும் தொட்டி)
ஆகிய இரண்டிலுமே
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும்
உடன் தொக்க தொகையில்
வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
மரம் + பிடி = மரப் பிடி(மரத்தாலான பிடி)
காகிதம் + புத்தகம் = காகிதப்புத்தகம்(காகிதத்தாலான புத்தகம்)
இரும்பு + பெட்டி = இரும்புப்பெட்டி
(இரும்பாற் செய்த பெட்டி)
ஆகிய மூன்றிலுமே
மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும்
உடன் தொக்க தொகையில்
வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
ஆடு + தழை = ஆட்டுத்தழை
(ஆட்டுக்குத் தேவையான தழை)
மாடு + தண்ணீர் = மாட்டுத்தண்ணீர்
(மாட்டுக்குத் தேவையான தண்ணீர்)
ஆகிய இரண்டிலும் பாரும்
(நெடிற்றொடர் குற்றியலுகரச் சொல்லோடு
நான்காம் வேற்றுமை 'கு' உருபு
புணரும் வேளையே 'உ'கரம் இரட்டித்தது)
நான்காம் வேற்றுமை உருபும் பயனும்
உடன் தொக்க தொகையில்
வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
தொழில் + கூட்டு = தொழிற்கூட்டு
கால் + கட்டு = காற்கட்டு
ஆகிய இரண்டிலுமே
(லகரம் றகரமாகத் திரிந்ததே)
தொழிலில் கூட்டு, காலில் கட்டு என
ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும்
உடன் தொக்க தொகையில்
வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
வீட்டில் + கற்கண்டு = வீட்டிற்கற்கண்டு
தலைநகர் + தமிழ்ச்சங்கம் = தலைநகர்த் தமிழ்ச்சங்கம்
ஆகிய இரண்டிலும்
வீட்டின் கண், தலைநகரின் கண் என
ஏழாம் வேற்றுமை உருபும் பயனும்
உடன் தொக்க தொகையில்
வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
சாரை + பாம்பு = சாரைப்பாம்பு
முருங்கை + காய் = முருங்கைக்காய்
என்பதில் பாரும்
சிறப்புப் பெயரை அடுத்து
பொதுப் பெயர் வந்து நிற்க
இரு பெயரொட்டுப் பண்புத் தொகையில்
வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
தீ + பிடித்தது = தீப்பிடித்தது
கா + குயில் = காக்குயில்(சோலைக்குயில்)
நா + குளறியது = நாக்குளறியது
பா + போட்டி = பாப்போட்டி
என்றாறு பார்த்தால்
ஓரெழுத்தொரு மொழியாகிய
நெடிலெழுத்தை அடுத்து வரும்
வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
தீரா + துன்பம் = தீராத்துன்பம்(தீராத துன்பம்)
அறியா + காளை = அறியாக்காளை(அறியாத காளை)
என்று வந்து சேரும்
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தினை
அடுத்து வரும் வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
விள + குறிது = விளக் குறிது(அ)
பலா + காய் = பலாக் காய்(ஆ)
கிளி + சிறை = கிளிச் சிறை(இ)
என்றவாறு அமைய
உயிரெழுத்துக்களை அடுத்து வரும்
வல்லினம் மிகும் ஆயினும்
ஈற்றெழுத்தாக எகரம் வராமையால்
அளபெடையாக(சேஎ) ஈற்றில் வர
'எ' உடனும் வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
தர + சொன்னான் = தரச் சொன்னான்(அ)
ஓடி + போனான் = ஓடிப் போனான்(இ)
என்று அகர, இகர ஈற்று
வினையெச்சத்தினை அடுத்து வரும்
வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
இருப்பதாய் + சொன்னான் = இருப்பதாய்ச் சொன்னான்(ஆய்)
போய் + கொண்டுவந்தான் =போய்க் கொண்டுவந்தான்(போய்)
கொடுப்பதாக + கூறினான் = கொடுப்பதாகக் கூறினான்(ஆக)
என்பதில் பாரும்
ஆய், போய், ஆக என்னும்
வினையெச்சச் சொல்களை அடுத்து வரும்
வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
அன்றி + சொல்லமாட்டேன் = அன்றிச் சொல்லமாட்டேன்
இன்றி + கொடுக்கமாட்டேன் = இன்றிக் கொடுக்கமாட்டேன்
என்றவாறு
அன்றி, இன்றி என்னும்
இகர ஈற்று வினைக்குறிப்புச் சொல்களை
அடுத்து வரும் வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
குரங்கு + கூட்டம் = குரங்குக் கூட்டம்
மருந்து + கடை = மருந்துக் கடை
என்றவாறு
மென்றொடர்க் குற்றியலுகரச் சொல்களை
அடுத்து வரும் வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
பேச்சு + பேசினான் = பேச்சுப் பேசினான்
விற்று + பெருக்கினான் = விற்றுப் பெருக்கினான்
என்றவாறு
வன்றொடர்க் குற்றியலுகரச் சொல்களை
அடுத்து வரும் வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
பொது + கூட்டம் = பொதுக் கூட்டம்
முழு + பக்கம் = முழுப் பக்கம்
என்றவாறு
முற்றியலுகரச் சொல்களை
அடுத்து வரும் வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
வேலி + கம்பி = வேலிக்கம்பி(வேலிக்குக் கம்பி)
நாக்கு + சுவை = நாக்குச்சுவை(நாக்குக்குச் சுவை)
என்றவாறு
நான்காம் வேற்றுமைத் தொகையில்
வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
ஆட்டு + கால் =ஆட்டுக்கால்(ஆட்டினது + கால்)
வண்டி + சக்கரம் = வண்டிச் சக்கரம்(வண்டியினது சக்கரம்)
என்றவாறு
ஆறாம் வேற்றுமைத் தொகையில்
நிலைமொழி அஃறிணையாயின்
வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
வீடு + கதவு = வீட்டிற் கதவு(வீட்டின் கண் கதவு)
நாடு + கலகம் = நாட்டிற் கலகம்(நாட்டின் கண் கலகம்)
என்றவாறு
ஏழாம் வேற்றுமைத் தொகையில்
வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
வினா + தாள் = வினாத் தாள்
பலா + சுளை = பலாச் சுளை
என்றவாறு
தனிக்குற்றெழுத்தை அடுத்துள்ள
ஆகாரத்தை
அடுத்து வரும் வல்லினம் மிகுமே!
தனிச் சொல்லில் கூட
'ய்', 'ர்', 'ழ்' ஆகிய
மும்மெய்களைத் தொடர்ந்து வரும்
வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
பொய்த்தது, பார்க்கிறது, வாழ்க்கை
என்பவற்றைக் கூறலாமே!
நின்ற சொல்லின் ஈற்றில் 'ன்' இருந்து
வரும் சொல்லின் முதலெழுத்து
வல்லினமாக இருந்தால் பாரும்
"பொன் + செல்வி = பொற்செல்வி" என
புணரும் வேளை 'ன்' ஆனது 'ற்' ஆக மாறுமே!
நின்ற சொல்லின் ஈற்றில் 'ல்' இருந்து
வரும் சொல்லின் முதலெழுத்து
வல்லினமாக இருந்தால் பாரும்
"பல் + பொடி = பற்பொடி" என
புணரும் வேளை 'ல்' ஆனது 'ற்' ஆக மாறுமே!
நின்ற சொல்லின் ஈற்றில்
'ன்'-னும் 'ல்'-லும் இருந்து
வரும் சொல்லின் முதலெழுத்து
வல்லினம் 'த'-வாக இருந்தால்
"பொன் + தகடு = பொற்றகடு
கல் + தட்டை = கற்றட்டை" என
'ன்'-னும் 'ல்'-லும் 'ற்' ஆக மாறியும்
வந்த தகரம்(த) றகரமாக(ற)த் திரியுமே!
நின்ற சொல்லின் ஈற்றில் 'ண்' இருந்து
வரும் சொல்லின் முதலெழுத்து
வல்லினமாகவும் இருந்தால்
"மண் + பானை = மட்பானை" என
ணகரம்(ண) டகரமாக(ட)த் திரியுமே!
நின்ற சொல்லின் ஈற்றில் 'ள்' இருந்து
வரும் சொல்லின் முதலெழுத்து
வல்லினமாகவும் இருந்தால்
"உள் + சிறந்தது = உட்சிறந்தது" என
ளகரம்(ள) டகரமாக(ட)த் திரியுமே!
நின்ற சொல்லின் ஈற்றில்
'ண்'-ணும் 'ள்'-ளும் இருந்து
வரும் சொல்லின் முதலெழுத்து
வல்லினம் 'த'-வாக இருந்தால்
"கண் + திறந்தது = கட்டிறந்தது
வாள் + தடித்தது = வாட்டடித்தது" என
'ண்'-ணும் 'ள்'-ளும் 'ட்' ஆக மாறியும்
வந்த தகரம்(த) டகரமாக(ட)த் திரியுமே!
இரு குறில் இணைந்து வரும்
அஃறிணைப் பன்மைச் சொல்லிலும்
தனி எழுத்திலான நெடிற் சொல்லிலும்
பன்மை விகுதியாகிய 'கள்' சேரும் வேளை
வல்லினம் மிகுவதைப் பாரும்!
எடுத்துக்காட்டாக
புளு + கள் = புளுக்கள்
கொசு + கள் = கொசுக்கள்
புறா + கள் = புறாக்கள்
சுறா + கள் = சுறாக்கள்
ஆ + கள் = ஆக்கள்(பசுக்கள்)
நா + கள் = நாக்கள்(நாக்குஏகள்)
சே + கள் = சேக்கள்(எருதுகள்)
ஏ + கள் = ஏக்கள்(அம்புகள்)
என்பவற்றைக் கூறினாலும் கூட
ஒரு பிழை இருக்கக் கண்டியளே!
"இரு குறில் இணைந்து வரும்
அஃறிணைப் பன்மைச் சொல்கள்"
என்பதற்குப் பதிலாக
"குறிலில் தொடங்கும் ஈரெழுத்து
அஃறிணைப் பன்மைச் சொல்கள்" என்றால்
எடுத்துக்காட்டு எடுப்பாக இருக்குமே!
வல்லினம் மிகும்
இடங்களைப் பார்த்தாச்சு - ஆயினும்
வல்லினம் மிகா இடங்களை
வரும் முறை பார்க்கலாம் தானே!
(தொடரும்)

முன்னையதைப் பார்க்க

எழுத்து


நான் கற்ற கல்வியால்
நான் புகழ் ஈட்டியதில்லை...
நான் செய்த பணியா(தொழிலா)ல்
நான் புகழ் ஈட்டியதில்லை...
நான் பழகிய ஆண் நட்பால்
நான் புகழ் ஈட்டியதில்லை...
நான் பழகிய பெண் நட்பால்
நான் புகழ் ஈட்டியதில்லை...
நான் ஈடுபட்ட எதனாலும்
நான் புகழ் ஈட்டியதில்லை...
ஆனால்,
நான்
என் எழுத்தால் அல்லவா
உலகெங்கிலும் இருந்து
புகழ் வந்து சேர வாழ்கின்றேன்!
வெற்றுத்தாளில்
வெறும் எழுதுகோலைத் தேய்த்து
என்ன தான் எழுதினாலும்
புகழ் வந்து சேருமென
எண்ணிவிட முடியாது தான்!
எழுத்தை வாசிப்பவருக்கு;
மகிழ்வாகப் பொழுதுபோக்கவோ
வாசிக்கையில் களிப்படைவதற்கோ
அறிவினைப் பெருக்கவோ
ஊர்ச் செய்திகளை உவமையோடு அறியவோ
நாளைய நடப்புகளை எண்ணவோ
சிறந்த முடிவுகளை எடுக்கவோ
உதவும் எழுத்தாக இருப்பின்
புகழ் வந்து சேர வாய்ப்புண்டாம்!
நான்...
எழுத்தைப் பற்றி எழுதியளவுக்கு
என் எழுத்தில்
எதுவும் இருக்க வாய்ப்பில்லைத் தான்...
என்றாலும் பாருங்கோ
தமிழ்நண்பர்கள் தளத்திலுள்ள
என் பதிவுகளைக் கண்டு
என் எழுத்தை வாசிப்பவருக்கு
சில வேளை சிரிப்பும் வரலாம்...
வெற்றுத்தாளில்
வெறும் எழுதுகோலைத் தேய்த்து எழுதிய
எனது
கையெழுத்துப் பதிவைப் பார்த்தால்
வயிற்றைக் குமட்டிச் சத்தி வருமளவுக்கு
குப்பையாய் எழுதியிருப்பேன்...
எட்டாம் வகுப்பில படிக்கையிலே
கணக்குப் பதிவேட்டில
இரட்டைச் சிவப்புக் கோடுகளுக்குள்ளே
"குப்பை" என்று எழுதி
ஒப்பமிட்ட ஆசிரியர்
போதாக்குறைக்கு
நல்ல அடியும் போட்டதே
எழுத்தால்
நான் வேண்டிய முதற் பரிசு!
என்னவோ எப்படியோ
குப்பையாய் எழுதினாலும்
எழுத்து நடையில் அழகிருந்தால்
வாசிப்பவருக்கு
வாசிப்புப் பசி தீர்த்தால்
எழுத்தால் புகழ் ஈட்டலாமென
கணினியில் தட்டச்சுச் செய்தெல்லோ
இணையத் தளத்தில் பதிவிட
தொலை தூரத்து வாசகர்
குறும் செய்தியில் வாழ்த்துகின்றனரே!
எவரும் எழுதலாம்
எழுத்துக்குச் சக்தியுண்டு...
எழுதுவேன் எனத் துணிந்துவிட்டால்
எழுதுகோலும் துணைநிற்கும்...
கையெழுத்து
அழகில்லாது போனாலும்
சொல்லவேண்டிய செய்தியை
அழகான எழுத்து நடையில்
வெளிப்படுத்தினால்
உன் எழுத்துக்கு நிகர் வேறேது!

குறிப்பு: என்னை இணையத்தள இலக்கிய உலகிற்கு 'தமிழ்நண்பர்கள்' தளமே அறிமுகம் செய்தது.

பா(கவிதை) புனையும் போது...


புதுக்கவிதையாயினும் சரி
வரி(வசன) கவிதையாயினும் சரி
அடிகளை(வரிகளை) விரும்பியவாறு
நீட்டிமுடக்க முடியாதே!
ஒவ்வொரு அடிக்கும்
ஒவ்வொரு மூச்சிருக்கும்
அதன்படிக்கு
அடிகள்(வரிகள்) அமைத்து எழுதினாலே
கவிதை!
எடுத்துக்காட்டாகப் பாரும்
"பச்சடியும் பழஞ்சோறும் மனைவி குழைத்துத்தரத் தின்றேன்." என்றால் 
கட்டுரை வரி என்க...
"மனைவி குழைத்துத் தந்த 
பச்சடியும் பழஞ்சோறும் 
என் பசியைப் போக்கியதே!" என்றால் 
கவிதை என்பேன்!
"கட்டுரை வரியாக இருந்ததை
மனைவியின் செயல்
உண்ணும் உணவு
என்னில் நிகழ்ந்த மாற்றம்" என
ஒவ்வொரு அடியிலும் மூச்சிருக்க
அடிகளை(வரிகளை) 
நீட்டிமுடக்கியதாலே தான்
கவிதை ஆயிற்றே!
"மனைவி குழைத்துத் தந்த 
பச்சடியும் பழஞ்சோறும் 
என் பசியைப் போக்கியதே!" என்றால் 
புதுக்கவிதை!
"பச்சடியும் பழஞ்சோறும் மனைவி குழைத்துத் தந்ததும் என் பசியும் அடங்கியது." என்றால் 
வரி(வசன)க் கவிதை!
நண்பர்களே!
எழுதும் போது 
கட்டுரை வரிகளாகத் தலை நீட்டாத
உணர்வுள்ள, மூச்சுள்ள வரிகளாக
பா(கவிதை) புனையுங்களேன்!

கலைஞர்கள் மக்களாய(சமூக)த்தின் கண்ணாடி



நம்மாளுகள்(மனிதர்கள்)
வாழ்க்கையின் கண்ணாடி!
காலங்கள்
வரலாற்றின் கண்ணாடி!
கலைஞர்கள்
மக்களாய(சமூக)த்தின் கண்ணாடி!
நிகழ்வுகள்
சான்றுகளின் கண்ணாடி!

"சான்றுகள்" என்ற தலைப்பில் நான் எழுதிய பாவிது. ஈழப்போரில் எரிந்துபோன பல நூறு படைப்புகளில் இதுவும் ஒன்று. இப் பா(கவிதை) பற்றிய எனது எண்ணங்களை உங்களுடன் பகிர முனைகிறேன்.

நம்மாளுகள்(மனிதர்கள்)
வாழ்க்கையின் கண்ணாடி!

இவ்வரிகள் சொல்லுவதாவது; ஆணும் பெண்ணும் மணமுடித்து வாழ்ந்த வாழ்க்கையின் சான்றாகப் பிள்ளைகள்.

காலங்கள்
வரலாற்றின் கண்ணாடி!

இவ்வரிகள் சொல்லுவதாவது; நேற்று, இன்று, நாளை என்பது காலங்கள். ஆயினும், காலங்களை மீட்டால் கண்முன்னே வருவது கடந்தகால வரலாறு.

கலைஞர்கள்
மக்களாய(சமூக)த்தின் கண்ணாடி!

இவ்வரிகள் சொல்லுவதாவது;  எழுத்தாளர்கள், பாவலர்கள்(கவிஞர்கள்), நகைச்சுவையாளர்கள், நடிகர்கள் எனக் கலைகளை வெளிப்படுத்துவோர் கலைஞர்கள் என்றழைக்கப்படுகிறார்கள். கலைஞர்களின் வெளிப்பாடு புலம் சார்ந்து இருக்கும். அந்தப் புலம் தான் அவர்கள் வாழ்ந்த, வாழும் சூழல் அதாவது மக்களாய(சமூக)ம் என்று கூறலாம்.

நிகழ்வுகள்
சான்றுகளின் கண்ணாடி!

இவ்வரிகள் சொல்லுவதாவது; இயற்கை நிகழ்வுகள், நம்மவர் நடாத்தும் செயற்கை நிகழ்வுகள் யாவும் நிகழ்வுகளே! ஒவ்வொரு  நிகழ்விலும் நம்மாளுகள்(மனிதர்கள்), காலங்கள், கலைஞர்கள் இடம்பெறுவர். எனவே, எல்லாவற்றின் சான்றுகளும் இங்கே தான் பகிரப்படுகிறது.

எடுத்துக்காட்டாக பாவ(கவிய)ரங்க நிகழ்வில் நான் பா(கவிதை) பாடினேன். அந்நிகழ்விலே காசிராசலிங்கம் பரமேஸ்வரி இணையர்களின் மூத்தமகன் ஜீவலிங்கம். வடமொழியில ஜீவலிங்கம் தமிழில உயிரழகன், புனைபெயராக யாழ்பாவாணன் அவர்கள் பா(கவிதை) பாடுவாரென நிகழ்வின் தலைவர் அறிவித்தார்.

நானோ,
பாவ(கவிய)ரங்கச் சுவைஞர்களே!
சின்னப் பொடியன் - நான்
படிக்கும் பாவினைச் சுவைக்க முன்
2004 கடற்கோள்(Tsunami) என்பதே
என் தலைப்பென்று தொடங்கினேன்...
கடற்கோள்(Tsunami) வந்தது
மடக்கெனத் தன்வேலை முடித்துச் சென்றதே!
கடற்கோள்(Tsunami) என்னவென்று
சுடச்சுடச் சொல்வதற்காய்
ஆச்சியின் ஆச்சி படித்த
பூச்சிகள் அரித்துண்ட நூலில் இருப்பதாய்
உலகை ஆண்ட தமிழன்
கடைசியாக ஆண்ட மண்
பாண்டியன் ஆண்ட மண்
குமரிக்கண்ட(லெமூரியா-Lemuria Continent)த்தில்
ஒரே நிலப்பரப்பாயிருந்த
இந்தியாவையும் இலங்கையையும்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே
இரண்டு நிலப்பரப்பாக்கியதும் - இந்த
கடற்கோள்(Tsunami) தான் என்றறிவீரா?

இப்படிப் படித்து முடித்ததும் இத்தனை தலைவர்கள் இருந்தும் சொல்லாத செய்தியாக இந்திய-இலங்கைத் தமிழர் ஒரு தாய் பிள்ளைத் தொப்புள் கொடி உறவென்பதை சின்னக் கலைஞன் சொன்னதாக நிகழ்வின் தலைவர் கூறிமுடிக்கிறார்.

மேற்படி நிகழ்வின் சுருக்கப்படி "ஒரு கலைஞன் காலத்தின் கண்ணாடி" என்றும் கூறலாம். சிலர் கலைஞன் காலத்தின் கண்ணாடி என்றும் அழைக்கிறார்கள். வேறு சிலர் பாவலன்(கவிஞன்) காலத்தின் கண்ணாடி என்றும் அழைக்கிறார்கள்.

"கவிஞர்கள் காலத்தின் கண்ணாடி. அதனால் அவர்கள் நற்கருத்தைத் தான் கூறவேண்டும் என்பது என் இனிய வேண்டுகொள்." என்று நண்பர் ஒருவர் தெரிவித்தார். நானும் அவருக்கு "தங்கள் கருத்தை வரவேற்கிறேன். அதற்கு மாற்றுக் கருத்துக் கிடையாது." என்றும் பதிலளித்தேன். இந்தக் கருத்தாடலே இத்தனையும் என்னை எழுதத் தூண்டியது. நானோ 1987 இலிருந்து எழுதுகிறேன். நல்ல வழிகாட்டலை வெளிப்படுத்தவே நானும் எழுத்தைப் பாவிக்கிறேன்.

பாவலன்(கவிஞன்) காலத்தின் கண்ணாடி என்றால் நற்கருத்தைத் தான் கூறவேண்டும் என்றால் மேலே நான் பத்திரிகையில் பொறுக்கிப் பாவ(கவிய)ரங்க நிகழ்வில் பாடியது போன்று எழுதுவதா? இல்லவே இல்லை!

படைப்பு; படைப்பாக்கச் சூழலையும் அதற்கான தீர்வையோ வழிகாட்டுதலையோ கொண்டிருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக:

ஒரு மணி நேரம்
மகிழ்வாய் இருக்கலாம்
ஒரு நூறு போதுமென்று
உரசினாள் ஒருவள்!
உனக்கு
ஒரு நூறல்ல
பல நூறு தரலாம்
என் வீட்டு
வேலைக்காரியாகிவிடு!
எனக்கு
ஆறு பெட்டை ஆறு பொடியன்
மொத்தம் பன்னிரண்டையும்
நீ தான்
ஒழுக்கமாக வளர்த்துப் பேணி
பள்ளிக்கும் அனுப்ப வேண்டும்!
இன்றுடன்
தெருப் பொடியளுக்குப் பல்லைக் காட்டாமல்
என் வீட்டில்
வேலைக்குச் சேர்ந்து விடு
முப்பதாயிரம் கூலி தாறேனென்றதும்
வந்தவள் தான்
இன்று
எதிர் வீட்டில்
மருத்துவர் மனைவியாகி
இரண்டு பிள்ளைக்குத் தாயுமானாளே!

"விலைப்பெண்ணும் மருத்துவர் மனைவியானாள்" என்ற தலைப்பில் ஆக்கப்பட்ட பாவிது. விலைப்பெண்ணும் வேலை பெற்று, வீட்டாரின் பிள்ளைகளுடன் இணைந்து வீட்டில் படித்தாளோ, வருவாயைப் பெற்று வெளியில் படித்தாளோ மருத்துவர் மனைவியாகத் தகுதி பெற்றுவிட்டாளே! என எழுதியதின் படி நற்கருத்தைப் பாவலன் கூறுகிறார் எனலாம்.

ஆளுக்கொரு கொடி
ஆளுக்கொரு கட்சி
ஆளுக்கொரு இனமாகப் பிரிந்து வாழும்
தமிழா
அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு
என்றறிந்தால்
இன்றே தமிழனென்று ஒன்றுபடு!

இப் பாவிலும் "பிரிந்து தமக்குள்ளே மோதிக்கொள்ளும் தமிழரை ஒன்றுபடு" என அழைப்பதும் பாவலன் கூறும் நற்கருத்தே!

நண்பர்களே! "பாவலன்(கவிஞன்) காலத்தின் கண்ணாடி" என்பதை நான் ஏற்கமாட்டேன். என் அறிவிற்கெட்டியவரை "கலைஞர்கள் காலத்தின் கண்ணாடி" எனலாம். "கலைஞர்கள் மக்களாய(சமூக)த்தின் கண்ணாடி" என்றும் அழைக்கலாம். ஏனென்றால், பாவலன்(கவிஞன்) மட்டும் கலைத்திறனை வெளிப்படுத்துவதில்லையே! கலைத்திறனை வெளிப்படுத்தும் எல்லாத்துறைக் கலைஞர்களுக்கும்  நற்கருத்தை வெளிப்படுத்த வேண்டிய கடமையுள்ளதால்; "கலைஞர்கள் மக்களாய(சமூக)த்தின் கண்ணாடி" என உணர்ந்து நற்கருத்தும் நல்வழிகாட்டலும் உள்ள படைப்புகளை ஆக்கி வெளியிடுவீர்களென நம்புகிறேன்.

Thursday, April 18, 2013

தனி எழுத்தால் பா புனைவீரா?


எழுதுவோரெல்லோரும் எழுத்தில் பெரியோரா? இல்லை என்றாலும் எழுத்தாலே பெரியோரானனோரும் இருந்தும் உள்ளனரே! அப்படி ஒரு பெரியவர் தான் காளமேகப் புலவர் என்பேன். "கவி காளமேகத்தின் நாவில் கலைமகள் (சரஸ்வதி) குடியிருப்பதால் தான், எடுத்த எடுப்பிலே அடுத்த மணித்துளிக்குள் கொடுத்த தலைப்பிலே பா புனையும் திறன் அவருக்கிருந்தது." என்று நம்மூர் பெரியவர்கள் கூறுவர். அவர் சக்தியின் அருளைப் பெறப் பல பாக்களைப் பாடியும் உள்ளார்; சக்தியின் அருளைப் பெற்றுமுள்ளார். அது பற்றிப் பிற பதிவில் விளக்குகிறேன்.

காளமேகப் புலவர் பல போர்க்களங்களைக் கண்ட பா புனையும் போராளி என்பேன். அதாவது, அவரிடம் பல வேண்டுதல்களை முன்வைத்து அதற்கேற்பப் பா புனைய வலியுறுத்தியும் முடியாவிட்டால் ஒறுப்புத்(தண்டனை) தருவதாகவும் அவருக்கெதிராகப் பலர் போராடியுமிருந்தனர். காளமேகமோ எதற்கும் தயாரெனப் பா புனைந்து வெற்றியும் கண்ட போராளி என்பேன். அவரது வெற்றிக்குச் சக்தியின் அருள் காரணமல்ல, அவரது தமிழ்ப் புலமை தான் காரணம்.

காளமேகப் புலவர் தமிழெனும் கடலை நீந்திக் கடந்தவரென்று சொல்லுமளவுக்கு தமிழில் புலமை மிக்கவர் எனலாம். எந்தச் சொல்லையும் எப்படியும் அமையும் (போற்றுவதாய், தூற்றுவதாய், நன்மையாய், தீமையாய், உயர்வாய், இழிவாய்) வண்ணம் பா புனைவதில் வல்லவர். நகைச்சுவையாகவும் குத்தலாகவும் நையாண்டி செய்து பாப்புனையக் கூடியவர். அவரது சொல்லாட்சிக்கு நிகர் வேறு யாருமில்லை என்றே சொல்லலாம்.

நான்கு சீர் கொண்ட மூன்றடியும் மூன்று சீர் கொண்ட ஈற்றடியுமாகப் பன்னிரண்டு இராசிகளின் பெயரை வைத்து வெண்பா ஒன்று உங்களால் பாட முடியுமா? இதோ காளமேகப் புலவரின் வெண்பா ஒன்று. பன்னிரண்டு இராசிகளின் பெயரும் முறையும் தொகையும் அடைமொழி இல்லாமல் ஒரே வெண்பாவில் அமைத்துப் பாடிய பாவிது.

பகருங்கால் மேடம்இட பம்துனம் காக்க
டகம்சிங்கம், கன்னி, துலாம்,விர்ச் - சிகம்,த
நுசுமகரம், கும்பம்மீ னம்பன்னி ரண்டும்
வசையறும்இ ராசி வளம்.

காளமேகப் புலவரின் சொல்லாட்சிக்கு மேற்காணும் பாடலென்றால்; அவரின் எழுத்தாட்சிக்குக் கீழ்க் காணும் பாடல்களைப் பாரும். காளமேகப் புலவரைக் கண்ட எவரோ 'க' என்ற எழுத்து மட்டுமே கொண்டிருக்கப் பாடல் ஒன்று புனையுமாறு கேட்கக் கீழ்வரும் பாடலைப் புனைந்துள்ளார் என்றால் பாருங்களேன்.

காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க – கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா.

"(கூகை – ஆந்தை. காக்கையானது பகலில் கூகையை (ஆந்தையை) வெல்ல முடியும். கூகையானது இரவில் காக்கையை வெல்லமுடியும். கோ எனும் அரசன் பகைவரிடத்திலிருந்து தம் நாட்டை இரவில் ஆந்தையைப் போலவும், பகலில் காக்கையைப் போலவும் காக்கவேண்டும்.
எதிரியின் பலவீனமறிந்து, கொக்கு காத்திருப்பது போல தக்க நேரம் வரும் காத்திருந்து தாக்க வேண்டும். தகுதியற்ற காலம் எனில் தகுதியான அரசனுக்குக் கூட (கைக்கு ஐக்கு ஆகா) கையாலாகிவிடக்கூடும்." என்று அறிஞர் ஒருவர் இப்பாடலுக்கு அளித்த விளக்கத்தை இணையத் தளமொன்றில் பொறுக்கித் தங்களுடன் பகிருகிறேன்.

"என்ன காணும், காளமேகம் 'க' என்றதோட விட்டுவிட்டாரா?" என்று நீங்களும் கேட்கலாம். அது தான் அவரிடம் நடக்காதே! இப்படித்தான்  'த' என்ற எழுத்து மட்டுமே கொண்டிருக்கப் பாடல் ஒன்று புனையுமாறு கேட்கக் கீழ்வரும் பாடலைப் புனைந்துள்ளார் என்றால் பாருங்களேன்.

தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி
துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது?

"தத்தி தாவி பூவிலிருக்கும் தாதுவாகிய மகரந்தத் தூளை திண்ணும் வண்டே, ஒரு பூவினுள் உள்ள தாதுவை உண்ட பின் மீண்டும் ஒரு பூவினுக்குள் சென்று தாதெடுத்து உண்ணுகிறாய், உனக்கு (எத்தாது) எந்தப் பூவிலுள்ள தேன் (இனித்தது) தித்தித்தது?)" என்று அறிஞர் ஒருவர் இப்பாடலுக்கு அளித்த விளக்கத்தை இணையத் தளமொன்றில் பொறுக்கித் தங்களுடன் பகிருகிறேன்.

புதிதாகப் பாபுனைய விரும்புவோருக்குக் காளமேகப் புலவரின் பா புனைதலுடனான போராட்ட நிகழ்வுகள் நல்லறிவைப் புகட்டுமென நம்புகிறேன். குறைந்த சொல் பாவனை அதாவது சிறந்த சொல்லாட்சி மற்றும் சுவை கொப்பளிக்கப் பாபுனையும் ஆற்றல் போன்றன காளமேகப் புலவரில் கண்டால் போதாது; ஒவ்வொரு புதிதாகப் பாபுனைய விரும்புவோரும் அவற்றைக் கையாள முற்பட்டால் பெரிய பாவலராக முடியுமே!

பிற அறிஞர்களின் பதிவுகளுடன் மீண்டும் சந்திப்பேன்.
(தொடரும்)


Wednesday, April 10, 2013

தனிக்காட்டுத் தனியாளாக



முற்குறிப்பு:-
யாப்பறிந்து பாபுனைய வாருங்கள் என மரபுக் கவிதை எழுத உதவும் குறிப்புகளை உடனுக்குடன் தராமல் பிற குறிப்புகளையும் தருவதால் வாசகர் உள்ளங்கள் நிறைவடையுமென நம்புகிறேன்.

பாட்டு, கவிதை, கதை என எதை எழுதப் புகினும் முதலில் நாம் பட்டுணர்ந்ததை அல்லது நாம் பட்டுணர்ந்தால் எப்படி இருக்குமென எண்ணியதை அல்லது கண்டதை அல்லது கேட்டதை அல்லது பார்த்ததை மீள மீள விரும்பிப் படிக்கத் தூண்டும் வண்ணம் அழகுற எழுதினால் நீங்களும் எழுத்தாளர் தான்!

பாபுனையும் போது எதுகை, மோனை அமைய குறைந்த சொல் எண்ணிக்கையில் இசையோடு (ஓசை நயம்) வாசிக்கத்தக்கதாக எழுதினால் நீங்களும் பாவலர் (கவிஞர்) தான்!

"நானோ எல்லாத்துறை அறிவிருந்தும் பட்டப்படிப்பு படிக்காத ஒருவர். என்னாலும் முடியுமென எனக்குள்ளே தன்னம்பிக்கையை வளர்த்து எந்த முயற்சியிலும் இறங்கிவிடுவேன்.

சில பொறாமைக்காரர் உதவும் கைகளை உதவவிடாமல் தடுத்தும் எனது முன்னேற்றங்களுக்கு முட்டுக்கட்டை போட்டும் என்னிடம் பயனடைவோரைத் தடுத்தும் எனப் பல வழிகளில் குறுக்கே நின்றனர்.

இப்படியான இக்கட்டான கட்டத்தில் எனது தேவைகளை நானே நிறைவேற்றிக்கொள்ள வேண்டிய சூழலுக்கு உள்ளானேன். சூழலுக்கு ஏற்ப என்னை நானே தயார் செய்தமையால் சிறு வெற்றிகளையும் சந்தித்தேன்." என்ற என் கதையை வைத்துப் புதுப்பா ஒன்று புனைந்துள்ளேன்.

இதே போன்று உங்கள் கதையை வைத்தோ என் கதையை வைத்தோ நீங்கள் பட்டுணர்ந்ததை வைத்தோ நீங்கள் பட்டுணர்ந்ததாக எண்ணியோ புதுப்பா ஒன்று புனையுங்களேன்.
முடியாது என்பது
மனித அகரமுதலி (அகராதி) யில்
இல்லைப்பாரும்...
முடியும் என்பவருக்கு
உருளும் உலகில்
எல்லாமே இலகுவாய்த் தான் இருக்கும்!
இதற்கு மேல் நான் எதைச் சொல்ல; நல்ல நல்ல புதுப்பாக்களை எழுதுங்களேன்.
அதற்கு முன் என் பாவைக் கீழே பாருங்களேன்.

ஆண்டவனுக்கென்ன
ஆளாளுக்கு ஏற்ப உயரம், அழகென
படைத்துவிட்டான் - அவன்
படைப்பில் எல்லோருக்கும்
மூளையின் எடை சம அளவே!

முயற்சியில் இறங்காத
முட்டாள்கள் தான்
படைத்த ஆண்டவன்
படைக்கும் போது
குறைந்த, கூடின எடை மூளையை
படைத்திருப்பானென நம்புவரே!

மாற்றார் படித்து முன்னேற
மாற்றாருக்கு மூளை கூடவேன
சின்ன அகவையில் நானும் சொல்லியே
சின்ன வகுப்பால
சின்னதாக முன்னேறி உயர் வகுப்படைந்து
சின்னாளாகவே இருந்து
பட்டப்படிப்பை
எட்டிப்பிடிக்காமல் விட்டிட்டேனே!

இருப்பது பட்டப் படிப்பாயினும் சரி
இருப்பது சின்னப் படிப்பாயினும் சரி
வருவாய் தரும் தொழிலின்றேல்
வருவாளா வாழ்க்கைத் துணை?
தருவாளா மகிழ்ச்சியை? - அன்று
ஒரு நாள் உணர்ந்தே
வருவாய் தருமெனப் படித்தேன் கணினியை
வருவாள் என்றவளும் வந்தாளே!

வீட்டிற்கு வீடு வாசற் படி போல
ஏட்டிக்குப் போட்டியாக எதிர்ப்புகள்
தொழிலகத்திலும் சரி
வழி நெடுகலும் சரி
முன்னேற்றம் முடங்க
பின்னேற்றம் கிட்ட நெருங்க
தொல்லை மேல் தொல்லை
எல்லையற்று நீள எதிர்ப்புகள்
தந்த எதிரிகளைக் கூட
முந்திக் கொண்டேன் தன்னம்பிக்கையாலே!

ஆளாளுக்கு
நாளுக்கு நாள் தப்பாமல்
தேவைகள் வந்து குவியுமே...
தேவைகள் கைக்கெட்டாத வேளை
தேவைகளுக்கு உதவுவோர்
கிட்ட நெருங்காத வேளை
பட்டென என் தேவைகளை
தனிக் காட்டுத் தனியாளாக
இனியென் பாட்டுக்கு நான் தான்
செய்ய வேண்டிய நிலையில்
செய்து முடிக்கக் கற்றுக்கொண்டேனே!

வேண்டிய வேளையில் எல்லாம்
வேண்டிய தேவைகள் எல்லாம்
நானே நிறைவேற்றிக் கொள்ள
நானே கற்றுக்கொண்டதால்
என்னை வீழ்த்த எவருமின்றி
என்னை நானே வளர்த்துக்கொண்டதால்
மிடுக்காகத் தலையை உயர்த்தி
எடுப்பாக உலாவுகின்றேனே!

தோழர்களே! தோழிகளே!
தோள்கொடுப்பார் யாருமின்றேல்
தன்னம்பிக்கை இருந்தால்
நன்னம்பிக்கை முனையையும்
கடக்கலாமென்பதைப் போல
முடங்கிவிடாது முன்னேறப் பார்
'முடியாது' என்பதை
விடியுமுன்னே உள்ளத்தை விட்டு விரட்டு
முடியும் என்போருக்கு
விடிய விடிய வெற்றிகள்
வீட்டிற்கே வருகை தருமே!