Sunday, February 23, 2014

எதுகை, மோனை விளையாட்டு


"முந்தி முந்தி முன்னேறிப் பார்" என
எழுதப் போகையில தெரியுது பார்
"முந்தி முந்தி" என்ற சீர்களில்
முதலெழுத்துப் பொருந்தி வருவதே
மோனையாம் என்றெழுதப் பழகு!
"கத்திக் கத்திப் படித்துப் பார்" என
எழுதப் போகையில தெரியுது பார்
"கத்திக் கத்திப்" என்ற சீர்களில்
ஈராமெழுத்துப் பொருந்தி வருவதே
எதுகையாம் என்றெழுதப் பழகு!
"பாலைப் போல வெள்ளை" என
"நூலைப் போல சேலை" என
எழுதப் போகையில தெரியுது பார்
வெள்ளைக்குப் பாலையும் ஒப்பிட்டு
சேலைக்கு நூலையும் ஒப்பிட்டு
அழகு பார்ப்பதே உவமையாம்!
எதுகை, மோனை, உவமை எல்லாம்
புதுக் கவிதை எழுதும் எல்லோரும்
கற்றுக்கொண்டால் வெற்றுக் கவிதை
எழுதும் காலம் இனிக் கிட்டாதே!
மோனைக்கு எடுத்துக்காட்டாக
"நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்." என்ற
வள்ளுவர் ஆக்கிய குறளில்
அடியிரண்டிலும் முதற்சீரைப் பாரும்
'நா' என்ற எழுத்து ஒன்றியிருக்கே!
எதுகைக்கு எடுத்துக்காட்டாக
"பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து." என்ற
வள்ளுவர் ஆக்கிய குறளில்
அடியிரண்டிலும் முதற்சீரைப் பாரும்
'ணி' என்ற எழுத்து ஒன்றியிருக்கே!
உவமைக்கு எடுத்துக்காட்டாக
"தொட்டனைத்து ஊறும் மணற்கேணி
மாந்தர்க்கு கற்றெனத் தூறும் அறிவு" என்ற
ஈரடிப் பாவரிகளைப் படித்தால் புரியும்
"மணற்கேணியானது
எவ்வளவு ஆழமாகக் கிண்டுகிறோமோ
அவ்வளவுக்கவ்வளவு நீர் சுரக்கும்.
அதே போல மனிதர்
எவ்வளவுகெவ்வளவு கற்கிறார்களோ
அவ்வளவுக்கவ்வளவு
அவர்களது அறிவு பெருகும்." என்றொரு
உவமை விளக்கத்தையும் புரிந்திடுவீரென
தளமொன்றில் பொறுக்கித் தந்தேனே!
(சான்று: http://ta.wikipedia.org/s/9or)
உவமை என்று புளிக்கும் கல்வியை
நான் பொறுக்கிச் சொல்வதை விட
"தேசிப் பழத்தழகி
தேங்காய் முலையழகி
பாசிப் பழத்தழகி
பக்கத்தில் நான் வந்திடுவேன்." என்ற
நாடறிந்த நாட்டார் பாவரிகளைப் படி
உவமையறி பாபுனையப் புறப்படு!
உவமையறிந்தால் பாபுனையப் போதுமா?
கொஞ்சம் எதுகை, மோனையோடு விளையாடு
கொஞ்சம் எதுகை, மோனையைப் படிக்க
"ஒரே எழுத்து
ஒன்றுக்கு ஒன்று ஒத்து வரலாம்
ஒரே இன எழுத்துக்கள்
ஒன்றுக்கு ஒன்று ஒத்து வரலாம்" என்பது
அடிப்படை எண்ணக்கரு என்பேன்!
எதுகை, மோனையோடு விளையாடத் தேவை
எழுத்துகள் பற்றிய தெளிவே - அவை
"அ, ஆ, இ, ஔ என்பனவும்
இ, ஈ, எ, ஏ, யா என்பனவும்
உ, ஊ, ஒ, ஓ என்பனவும்
உயிர்களில் இன எழுத்துகளாம்
ஞ், ந் என்பனவும்
ம், வ் என்பனவும்
த், ச் என்பனவும்
மெய்களில் இன எழுத்துகளாம்" என
வலைத் தளமொன்றில் படித்தேன்!
பாபுனைய விரும்புவோர் எல்லோரும்
எழுத்தறிந்து இடமறிந்து சீரமைத்து
எதுகை, மோனை, அடி, தொடையாக்கி
பாபுனையச் சிறு குறிப்பைத் தந்தேன்
தமிழை வாழ்த்திப் பாபுனையுங்களேன்!

Sunday, February 2, 2014

பாவலர்களே! பாடலாசிரியர்களே!


என் உயிரிலும் மேலான தமிழ் உறவுகளே!

நாம் வலைப்பூக்கள், வலைத்தளங்கள் போன்ற மின் ஊடகங்களில் தமிழைப் பரப்புவோர், இலக்கியங்களை வெளியிடுவோர் தள முகவரிகளைத் திரட்டி http://thamizha.2ya.com/ தளத்தில் களஞ்சியப்படுத்துகிறோம்.

இச்செயலால் பல அறிஞர்களை, பல வலைப்பூக்களை, பல வலைத்தளங்களை அறிமுகம் செய்ய வாய்ப்பு ஏற்படுகிறது. இதனால் பலரது பல கோணத் தமிழ் ஆய்வுகளை வெளிப்படுத்த வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே, இச்செயற் திட்டத்தின் மூலமாக உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண வழி பிறக்கும் என நம்புகிறோம்.

நீங்களும் உங்கள் வலைப்பூ, வலைத்தள முகவரிகளை எமது http://thamizha.2ya.com/ தளத்தில் இணைத்து உலகெங்கும் உங்கள் அறிவைப் பரப்ப முன்வாருங்கள்.

இவ்வண்ணம்
உங்கள் யாழ்பாவாணன்