Wednesday, July 31, 2013

யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்-012


பேச்சின் மூலம் ஒலியாம்
ஒலியின் வடிவம் எழுத்தாம்
எழுத்தால் ஆனது அசையாம்
அசையால் ஆனது சீராம்
சீரைக் கொஞ்சம்
விரித்துப் பார்த்தால் தவறில்லையே!
இரண்டு அசைகள்
இணைந்து வருதலே சீர் என்றாலும்
ஓர் அசையால் ஆனது
ஓரசைச் சீர் என்றும்
இரண்டு அசையால் ஆனது
ஈரசைச் சீர் என்றும்
மூன்று அசையால் ஆனது
மூவசைச் சீர் என்றும்
நான்கு அசையால் ஆனது
நாலசைச் சீர் என்றும்
நால் வகைச் சீர்களைக் காண்பீரே!
யாப்பிலக்ணப் பாக்களில்
வெண்பாவில் மட்டுமே
ஈற்றடி ஈற்றுச் சீராக
ஓரசைச் சீர் கையாளப்படுகிறதே!
அசை பற்றி அலசுகையில் கற்ற
நேர், நிரை, நேர்பு, நிரைபு என்றும்
நினைவூட்டலுக்கு எளிதாக
நாள், மலர், காசு, பிறப்பு என்றும்
ஓரசைகளையும் - அதற்கு
ஒத்த வாய்ப்பாடுகளையும்
தனியசைச் சீர் / ஓரசைச் சீர் என்க!
எடுத்துக்காட்டாக
"சான்றோன் எனக் கேட்ட தாய்" என
69 ஆவது திருக்குறளில் வரும்
"தாய்" என்ற ஓரசைச் சீர்
'நேர்' அசையாகவும் 'நாள்' வாய்ப்பாடாகவும்
"மழலைச்சொல் கேளா தவர்" என
66 ஆவது திருக்குறளில் வரும்
"தவர்" என்ற ஓரசைச் சீர்
'நிரை' அசையாகவும் 'மலர்' வாய்ப்பாடாகவும்
"நன்கலம் நன்மக்கட் பேறு" என
60 ஆவது திருக்குறளில் வரும்
"பேறு" என்ற ஓரசைச் சீர்
'நேர்பு' அசையாகவும் 'காசு' வாய்ப்பாடாகவும்
"மன்னுயிர்க் கெல்லாம் இனிது" என
68 ஆவது திருக்குறளில் வரும்
"இனிது" என்ற ஓரசைச் சீர்
'நிரைபு' அசையாகவும் 'பிறப்பு' வாய்ப்பாடாகவும்
அமைந்திருப்பதை அறிவீரே!
நேர்பசை(நேர்பு அசை), நிரைபசை(நிரைபு அசை),
நேரசை, நிரையசை ஆகிய
நான்குமிணைந்து உருவானது
அசைச்சீர் என்றும்
தனியசைச் சீர் / ஓரசைச் சீர் என்றாயிற்று!
நேரசை, நிரையசை இரண்டுமிணைந்தால்
"ஆசிரியச்சீர்" என்றாகி
ஈரசைச் சீர்களாய்ப் பிணையுமாம்!
ஈரசைச் சீர்களால் ஆனது
ஆசிரியப்பா என்பதால் பாரும்
ஆசிரியச்சீர் என்றும் அழைத்தனர் போலும்!
ஆசிரியப் பாவுக்கே உரிய சீர் என்பதால்
ஆசிரிய உரிச்சீர் என்றும்
அகவலும் ஆசிரியப் பாவிலொரு வகையாம்
ஆகையால் பாரும்
அகவற் சீர் என்றும் அழைக்கமுடிகிறதே!
நேர், நிரை அசைகளை
நேர் + நேர் என்றமைய இணைத்தால்
தே + மா = தேமா எனவும்
நிரை + நேர் என்றமைய இணைத்தால்
புளி + மா = புளிமா எனவும்
நிரை + நிரை என்றமைய இணைத்தால்
கரு + விளம் = கருவிளம் எனவும்
நேர் + நிரை என்றமைய இணைத்தால்
கூ + விளம் = கூவிளம் எனவும்
ஈரசைச் சீர் வாய்ப்பாடு அமைய
இணைவதைப் பாருங்களேன்!
'மா' என முடியும் சீர்களை
மாச்சீர் என்றும்
'விளம்' என முடியும் சீர்களை
விளச்சீர் என்றும்
யாப்பில் அழைக்கப்படுகிறதே!
பாபுனையும் வேளை
வேண்டிய ஒழுங்கில் சீரமைக்க
அசை பிரித்தல் தேவையே!
"வந்தான் படித்தான் உழைக்கவே என்றவன்" என்ற
அடியில் வரும் சீர்களை
வந் + தான் = வந்தான்
(நேர்) + (நேர்) = (தேமா) என்றும்
படித் + தான் = படித்தான்
(நிரை) + (நேர்) = (புளிமா) என்றும்
உழைக் + கவே = உழைக்கவே
(நிரை) + (நிரை) = (கருவிளம்) என்றும்
என் + றவன் = என்றவன்
(நேர்) + (நிரை) = (கூவிளம்) என்றும்
அசை பிரித்தல் நன்றென்பேன்!
எடுத்துக்காட்டாக
"கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக." என்னும்
வள்ளுவரின் குறள் வெண்பாவை
அசை பிரித்து ஆய்வு செய்தால்
கற்(நேர்) + க(நேர்) = கற்க(தேமா)
கச(நிரை) + டறக்(நிரை) = கசடறக்(கருவிளம்)
கற்(நேர்) + பவை(நிரை) = கற்பவை(கூவிளம்)
கற்(நேர்) + றபின்(நிரை) = கற்றபின்(கூவிளம்)
நிற்(நேர்) + க(நேர்) = நிற்க(தேமா)
அதற்(நிரை) + குத்(நேர்) = அதற்குத்(புளிமா)
தக(நிரை) = தக(மலர் - அசைச்சீர் வாய்ப்பாடு)
என்றவாறு அமைவதைக் காண்பீரே!
எழுத்துத் தெரிந்து, அசை அறிந்து,
சீர் அமைத்துப் பா புனைய
அசை பிரித்துப் பழகுதலே
நல்ல பயிற்சி என்பேன்!
இயற் சீர்களாகிய
மாச்சீர், விளச் சீர்களுடன்
நேரசை, நிரையசை இணைய
மூவசைச் சீர்கள் தோன்றக் காண்பீரே!
நேர் + நேர் + நேர் என்றிணைய
தே + மாங் + காய் = தேமாங்காய் எனவும்
நிரை + நேர் + நேர் என்றிணைய
புளி + மாங் + காய் = புளிமாங்காய் எனவும்
நிரை + நிரை + நேர் என்றிணைய
கரு + விளங் + காய் = கருவிளங்காய் எனவும்
நேர் + நிரை + நேர் என்றிணைய
கூ + விளங் + காய் = கூவிளங்காய் எனவும்
நேர் + நேர் + நிரை என்றிணைய
தே + மாங் + கனி = தேமாங்கனி எனவும்
நிரை + நேர் + நிரை என்றிணைய
புளி + மாங் + கனி = புளிமாங்கனி எனவும்
நிரை + நிரை + நிரை என்றிணைய
கரு + விளங் + கனி = கருவிளங்கனி எனவும்
நேர் + நிரை + நிரை என்றிணைய
கூ + விளங் + கனி = கூவிளங்கனி எனவும்
காய்ச்சீர், கனிச்சீர் என
மூவசைச் சீர்கள் அமைவதைப் பார்த்தீரே!
காய்ச்சீர் நான்கினையும்
இடைச்சீர் எனினும்
வெண்பா உரிச்சீர் என்றும்
(வெண்பாவுக்கு உரிய சீர்)
கனிச்சீர் நான்கினையும்
கடைச்சீர் எனினும்
வஞ்சி உரிச்சீர் என்றும்
(வஞ்சிப் பாவுக்கு உரிய சீர்)
யாப்பில் கையாளப்படுகிறதே!
தொல்காப்பியர் காலத்தில் இல்லாத போதும்
பின் தோன்றிய நான்கசைச் சீர்கள்
பெறுமதியிழந்து
பின் நாளில் மறைந்தாலும்
அசை, சீர் பயிற்சிக்காக
விரித்துக் காட்டுகிறேன் பாரும்!
காய்ச்சீர், கனிச்சீர் உடன்
நேரசை, நிரையசை இணைய
'காய்' வரின் 'தண்' எனவும்
'கனி' வரின் 'நறும்' எனவும்
பூச்சீர், நிழற் சீராக
நாலசைச் சீர் அமைகிறதே!
நேர் + நேர் + நேர் + நேர் எனின்
தேமாந்தண்பூ எனவும்
நிரை + நேர் + நேர் + நேர் எனின்
புளிமாந்தண்பூ எனவும்
நிரை + நிரை + நேர் + நேர் எனின்
கருவிளந்தண்பூ எனவும்
நேர் + நிரை + நேர் + நேர் எனின்
கூவிளந்தண்பூ எனவும்
நேர் + நேர் + நிரை + நேர் எனின்
தேமாநறும்பூ எனவும்
நிரை + நேர் + நிரை + நேர் எனின்
புளிமாநறும்பூ எனவும்
நிரை + நிரை + நிரை + நேர் எனின்
கருவிளநறும்பூ எனவும்
நேர் + நிரை + நிரை + நேர் எனின்
கூவிளநறும்பூ எனவும்
நேர் + நேர் + நேர் + நிரை எனின்
தேமாந்தண்ணிழல் எனவும்
நிரை + நேர் + நேர் + நிரை எனின்
புளிமாந்தண்ணிழல் எனவும்
நிரை + நிரை + நேர் + நிரை எனின்
கருவிளந்தண்ணிழல் எனவும்
நேர் + நிரை + நேர் + நிரை எனின்
கூவிளந்தண்ணிழல் எனவும்
நேர் + நேர் + நிரை + நிரை எனின்
தேமாநறுநிழல் எனவும்
நிரை + நேர் + நிரை + நிரை எனின்
புளிமாநறுநிழல் எனவும்
நிரை + நிரை + நிரை + நிரை எனின்
கருவிளநறுநிழல் எனவும்
நேர் + நிரை + நிரை + நிரை எனின்
கூவிளநறுநிழல் எனவும்
நாலசைச் சீர் அமைவதைக் காணும்!
நான்கு அசைச் சீர்கள்
நீண்டிருப்பதால்
பா புனையப் பாவித்தால்
வரிப்பா(வசன கவிதை) போலவோ
உரை நடை போலவோ
அமைந்திட வாய்ப்பிருக்கே!
புலவர் வெற்றியழகனின் கருத்துப்படி
வஞ்சிப்பாவில் மட்டும் தானாம்
நாலசைச் சீர் வந்துள்ளதாம்!
அசை, சீர், அலகிடல் பற்றி
மீளவும் மீட்டுப் பார்ப்போமே!
(தொடரும்)

முன்னையதைப் பார்க்க
http://paapunaya.blogspot.com/2013/07/011.html

Sunday, July 14, 2013

யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்-011

எழுதப்படுவது எழுத்துப் போல
பாடப்படுவது பாட்டுப் போல
இசைக்கப்படுவது இசையைப் போல
அசைக்கப்படுவது 'அசை' என்போம்!
யாப்பிலக்கணத்திலே
எழுத்துகளால் அசைத்து
இசை கொள்ளுதலே அசையாம்!
உயிர், குறில், நெடில், ஆயுதம்,
மெய், வல்லினம், மெல்லினம்,
இடையினம், உயிர்மெய்,
குற்றியலுகரம், குற்றியலிகரம்,
ஐகாரக்குறுக்கும், அளபெடை
எல்லாமே அசைக்கும் உறுப்புகளே!
(இதுவரை இவைபற்றி எழுதிவிட்டேன்.)
இயலசை, உரியசை என
அசை இரண்டாகுமே!
நேரசை, நிரையசை என
இயலசை இரண்டாகுமே!
நேர்பு அசை, நிரைபு அசை என
உரியசை இரண்டாகுமே!
அசை பற்றி
நன்கு தெளிவு பெற்றால்
நாள், மலர், காசு, பிறப்பு என
நான்கு வகை வாய்ப்பாடு
அறிய வரும் - அதனை
வெண்பாவின் ஈற்றுச் சீராக
பாவிக்க வேண்டி வருமே!
குறில்(எ.கா.: க, ங), நெடில்(எ.கா.: கா, ஙா), ஒற்று(எ.கா.: க், ங்) என்னும்
மூவை எழுத்துகளால் ஆக்குவோம்
பாவின் முதுகெலும்பான "அசை"ஐ!
குற்றெழுத்துத் தனித்தோ (எ.கா.: க)
குற்றெழுத்து ஒற்றடுத்தோ (எ.கா.: கல்)
நெட்டெழுத்துத் தனித்தோ (எ.கா.: கா)
நெட்டெழுத்து ஒற்றடுத்தோ (எ.கா.: கால்)
எழுத்தமைதல் நேரசையாம்!
இருகுறில் இணைந்தோ (எ.கா.: கட)
இருகுறில் இணைந்து ஒற்றடுத்தோ (எ.கா.: கடல்)
குறில் நெடில் இணைந்தோ (எ.கா.: கடா)
குறில் நெடில் இணைந்து ஒற்றடுத்தோ (எ.கா.: கடாண்)
எழுத்தமைதல் நிரையசையாம்!
தனிக்குறில் ஒழிந்த(தவிர்ந்த)
எஞ்சிய மூன்று நேரசைகளோடு
கு, சு, டு, து, பு, று என்னும்
வல்லின உகரம் இணைதலே
நேர்பு அசையாகும்!
எடுத்துக்காட்டாக
"பந் + து = பந்து" என்றும்
"கா + டு = காடு" என்றும்
"காப் + பு = காப்பு" என்றும்
அமைந்து வருவதைக் காண்பீரே!
எண்ணிப் பாருங்களேன்
தனிக்குறில் நேரசையோடு
வல்லின உகரம் இணைந்தால்
வருவது நிரையசை அன்றோ!
(எ.கா.: ககு, கசு, கடு, கது, கபு, கறு)
நான்கு நிரையசைகளோடு
கு, சு, டு, து, பு, று என்னும்
வல்லின உகரம் இணைதலே
நிரைபு அசையாகும்!
எடுத்துக்காட்டாக
"விற + கு = விறகு" என்றும்
"வடக் + கு = வடக்கு" என்றும்
"தகா + து = தகாது" என்றும்
"நடாத் + து = நடாத்து" என்றும்
அமைந்து வருவதைக் காண்பீரே!
இரண்டு அசைகள் இணைந்து வருதலே
சீர்(சொல்) என்று
யாப்பில் கையாளப்படுகிறதே!
வெண்பாவின் ஈற்றடி ஈற்றுச் சீர்
தனியசையில் தான் முடியணுமாம்
அதற்கமைய
வாய்ப்பாடு ஒன்றும் வகுத்தனரே!
எடுத்துக்காட்டாக
வெண்பாவின் ஈற்றடி ஈற்றுச் சீரில்
நேர் அசை வரின் "நாள்" என்றும்
நிரை அசை வரின் "மலர்" என்றும்
நேர்பு அசை வரின் "காசு" என்றும்
நிரைபு அசை வரின் "பிறப்பு" என்றும்
யாப்பில் அழைக்கப்படுகிறதே!
பா புனையும் போது
அசை எப்போதும்
சீர், தளை போன்ற
எஞ்சிய பா உறுப்புகளோடு
இணைந்தே வரும் ஆகையால்
'சீர்' பற்றியே - அடுத்து
நாம் தொடர்வோமே!
(தொடரும்)

முன்னையதைப் பார்க்க
http://paapunaya.blogspot.com/2013/06/010.html