Tuesday, December 31, 2013

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

Sunday, December 22, 2013

நான் பாவலன் (கவிஞன்) இல்லையே!


பாபுனைதல் அல்லது கவிதையாக்குதல் என்பது இலக்கியத்தில் முக்கிய பங்கெடுக்கின்றது. இலக்கியம் தோன்றிய பின்னரே, இலக்கணம் தோன்றியதாகக் கூறப்படுகின்றது. அப்படியாயின் யாப்பறிந்து பாபுனைய வருமுன் பா/கவிதை இலக்கியத்தில் எவரும் இறங்கலாமே!

எனது முயற்சிகளும் தொடக்கத்தில் அப்படித்தான் இருந்தது. எழுத வேண்டுமென்ற விருப்பமே என்னை எழுத வைத்தது. எழுதத் தொடங்கிய பின்னரே, இலக்கணம் அறிந்து எழுதினால் எழுத்தின் தரம் உயருமென நம்பி இலக்கணம் படித்தேன்.

பா/கவிதை என்றால் என்ன? எழுத்தின் மூலம் ஆக்கிய படைப்பு பா/கவிதை எனலாம். அது எப்படியிருக்கும்? வாசிக்கச் சுகமளிக்கும்; மீள மீள நினைவில் வரும்; விரைவாய் வாசகனைச் சென்றடையும். அப்படியாயின் எப்படிப் பாபுனைவது அல்லது கவிதையாக்குவது?

இன்றைய ஊடகங்களில் "காதலிலே தோல்வியுற்றால் கவிதை வருமே!" என எழுதுவோரின் கைவண்ணத்தைக் கீழே பார்க்கலாம்.
நீ
என்னை
காதலிக்கத் தொடங்கியதுமே
என்னுள்ளத்தில் பொங்கிய மகிழ்ச்சி
நீ
என்னைப் பிரிந்ததுமே
அதுவும்
என்னை விட்டு
தொலைதூரத்திற்கு ஓடிப் போய்விட்டதே!

என்று, ஆணோ பெண்ணோ இக்கவிதையை எழுதியிருக்கலாம். இதில் இருபாலாருக்கும் பொதுவான ஓர் உண்மை (பிரிவுத் துயர்) வெளிப்படுகிறது.

கையில காசிருக்கும் வரை
கைகுலுக்கினாயே...
கையறுநிலை வந்ததுமே
கைநழுவி விட்டாயே...
கை கனத்தால் தான்
கைகுலுக்குவாய் என்றால்
நானே
கைகழுவிவிடுகிறேனே!

என்று, பணத்திற்காகக் காதலென்றால் வேண்டாம் என ஆணொருவர் தன்நிலையைச் சொல்கிறார்.

கண்ணை
இமை காப்பது போல
என்னை
நீ காப்பாய் என்றாய்
நம்மி
உன்னை நானும் அணைத்தேன்
வெம்பி அழுகிறேன்
என் நீண்ட வயிற்றைக் கண்டு
நீயும்
எங்கேயோ ஓடி ஒளிந்ததாலே!

என்று, பெண்ணொருத்தி கருவுற்றதும் ஓடியொளியும் ஆண்களைச் சுட்டுவதோடு, பெண்ணின் துயரையும் பெண்ணொருவர் எழுதுகிறார்.

உள்ளத்தில் தோன்றும் உணர்வுகளை அப்படியே அழகாக, ஒழுங்காக அடுக்கி வைத்தாலும் பா/கவிதை வருமென எழுதுவோரின் கைவண்ணத்தைக் கீழே பார்க்கலாம்.

உண்டது நாறின மீனோ செத்த கோழியோ
நேற்றிரவு தெருக்கடையில உண்டு களித்தேன்
இன்றுவிடியக் களிப்பறையில குந்தி இருக்கேன்
மருந்து (பேதி) குடிக்காமலே வயிற்றாலே அடிக்குதே
"கடையுணவு தந்த கேடு!"

என்று, ஒருவர் கடைச் சாப்பாட்டால் தனக்கு வந்த கேட்டைச் சுவையாகச் சொல்கிறார்.

காலையில கிழக்கைப் பார்த்த பூ
மாலையில மேற்கைப் பார்க்கும் நோக்கமென்ன?
ஞாயிற்றை (சூரியனை) விரும்பி நாடும் பூ
ஆயிற்றே என்று அழகைப் பார்த்தால்
"மஞ்சள் சூரியகாந்தி!"

என்று, ஒருவர் தான் கண்ட காட்சியை அப்படியே அழகாகச் சொல்கிறார்.

உள்ளத்தில் எழும் எண்ணங்களை, விருப்பங்களை எளிமையாக எடுத்துச் சொன்னாலும் பா/கவிதை வருமென எழுதுவோரின் கைவண்ணத்தைக் கீழே பார்க்கலாம்.

நான்
நாட்டுத் தலைவரானால்
(பிரதமராகவோ ஜனாதிபதியாகவோ)
ஏழைகள் இல்லா
நாட்டை ஆக்குவேனே!
ஆனால்,
வாக்குப் போடவேனும்
நான்
நாலாளுகளை அணைக்க மறந்திட்டேனே!

என்று, ஒருவர் தனது நிலையையும் தன் எண்ணத்தையும் வெளிப்படுத்துகிறார்.

நல்வருவாய் தரும் தொழிலில்
நானிருந்தால் பாரும்
ஏழைகளுக்கு வாழ்வளிப்பேனே!
ஆனால்,
பிச்சை எடுக்கும் என் நிலை
எப்ப தான் மாறுமோ
எனக்கும் புரியுதில்லையே!

என்று, இன்னொருவர் தனது நிலையையும் தன் எண்ணத்தையும் வெளிப்படுத்துகிறார்.

உலகெங்கும் தூய தமிழைப் பரப்பிப் பேண நல்ல பாவலர்கள் (கவிஞர்கள்) தேவையென்றே இத்தளத்தை ஆக்கி அதற்கான பதிவுகளைத் தருகின்றேன். எனவே, பாபுனைய விரும்பும் எல்லோரும் யாப்பிலக்கணத்திற்கு அஞ்சி பாபுனையாமல் / கவிதையாக்காமல் இருக்கலாமோ? மேலுள்ள எடுத்துக்காட்டுகளைப் பார்த்தேனும் பாபுனைய / கவிதையாக்க முயன்று பாருங்களேன்.

உண்மையில் நான் ஒன்றும் பாவலனோ (கவிஞனோ) இல்லைக் காணும்! மேலுள்ள எடுத்துக்காட்டுகளைப் போன்ற பதிவுகளையும் மூ.மேத்தா அவர்களின் கவிதைகளையும் படித்துத் தான் பாபுனைய / கவிதையாக்க முனைந்தேன். பின்னர் தான் யாப்பறிந்து பாபுனைய முயன்றேன்.

முடியுமென நினைத்தாலே
முடிந்த மாதிரித்தான்
பாபுனைய முடியுமென நினைத்தாலே
பாபுனைந்த மாதிரித்தான்
முயன்று பாருங்களேன்!

Monday, December 2, 2013

விசாகப்பெருமாள் விளக்குகிறார் - 03

அன்புள்ள உறவுகளே!
"யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்" தொடரில் பன்னிரண்டு பகுதிகளை நிறைவு செய்தேன். அடுத்த பகுதி தொடர முன் சிறு மீட்டலை மேற்கொள்ள எண்ணி விசாகப்பெருமாள் எழுதிய "யாப்பிலக்கணம்" நூலில் இருந்து சிறு பகுதியைக் கீழே தருகின்றேன்.

இப்பகுதி செய்யுள் இயலில் வரும் பாவினம், வெண்பா இலக்கணம், வெண்பா வகை, அகவற்பா எனப் பல பகுதிகளை அலசுகிறது. படித்துப் பயனடைவீர்கள் என நம்புகிறேன்.

இப்பகுதி பாபுனைய முனைவோருக்கு நல்ல பயனைத் தருமென நம்புகின்றேன். இந்நூலை எனது மின்நூல் களஞ்சியத்தில் இருந்து பதிவிறக்கலாம்.