அறிமுகம்

யாப்பறியாமல் பா புனைய வாருங்கள்!

"யாப்பறிந்து பா புனைய" என
எல்லாப் பாவலரும்
பொத்தகங்கள் எழுதுகிறாங்கள்...
"யாப்பறியாமல் பா புனைய வாருங்கள்" என
எந்த முட்டாள் அழைப்பு விடுகிறாரென
என்னுடன் மோதுவதற்கு
எல்லோரும் அணிதிரண்டாச்சோ...!
எழுத்து, சொல்லு, சொற்புணற்சி ஆகிய
தொடக்க இலக்கணம் தெரிந்திருந்தால்
யாப்பிலக்கணம் எதற்கு?
"பாலைப் போல வெள்ளை" போன்று
உவமை, ஒப்பீடு எழுத முடிந்தால்
கண்ணால் காண்பது போல
வாசகர் வாசிக்கையிலே உணரக்கூடியதாக
உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த முடியாதா?
எதுகை, மோனை ஒழுங்காக அமைந்தால்
வாசித்த வரிகளைக் கூட
மீள மீள வாசிக்கத் தூண்டுமே!
ஓரின எழுத்தோ
அவ்வெழுத்தின் இனவெழுத்தோ
சொல்லுக்குச் சொல்
முதலெழுத்தோடு பொருந்தி வரின் மோனை...
ஓரடியிலோ ஈரடியிலோ
சொல்லுக்குச் சொல்
இரண்டாம் எழுத்தோடு பொருந்தி வரின் எதுகை...
இதெல்லாம் யாப்பின் சிறு துளி!
"மல்லிகாவின் முகம் மின்னிட
பல்லவனின் அகம் குளிர்ந்தது" என்பதில்
முதலாமடியில் மகரம் மோனையாக
ஈரடிகளிலும் லகரம், ககரம்
எதுகையாக வரக் காண்பீரே!
என் அறிவுக்கெட்டிய வரையில்
பா புனையும் வேளை
குறுக்கே வந்து நிற்கும்
சில இலக்கண இடையூறுகளை
சுட்டிக் காட்டினேன் - இனி
யாப்பறியாமல் பா புனைய வாங்க!
வீட்டுக் கூரையிலே ஒளிவிடும்
மின்குமிழ் ஒளி வட்டத்தடியில
பல்லிகளும் பூச்சிகளும்
வட்டமடிக்கும் நோக்கத்தையே
பா நான்கில் புனைந்து பார்ப்போமா!
"பசித்த பல்லிக்கு இரையாகப் பூச்சிகள் இருந்தன.
பசித்த பெரிய பூச்சிகளுக்கு இரையாகச் சிறிய பூச்சிகளும் இருந்தன.
வட்டமடிக்கையிலே பூச்சியொன்று பல்லியின் வாய்க்குள்ளே சிக்கியது.
'தப்பினேன் பிழைத்தேன்' எனக் குட்டிப் பூச்சிகள் தப்பின." என
நான்கு வரியிலே வெளிப்பட்டது
வரிப்பா (வசன கவிதை) என்போமே!
"உணர்வு, எண்ணம், செயல் என
வரிக்கு வரி வெளிப்படுத்துவது வரிப்பா" எனக் கருதி
சிறந்த வரிப்பா புனையுங்களேன்!
"பசி வயிற்றை நிரப்ப
பல்லிகளும் பூச்சிகளும்
வட்டமடிக்கையிலே
கிட்ட நெருங்கிய பூச்சியை
பல்லியொன்று கவ்விச்சாம்!" என
ஐந்து வரித்துண்டுகளில் வெளிப்பட்டது
புதுப்பா (புதுக் கவிதை) என்போமே!
"உணர்வு, எண்ணம், செயல் என
முழுமையுறா வரிகளால்
ஒழுங்குற அமைத்தல் புதுப்பா" எனக் கருதி
சிறந்த புதுப்பா புனையுங்களேன்!
"குட்டிப் பூச்சியை விழுங்க நின்றது பெரும் பூச்சி
சுட்டிப் பல்லியோ கிட்டியதை விழுங்க நின்றது
எட்டி எட்டி நகர்ந்த பல்லிக்கு
பட்டும் படாமல் பல தப்பின
'சிக்கிய பூச்சி பல்லிக்கு இரை...' " என
ஐந்தடிகளில் வெளிப்பட்டது
குறும்பா (குறும்புக் கவிதை) என்போமே!
"நான்கு அடிகளில் வெளிப்படுத்திய
எண்ணங்களின் மூச்சு
ஈற்றடியில் வெளிப்பட வேண்டும்" எனக் கருதி
சிறந்த குறும்பா புனையுங்களேன்!
"சின்னதை விழுங்கப் பெரும் பூச்சிகள்
வாய்க்கு எட்டியதை விழுங்கப் பல்லிகள்
'பல்லிக்கோ இரை பூச்சிக்கோ சாவு...' " என
மூன்றடிகளில் வெளிப்பட்டது
துளிப்பா (ஹைக்கூ கவிதை) என்போமே!
"ஈரடிகளில் வெளிப்படுத்திய
எண்ணங்களின் உயிர்
ஈற்றடியில் மின்னும்" எனக் கருதி
சிறந்த துளிப்பா புனையுங்களேன்!
நல்ல பல பொத்தகங்களைப் படித்தேன்
மெல்லச் சில பொறுக்கி உரைத்தேன்
என்னை வென்ற பாவலர்களே
என் பாவில் பிழையிருப்பின் சுட்டுங்களேன்!
நீங்கள் சுட்டிச் சொல்லும்
தாக்குரையும் திறனாய்வும்
"யாப்பறிந்து பா புனைய வாருங்கள்" எனும்
எனது அடுத்த படைப்பை ஆக்க
எனக்குப் பின்னூட்டியாக இருக்குமென
நான் நம்பலாமா?!

------------------------------------------------------------------

பாப்புனைய யாப்பறிய வேண்டுமா?

"யாப்பு நமக்கு ஆப்பு" என்பது
புதிதாய்ப் பாப்புனைய முனைவோர்
விடுக்கின்ற செய்தியே!
யாப்பிலக்கணத்தை வெறுப்போர்
"யாப்பறிந்து பாப்புனைக..." என்று
அறிஞர்கள் பலர் நூல்கள் எழுதி
பிழைப்பு நடாத்துகிறார்கள் எனலாம்!
நான் கூடப் பாவலன் அல்லன்
எனது
எண்ணங்களை வெளியிடத் தான்
பாப்புனைய முனைந்தேன்...
நானும் தொடக்கத்தில்
யாப்பறியாமல் பாப்புனையவே
எழுதுகோலைப் பிடித்தேன்!
நல்வாய்ப்பாகச் சில
நாளேடுகள் சிலவற்றில்
வெளியாகி இருந்தாலும் - பல
குப்பையிலே போய்ச் சேர்ந்தன...
காலம் கடந்த பிறகு தான்
யாப்பறிந்து பாப்புனைந்தால்
இப்படி நிகழாதென உணர்ந்தேன்!
பறப்பதற்குக் கூட
இறக்கை எப்படி உதவுகிறதோ
அப்படித்தான்
பாப்புனைய யாப்பிலக்கணம் உதவுகிறதே!
"சல சல என ஆறு ஓடிக்கொண்டிருந்தது.
ஆற்றைக் கிழித்துக் கொண்டு மீன்களும் நீந்தின." என்பது
வரிப்பா (வசன கவிதை) - அதுவும்
வரிகளில் எண்ணத்தை வெளிப்படுத்துவது
இலக்கணம் இல்லையா?
"கடலைத் தேடி ஓடும் ஆற்றை
இரையைத் தேடும் மீன்கள்
எதிர்த்து நீந்தின!" என்பது
புதுப்பா (புதுக் கவிதை) - அதுவும்
முறிக்கப்பட்ட வரிகளால் தொடுப்பது
இலக்கணம் இல்லையா?
"பெரும் மீன்கள் வாயை விரித்து நிற்க
சிறு மீன்களுடன் ஆறும் கடலை நாடியது.
"பெரும் மீன் வாய்க்குள் சிறு மீன்..." " என்பது
துளிப்பா (ஹைக்கூ கவிதை) - அதுவும்
ஈரடி விளக்கி நிற்க
ஈற்றடி விளித்து நிற்பதும்
இலக்கணம் இல்லையா?
"சல சல என ஓடும் ஆறு
விடு விடு என நீந்தும் மீன்கள்
ஆற்றோடு பெரும் மீன்கள் வாயை விரிக்க
ஆற்றை எதிர்த்துச் சிறு மீன்கள் போட்டி
"..... வாய்க்குள் சிக்கின சிறு மீன்கள்" " என்பது
குறும்பா (குறும்புக் கவிதை) - அதுவும்
நான்கடியில் நிலைமைகளை விளக்கி
ஐந்தாம் அடியில் செய்தி சொல்வதும்
இலக்கணம் இல்லையா?
இத்தனையும் சொல்லித்தான்
"யாப்பறியாமல் பாபுனைய வாருங்கள்" என
நானும் பாவொன்று புனைந்தேன்
பாபுனைய விரும்புவோர்
இப்படி எத்தனையோ வண்ணங்களில்
பாபுனைவார்களென நம்பியே!
உணர்வுகளைச் சொல்லும் அழகு நடையிலே
ஒழுங்கான ஓசையிலான பாவடிகளிலே
எவரும் விரும்பி வாசிக்கும் வண்ணம்
பா புனைந்தாலும் கூட
எம்மை அறியாமலே இலக்கணம் நுழையுமே!
எப்படி இருப்பினும்
புதிதாய்ப் பாப்புனைய முனைவோர்
யாப்பிலக்கணத்தை
வெறுக்கப் பல சாட்டுக்கள் இருக்கலாம்!
யாப்பிலக்கணத்தில்
ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என
நால் வகைப் பா உண்டு - அதுவும்
எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என
இலக்கணம் ஆறைக் கொண்டிருப்பதாலாம்...
யாப்பிலக்கணப் பாக்களை வாசிக்கையில்
புரியாத சொற்களால் அமைவதாலாம்...
பாவடிகள் சிலவற்றில்
சீர், தளைக்கேற்ப
சொற்களை உடைத்திருப்பார்கள்...
எடுத்துக்காட்டாக
"பார்த்திட ணுமென்று நான்கூட இருக்கேன்" என்ற
ஆசிரியப்பா அடியில்
ஈரசைச் சீராகவும்
தளை தட்டாமல் இருக்கவும்
"பார்த்திடணும் என்று" என
எழுதுவதற்குப் பதிலாக
"பார்த்திட ணுமென்று" என எழுதுவதும்
சில பா அடிகளில்
"ஓம்" என்று வரவேண்டிய இடத்தில்
ஒலியளவில் மாற்றத்தை உண்டுபண்ண
"ஓஒம்" என்று எழுதுவதும்
புரியாத சொற்களாக இருக்கலாம்!
யாப்பிலக்கணப் பாக்களில்
சீர், தளைக்கேற்ப
சொற்களை உடைக்காமல்
சீர், தளைக்கேற்ற
சொற்களைத் தெரிவு செய்தால்
எவரும் விரும்பிப் படிக்கலாம்!
"யாப்பு" எனும் பாவிலக்கணத்தை
பா புனையும் போது
பறப்பதற்குத் துணையாயிருக்கும்
இறக்கையாகப் பாவித்தால்
பா புனைவதில் உங்களை வெல்ல
எவரும் கிட்ட நெருங்காயினும்!
எழுத்துக்கு இடப்படும் கைவிலங்காக
யாப்பிலக்கணத்தைக் கண்டு அஞ்சினால்
உங்கள் விரல்களை விட்டு
எழுதுகோல் பறக்கத்தானே செய்யும்!
இந்திய-தமிழக அறிஞர்களான
புலவர் குழந்தையின் "யாப்பதிகாரம்"
மருதூர் அரங்கராசனின்
"யாப்பறிந்து பாப்புனைய" எனும்
இரண்டு நூல்களையும்
உலகின் எப்பகுதியில் இருப்போரும்
இன்றே பெற்றுப் படியுங்களேன்!
யாப்பிலக்கணத்தைக் கற்றாலும்
பிறருக்குப் புரியும் படி
எளிமையாக அமையும் படி
சீர், தளைக்கேற்ற
சொற்களைத் தெரிவு செய்தோ...
"இருப்பதும்" என்பதற்கு ஈடாக
"இருப்பதூம்" என எழுதி
ஒலிக்காக அளபெடுக்கும் செயல்
மட்டுமன்றி
வேறேதும் மாற்றங்களைச் செய்தோ...
யாப்பறிந்து பாப்புனைய முனைவோம்!
யாப்பறிந்து புனையப்படும் பாக்களில்
ஒலி, ஓசை நயம் மட்டுமன்றி
இசைக்கேற்ப அடிகள் அமைவதும்
இயல்பாக அமைந்துவிடுமே!
"யாப்பறிந்து பா புனைய வாருங்கள்" எனும்
எனது அடுத்த படைப்பை
விரைவில் தருவேன் எனக்கூறி
தங்கள்
தாக்குரையையும் திறனாய்வையும்
எதிர்பார்த்து நிற்கிறேன்!

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.