Thursday, September 26, 2013

விசாகப்பெருமாள் விளக்குகிறார் - 02

அன்புள்ள உறவுகளே!
"யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்" தொடரில் பன்னிரண்டு பகுதிகளை நிறைவு செய்தேன். அடுத்த பகுதி தொடர முன் சிறு மீட்டலை மேற்கொள்ள எண்ணி விசாகப்பெருமாள் எழுதிய "யாப்பிலக்கணம்" நூலில் இருந்து சிறு பகுதியைக் கீழே தருகின்றேன்.

இப்பகுதியில் தளை, அடி, தொடை பற்றி விளக்கப்படுகிறது. படித்துப் பயனடைவீர்கள் என நம்புகிறேன்.


இப்பகுதி பாபுனைய முனைவோருக்கு நல்ல பயனைத் தருமென நம்புகின்றேன். இந்நூலை எனது மின்நூல் களஞ்சியத்தில் இருந்து பதிவிறக்கலாம்.

Sunday, September 22, 2013

வெண்நீரும் செந்நீரும் போல...

சங்க இலக்கியத்தில் காதல் தான் அதிகம் பாடு பொருளாகக் காணப்படுகிறது. சும்மா சொல்லக் கூடாது; இப்பவும் அதிகம் காதலைப் பற்றித் தான் எழுதுறாங்க... ஆனால், அன்று இலக்கணக்(மரபுக்) கவிதை இன்று புதுக்கவிதை.

பாடல் உருவாகக் காரணம் மழை தானாம்... வழியாலே போன, வந்த காளையும் வாலையும் பெய்த மழைக்கு ஆங்கே ஒதுங்கினராம்... பெய்த மழையும் சற்று நேரம் கழித்துத் தான் ஓய்ந்ததாம்... அந்தச் சற்று நேரத்திற்குள்ளே காளையும் வாலையும் என்ன தான் எண்ணியிருப்பாங்க... மழை ஓய்ந்ததும் இருவரும் விலகிச் செல்கையில் தலைவன் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. (சங்ககாலத்து இலக்கியத்தில் பெரும்பாலான பாடல்களில் தலைவன் அல்லது தலைவி கூறுவதாகவே அமைந்து இருக்கும்.)

சங்ககாலத்து இலக்கியப் பாடல்:

             யாயும் ஞாயும் யாராகியரோ
             எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்
             யானும் நீயும் எவ்வழி அறிதும்
             செம்புலப் பெயல்நீர் போல
             அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே.
                                (குறுந்தொகை: 40 ஆவது பாடல்)

சங்ககாலத்து இலக்கியப் பாடலுக்கான விளக்கம்:

‘என் தாயும் உன் தாயும் ஒருவரை ஒருவர் அறியாதவர்கள். என் தந்தையும் உன் தந்தையும் எம்முறையிலும் உறவினர் அல்லாதவர்கள். நானும் நீயும் முன் பின் தெரிந்தவர்களா? இல்லை. இப்படி எந்த வழியிலும் உறவே அற்ற நம் இருவரது மனமும் செம்மண்ணில் விழுந்த மழை நீர் எப்படித் தன்நிறம் மாறிச் சிவந்த நிறமுடையதாக மாறுகிறதோ, செம்மண்ணும் எப்படி மழை நீருடன் கலந்து குழைந்து சேறாகி விடுகிறதோ அதுபோல நம் மனங்கள் ஒன்றோடு ஒன்று காதல் என்ற உணர்வால் கலந்தனவே’ என்று தலைவன் தலைவியிடம் பேசும் இப்பாடல், உலகத்தில் சாதி, மத, இன வேறுபாடு இன்றி எல்லா மக்களிடமும் காணக்கூடிய ஒரு பொது உணர்வான ஆண், பெண் காதல் பற்றிப் பேசுகிறது.. (இவ்விளக்கம் http://tamilvu.org/courses/degree/a051/a0514/html/a051442.htm தளத்தில் காணப்படுகிறது.)

எங்கிருந்தோ வந்த காளையும் நடைபோட, எங்கிருந்தோ வந்த வாலையும் நடைபோட, பெய்த மழை இருவரையும் ஒதுங்க வைச்சிருக்கு. ஒதுங்கிய இடத்தில ஆளையாள் பார்க்காமலே, தாம் வந்த வழியை எண்ணிப் பார்த்திருக்காங்க... இன்றைய வசதிகளற்ற மண் வழி(வீதி); சிவப்புக் (செம்மை) கலந்த மண் வழி(வீதி); வெண்மையான மழைநீர் கொட்டி, வழியில்(வீதியில்) தெறித்து மண் கரைய வெண்நீரும் (மழைநீர்) செந்நீராக (மண்ணும் மழைநீரும் கலந்த) மாறியதைப் பார்த்திருக்காங்க... வழியை(வீதியை) பார்த்துக்கொண்டே தம் உள்ளத்தில் ஆளையாள் எண்ணிப் பார்த்திருப்பாங்க... என்றவாறு பாபுனைந்த பாவலரின் பார்வை அமைந்திருக்கிறது.

அறியாதவர் தெரியாதவர் சந்தித்தால் ஒருவரை ஒருவர் அறிய முனைவர். அதுவும் எதிர்ப்பாலார் சந்தித்தால் ஒருவரை ஒருவர் எண்ணிக்கொள்ள அதிகம் (முக்கியமாகக் காதல்) இருக்கலாம். சந்தித்தவர்கள் பிரியும் போது சிறு உளமாற்றம் இருக்கத்தானே செய்யும். இந்தச் சங்ககாலத்து இலக்கியப் பாடலைப் புனைந்தவர் இவற்றை எல்லாம் கருத்திற்கொண்டு மழைக்கு ஒதுங்கிய வேளை வெண்நீரும் செந்நீரும் போல ஒருவர் உள்ளத்தில் ஒருவர் கலந்துவிட்டதாகக் காதல் அரும்பிவிட்டதாகப் பாடிமுடிக்கிறார். இப்பாவைப் புனைந்தவர் யாரென்று அறியப்படாமையால்; அவரை, "செம்புலப் பெயல்நீரார்" என்று அவர் கையாண்ட உவமையினையே காரணப் பெயராகக் கொண்டு பதிவு செய்திருக்கிறார்கள் போலும்.

பாப்புனைய முனைவோருக்கு செம்புலப் பெயல்நீரார் பாடல் நல்லறிவைப் புகட்டும் என நம்புகிறேன். அவரது பாடலமைந்த சூழலும் பாட்டில் வெளிப்படுத்திய கருத்தும் ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். மழையால் நிகழ்ந்த சூழல் மாற்றத்தையும் மழைக்கு ஒதுங்கியவர்களின் உள்ளத்து மாற்றத்தையும் உவமித்துப் பாபுனைந்த திறத்தைப் படித்துச் சிறந்த பாக்களை நாம் புனைய முயல்வோம்.

சொந்தம் பந்தம் தெரியாது போனாலும்
எந்தன் பார்வை உந்தன் அழகிலே
முந்திப் பிந்தி அறியாது போனாலும்
இந்தக் கணம் உன்னில் விழுந்தேனே
"வந்த மழைக்கு வந்தொதுங்கியே!"

இப்படி ஒரு குறும்பா நான் புனைந்தால், அழகிலே விழுந்தாகப் பொருள் கொள்ளலாம். அப்படியாயின் சூழலை மறந்து கீழ்த்தரமான எண்ணத்தில் எழுதியதாகக் கருத்திற்கொள்ள வேண்டியிருக்கும். எனவே எதுகை, மோனை அமைந்தால் போதாது உவமை, ஒப்பீடு, உயர்ந்த எண்ணம் எல்லாமே பாப்புனைய முனைவோர் தெரிந்திருக்க வேணடுமே!

பிற அறிஞர்களின் பதிவுகளுடன் மீண்டும் சந்திப்பேன்.
(தொடரும்)

Sunday, September 8, 2013

சாதனையை நோக்கி 75 மணி நேரத் தொடர் கவியரங்கம்


சாதனையை நோக்கி 75 மணி நேரத் தொடர் கவியரங்கம் ஒன்றை,
தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் 03/01/2014 வெள்ளிக்கிழமை அன்று சென்னையில் நடாத்தவுள்ளது, உலகெங்கும் தமிழ் பரவ, உங்கள் பாவண்ணத்தையும் வெளிப்படுத்த முன் வாருங்கள். இந்நிகழ்வு பற்றிய எல்லாத் தகவல்களையும் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் படிக்கலாம்.
http://tamilkavinjarsangam.yolasite.com/75hours-kaviarankam.php

"தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்" யார் என்று நீங்கள் அறிந்திருப்பீர்கள். இவர்கள் "திருக்குறளே தேசிய நூல்" என்பதை
மையப்படுத்தி மாநாடு ஒன்றினை 2013 ஜுன் 16-ம் திகதி அம்பத்தூர், ஜி.கே மாளிகை, சென்னையில் சிறப்பாக நடாத்தி இருந்தைமை யாவரும் அறிந்ததே! அன்றைய நாள் "திருக்குறளே தேசிய நூல்" என்ற கவிதைத் தொகுப்பு நூலினையும் வெளியிட்டுள்ளனரே! அந்நூலில் இடம் பெற்ற எனது கவிதையினைக் கீழே பார்வையிடலாம்.

திருக்குறளே தேசிய நூல்

நாற்சீரும் முற்சீருமாய் ஈற்றில் தனிச்சீருமாய்
ஏற்றதொரு அறிவை ஊட்டிவிடவே
ஒன்றே முக்காலடி வெண்பாப் பாடிய
இன்றே நினைப்பாய் வள்ளுவரை!

வள்ளுவர் பாடிய 1330 குறளில்
கிள்ளிக் கிள்ளிப் படித்துச் சுவைக்க
அள்ள அள்ள வற்றாத அறிவுக்கடல்
மெள்ள முப்பாலில் ஊற்று எடுக்குமே!

எடுத்த எடுப்பிலே அகரந் தொட்டு
கொடுத்த அறம் (தர்மம்), பொருள், இன்பம் (காமம்) என
நம்மாளுகளின் வாழ்வை விளக்கும் வழிகாட்டல்
எந்நாளும் நமக்குத் திருக்குறளே நன்நூல்!

நன்நூலாம் திருக்குறள் சுட்டும் முப்பாலில்
நன்றே பாயிரம், இல்லறம், துறவறமாக
அறத்துப்பாலில் ஊழியலும் இணைத்து நான்காக
சிறப்பாகத் திருக்குறளின் முதற்பால் இனிக்குமே!

இனிக்கும் திருக்குறளில் பொருட்பாலைப் பாரும்
தனித்தனியே அரசியல், அமைச்சியல், அங்கவியல்
அடுத்துவரும் காமத்துப்பாலைக் கற்றுக் கொண்டால்
தொடுத்தார் களவியல், கற்பியலென வள்ளுவர்!

வள்ளுவர் பாடிய 133 பத்தில் (அதிகாரத்தில்)
கிள்ளியெடுக்க எல்லாத்துறை அறிவும் இருக்கே
எண்ணிப்பாரும் குறள்வெண்பா கூறிடும் முழுவறிவை
எண்ணிக்கொள்ளும் திருக்குறளே நம்தேசிய நூலென்று!

மேலும், தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்க வெளியீடாக "கவி விசை" என்னும் உலக சாதனைத் கவிதைத் தொகுப்பு ஒன்று 09/02/2013 அன்று வெளியாகியது. அதில் என் கவிதையும் இடம்பெற்றது. (சான்று: http://paapunaya.blogspot.com/2013/02/blog-post_22.html) "திருக்குறளே தேசிய நூல்" என்ற மாநாட்டில் மேலே குறிப்பிட்ட 'கவி விசை' ஆசிரியர்களுக்கு "கவி முரசு" பட்டயம் வழங்கி மதிப்பளித்துள்ளனர். அம்மதிப்பு உங்கள் யாழ்பாவாணனுக்கும் கிடைத்தது என்பதை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

Sunday, September 1, 2013

விசாகப்பெருமாள் விளக்குகிறார் - 01


அன்புள்ள உறவுகளே!
"யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்" தொடரில் பன்னிரண்டு பகுதிகளை நிறைவு செய்தேன். அடுத்த பகுதி தொடர முன் சிறு மீட்டலை மேற்கொள்ள எண்ணி விசாகப்பெருமாள் எழுதிய "யாப்பிலக்கணம்" நூலில் இருந்து சிறு பகுதியைக் கீழே தருகின்றேன். இப்பகுதியில் அசை, சீர் பற்றிய கேள்விகளும் விளக்கங்களும் உள்ளடங்கி இருக்கிறது. அடுத்த பகுதி அடுத்த பதிவில் தர விரும்புகிறேன்.


இப்பகுதி பாபுனைய முனைவோருக்கு நல்ல பயனைத் தருமென நம்புகின்றேன். இந்நூலை எனது மின்நூல் களஞ்சியத்தில் இருந்து பதிவிறக்கலாம்.