Saturday, May 31, 2014

பாவலன்(கவிஞன்) பிறப்பதில்லை


தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில்
09/2011 காலப்பகுதியில்
சரவணன் என்னும் நண்பரின் பதிவில்...
இதோ அவரது பதிவு:

” காதலி “
***************
கல்லாதவனையும்
கவிஞனாக்கும்
ஆசிரியை!

சரவணன் என்னும் நண்பருக்கு எதிராக எதனையும் குறிப்பிட்டிருந்தால் என்னைச் சுட்டுக் கொல்லவும்.

இதோ என் தாக்குரையும் திறனாய்வும்:

"கல்லாதவனையும்
கவிஞனாக்கும்
ஆசிரியை!" என்னும்
துளிப்பா(ஹைக்கூ) தரும் பொருள்
எல்லோரும் வழமையாகப் பாடும்
பாடுபொருளே!
இத்துளிப்பாவை

” காதலன் “
***************
கல்லாதவளையும்
கவிஞையாக்கும்
ஆசிரியன்!

இப்படியும் எழுதலாமே!

எழுதும் போது
இப்படியும் அமையலாம் என
இரண்டு பக்கத்தையும்
பார்த்து எழுதாவிட்டால்
உங்களுடையதைப் படித்த ஒருவர்
நீங்கள்
சேர்த்துக் கொள்ளத் தவறியதை
தனது கவிதையாக
எழுத வாய்ப்பு இருக்கிறதே...
அதேவேளை
உங்களுடைய கவிதை
முழுமையடையாமல் போகிறதே!

கவிதை தரமானது
ஆனால்
காதலன் கூற்றே!
அப்படியாயின்
காதலியின் கூற்றையும் கூறி
பாவலன்(கவிஞன்) கருத்தாக
உங்கள்
முடிவையும் சொல்லி வைக்கலாமே!
எடுத்துக்காட்டாக:

"என்னைப் பாவலர்(கவிஞர்) ஆக்கியதும் அவளே...
என்னைப் பாவலர்(கவிஞர்) ஆக்கியதும் அவனே...
காதலாகியோர் சொல்லும் கதை!" என்று
எழுத்தை ஆள முற்பட்டால்
உங்கள்
தனித்துவம் புலப்படுமே!

காதலிக்கையிலோ
காதலித்துத் தோல்வி உற்றதாலோ
வறுமைப்பட்டதாலோ
துன்பப்பட்டதாலோ
துயரப்பட்டதாலோ
ஏன்
மகிழ்வுற்றதாலோ
கவிதை வரலாம் தானே!
அது தான் பாருங்கோ
தான் உள்வாங்கியதை
தான் உணர்ந்ததை
வெளிப்படுத்த நினைக்கும்
எவருக்கும்
கவிதை தானாகவே ஊற்றெடுக்கும்!

"பாவலன்(கவிஞன்) பிறப்பதில்லை - அவன்
சூழலால் உருவாக்கப்படுகிறான்!" என்பதை
உள்ளத்தில் இருத்தி
உங்களுக்குள்ளும்
பா(கவிதை) எழுத வருமென
எழுதுகோல் ஏந்துங்கள்!

தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் - கன்னியாகுமரி அவர்களின் கருத்து:

"உங்களுடையதைப் படித்த ஒருவர்
நீங்கள்
சேர்த்துக் கொள்ளத் தவறியதை
தனது கவிதையாக
எழுத வாய்ப்பு இருக்கிறதே..."
இது யோசிக்க வைக்கிறது.

அதற்கு
என் பதில் இப்படி இருந்தது:

முழுமையான படைப்பே
தரமானதாயின்
இரண்டு பக்கங்களையும்
பொருட்படுத்த வேண்டுமென்றேன்...
அவரவர்
பதிவுகளை ஆக்கும் போது
வந்த கற்பனையை
அப்படியே எழுதினாலும்
எழுதிய பதிவை
வாசிப்பவர் எண்ணங்களில்
என்ன தோன்றும் என்பதை
கருத்திற் கொள்கிறோமே!
பதிவை வாசித்த
மற்றைய படைப்பாளிகள்
ஆணொருவர்
பெண் குறித்துப் பாடியதைப் பார்த்து
பெண்ணொருவர்
ஆண் குறித்துப் பாடியது போல
எழுத வாய்ப்பிருக்கிறது என்பதையே
சுட்டிக் காட்டினேன்!
இதனால் பாருங்கோ
சிறந்த படைப்புகளை
படைப்பாளிகள் எழுதுவார்கள் என
நான் நம்புகின்றேன்!

Wednesday, May 28, 2014

பாப்புனைக - கள்ளுக் குடித்தவர் பெண் பனையோடு மோதினால்...

1961 இல் யாழ்ப்பாணப் பிரதேசக் கலைமன்றம், நாட்டுப்பாடல் நடன நாடகக்குழு வெளியிட்ட "வாய்மொழி இலக்கியம்" என்ற பொத்தகத்தில் இருந்து "என் செய்வாய் பெண் பனையே" என்ற தலைப்பில் நாட்டார் பாடலொன்றைப் படித்துச் சுவைத்தேன். அதாவது, கள்ளுக் குடித்தவர் வெறியேறியதும் கதைத்துக்கொள்ள ஆளின்றி பெண் பனையோடு பேச்சுத் தொடுப்பதாக அப்பாடல் அமைந்திருந்தது. அதற்குப் பெண் பனை  பதிலளிப்பதாக பனையின் சிறப்பைப் பகிருவதாக அப்பாடல் அமைந்திருந்தது.

அதனைப் படிக்கு முன் மேற்காணும் கதைக்கு ஏற்பப் பாப்புனைய முயற்சி செய்வோமா!
வெறியேறிய கள்ளுக் குடித்தவர் இப்படிப் பெண் பனையைக் கேட்பதாக எண்ணிப் பாருங்கள். இவ்வாறு உங்கள் எண்ணத்தைக் கொட்டிப் பாப்புனைக.

பெண் பனையே! பெண் பனையே!
கள்ளுக் குடித்தேன் நானே...
குடிச்ச புளிச்சல் கள்ளு
உன்னாலே என்னதான் பண்ணுவாய் என்றே
என்னாலே உன்னைக் கேட்க வைக்குதே!

பெண் பனைக்கு வாயிருந்தால் கள்ளுக் குடித்தவரை எப்படியெல்லாம் கேட்டிருக்கும். பனை சார்பாகக் கீழே இருப்பது எனது கைவண்ணம். உங்கள் மூளைக்கு வேலை கொடுங்கள்; தோன்றும் உங்கள் எண்ணத்தைக் கொட்டிப் பாப்புனைக.

சீவல் தொழிலாளி வெட்டி வீழ்த்திய
பச்சையோலைப் பக்கம் தள்ளாடி வந்தால்
கருக்குகள் உன் காலறுக்குமே!
வீசும் காற்றோடு மோத இயலாத
காவடியாடும் காவோலை விழுந்தால்
விழுந்த வீச்சிலே உன் கழுத்தறுக்குமே!
என் அடிப்பகுதில் இருந்து - நீ
என் உச்சிப்பகுதியை அண்ணாந்து பார்த்தால்
வானத்து ஞாயிற்று வெயில் எறிக்க
உன் கண்ணைத் தாக்க - நீயும்
பிடரியில் அடிவிழ வீழ்வாய் என்பேனே!

உங்கள் யாழ்பாவாணன் ஒரு சின்னப் பொடியன் ஆகையால் அவரது எண்ணம் பெரிதாக அமையாவிட்டாலும் பரவாயில்லை. பாபுனைய விரும்பும் எல்லோரும் இவ்வாறு முயற்சி எடுக்கலாம் தானே. நீங்கள் முயற்சி எடுத்ததையும் கீழே தரப்படும் நாட்டார் பாடலையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.
வாய்மொழி இலக்கியம்
உண்மையில் நாட்டுப் பாடல்கள் தூய தமிழிலேயே உள்ளன. அதேவேளை இசை, இலக்கணம், எளிமையான சொல்லாட்சி எனப் பல இருப்பதால் தான் அவை இன்றும் வாழ்கின்றன. உங்கள் முயற்சியையும் மேற்காணும் பாடலையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

ஒவ்வொருவர் எண்ணமும் வேறுபடுவது இயல்பு. எனவே, பலரது படைப்புகளை ஒப்பு நோக்குவதன் மூலம் ஒவ்வொருவரது எண்ணம், எழுத்து, நடை, பாபுனையும் ஆற்றல் ஆகியவற்றை அறிய முடியுமே! மேலே தரப்பட்ட பாடல் உள்ள பொத்தகத்தைப் பதிவிறக்கக் கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கித் தேடுக.

https://mega.co.nz/#F!dVh3SIab!UiF3-DAnSBR9T3LWAGF0cg!hdp2UDoQ

Sunday, May 11, 2014

அன்னையர் நாள் பற்றிப் பாப்புனைய வாருங்கள்!

பாப்புனைய இறங்கு முன் அன்னையர் நாள் பற்றி எண்ணிப் பாருங்கள். அம்மா எல்லோருக்கும் பொதுவான உறவு. எல்லோரும் அம்மா  வயிற்றில் கருவாகி, உருப்பெற்று, அம்மாவின் வயிற்றை உதைத்து தள்ளி, தாய் மண்ணில் தவழ்ந்து, தலை நிமிர்ந்து நடை போட வைத்த அந்த அம்மாவை நினைவூட்டும் நாளாக அன்னையர் நாள் விளங்குகிறதே!

அடுத்து, அம்மாவை நினைவூட்டும் பிறர் பாக்களை/கவிதைகளை, திரைப் பாடல்களை நினைவுபடுத்துங்கள். ஆயினும், அம்மாவைப் பிரிந்திருந்த வேளை உங்கள் உள்ளத்தில் எழுந்த அம்மாவின் அருமையை எண்ணிக்கொள்ளுங்கள். இனி அந்த அம்மாவை நினைவூட்டும் அன்னையர் நாள் பற்றிப் பாப்புனைய முயலுங்கள்.

ஆயினும், தங்கள் பாவில் பிறர் எழுதிய அடிகள் வராதவாறு பேணவும்.  எப்படியோ, ஓரிரு அடிகள் வந்தே ஆகவேண்டும் என இருப்பின் யாருடைய அடிகளைப் பொறுக்கி எழுதுகிறோம் எனச் சுட்டிக்காட்ட வேண்டும். இல்லையேல் எம்மை இலக்கியத் திருடர்கள் என்று தான் அழைப்பார்கள்.

எடுத்துக்காட்டாக மன்னன் படத்தில் "அம்மா என்றழைக்காத உயிரில்லையே" என்ற பாடலடியைத் தங்கள் பாவில் இணைக்க விரும்பினால் பின்வருமாறு கையாளலாம்.

அன்னையர் நாளாம் இன்றென அறிய
"அம்மா என்றழைக்காத உயிரில்லையே" என்ற
மன்னன் படப்பாடலை மீட்டுப்பார்க்கிறேன்!

இனி, உங்கள் சொந்த எண்ணங்களில் விளைந்த பாவண்ணத்தைப் பார்ப்போமா... என்னை ஈன்றவளும் அம்மா, அம்மாவை ஈன்றவளும் அம்மா என நீங்கள் அறிந்தால் கீழ்வரும் அடிகளை ஆக்கலாமே!

அன்னையை ஈன்றவளும் அன்னையே
என்னையை ஈன்றவளும் அன்னையே
உன்னையை ஈன்றவளும் அன்னையே
அன்னையே சான்றாவள் என்னையே
பிள்ளையென உலகுக்கு உரைக்கவே!

எம்மைப் பெத்து வளர்த்து ஆளாக்கிய அம்மா பட்ட துன்பம், துயரம் ஏராளம் இருக்கும். அவற்றை அம்மாவைப் பிரிந்திருந்த வேளை எண்ணிப் பார்த்திருப்பியளே! அவற்றை எழுதினால் கூட பா/கவிதை வருமே!

வெந்து கொண்ட வயிற்று அன்னை
நொந்து கொண்டே பாலூட்டிய அன்னையே
நொந்து பெத்த அன்னை - என்னை
நொந்து கொள்ள விடாத அன்னையே
பிள்ளைகள் நாம் மறப்போமா!

எம்மை ஈன்ற போது தாய் பட்ட துயரையும் தான் நொந்தாலும் எம்மை நோகாமல் வளர்த்த தாய் பற்றி எழுதினோம். இனி, அப்பா அடிக்க வந்தாலும் அம்மா அடிக்க விடமாட்டார். அதைப் படிக்கிற காலத்தில அறிந்திருப்பியள். அதுபற்றி அடுத்துப் பார்ப்போமா!

படிக்காத வேளை பார்த்தும் - என்னை
அடிக்காது அன்பு காட்டிய அன்னையே
படிக்க வைக்க முயன்றாள் - என்னை
அடிக்காது அறிவு ஊட்டிய அன்னையே
படித்தவரானோம் எம் அன்னையாலே!

பாப்புனைய விரும்பும் உள்ளங்களே! மேலே எப்படி எண்ணமிட்டு எப்படிப் பாப்புனைய முயன்றிருக்கிறேன் என்பதை விரித்திருக்கிறேன். பாப்புனைந்த வேளை சொல்கள் அமைந்த அல்லது அமைத்த ஒழுங்கு பற்றி அறிய விரும்பி இருப்பியளே!

அன்னையை, என்னையை எனச் சொல்கள் அமைந்த அல்லது அமைத்த ஒழுங்கில் குறிலடுத்து 'ன்' வரவும் வெந்து, நொந்து எனச் சொல்கள் அமைந்த அல்லது அமைத்த ஒழுங்கில் குறிலடுத்து 'ந்' வரவும் படிக்காத, அடிக்காது எனச் சொல்கள் அமைந்த அல்லது அமைத்த ஒழுங்கில் குறிலடுத்து 'டி' வரவும் எதுகை அமைத்துள்ளேன்.

சீர்கள் / சொல்கள் முதலெழுத்துப் பொருந்தி வர அமைதல் மோனை என்றும் சீர்கள் / சொல்கள் ஈராமெழுத்துப் பொருந்தி வர அமைதல் எதுகை என்றும் அறிவீர்கள். மரபுக் கவிதை அல்லது புதுக் கவிதை எதுவானாலும் எதுகை, மோனை அமையப் பாப்புனைந்தால் தான் இசையோடு படிக்கச் சுகமளிக்கும்.

அன்னையை ஈன்றவளும் அன்னையே
என்னையை ஈன்றவளும் அன்னையே
உன்னையை ஈன்றவளும் அன்னையே
அன்னையே சான்றாவள் என்னையே
பிள்ளையென உலகுக்கு உரைக்கவே!

வெந்து கொண்ட வயிற்று அன்னை
நொந்து கொண்டே பாலூட்டிய அன்னையே
நொந்து பெத்த அன்னை - என்னை
நொந்து கொள்ள விடாத அன்னையே
பிள்ளைகள் நாம் மறப்போமா!

படிக்காத வேளை பார்த்தும் - என்னை
அடிக்காது அன்பு காட்டிய அன்னையே
படிக்க வைக்க முயன்றாள் - என்னை
அடிக்காது அறிவு ஊட்டிய அன்னையே
படித்தவரானோம் எம் அன்னையாலே!

பாப்புனைய விரும்பும் உள்ளங்களே! மேற்படி பாப்புனைந்த பின் என்ன தலைப்பிட்டிருப்பியள்? அன்னையர் நாளில் எண்ணிய எல்லாம் எழுதியமையால் 'அன்னையர் நாளில் எண்ணிய சில...' என்று தலைப்பிட்டுக் கொள்வோமா! ஏனையா, இப்படிப் பாப்புனைய எடுத்துரைத்தேன்? உங்கள் கைவண்ணத்தால் ஆன பாவண்ணத்தால் உலகெங்கும் தூய தமிழ் பரப்பிப் பேணவே!

Thursday, May 1, 2014

புலவர் வெற்றியழகன் பொய் சொன்னாரா?


இனிய உறவுகளே!
நான் புதன், சித்திரை 30, 2014 அன்று "கவிதை" என்பது வடமொழியா? எனும் பதிவைப் பதிவு செய்திருந்தேன். அப்பதிவைப் புலவர் வெற்றியழகன் அவர்களின் நூலில் (பக்கம்-64, பக்கம்-111; நூல்: யாப்பரங்கம்; ஆசிரியர்: புலவர் வெற்றியழகன்; வெளியீடு: சீதை பதிப்பகம், சென்னை - 600 004.) இருந்து பெற்ற தகவலை வைத்தே எழுதினேன். அதாவது, கபி என்றால் குரங்கு என்றும் கவி என்றால் குரங்கில்லை என்றும் கபி, கவி, கவிஞன், கவிதை என்பன தமிழ் சொல்களெனப் படித்தேன். அதன் வெளிப்பாடே "கவிதை" என்பது வடமொழியா? (http://paapunaya.blogspot.com/2014/04/blog-post_30.html) என்ற பதிவு. எனது பதிவைப் படித்த அறிஞர்களின் பதில் கருத்து, "புலவர் வெற்றியழகன் பொய் சொன்னாரா?" என்ற ஐயத்தை ஏற்படுத்திவிட்டது.

"கவி - கவிஞன் என்ற இரண்டு சொற்களும் வடமொழியே
கவிஞன் கவிதை இரண்டும் அயற்சொல்
புவியும் அதுவெனப் போ!" என்ற
கவிஞா் கி.பாரதிதாசன் (தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு) அவர்களின் கருத்து, எனக்கு ஐயம் ஏற்படக் காரணம் ஆயிற்று.

உடனடியாக வலைகளில் பொருள் தேடி அலைந்த போது கிடைத்த பெறுபேறுகள் புலவர் வெற்றியழகன் அவர்களின் கருத்துக்கு முரணாகச் சில இருந்தன.

http://www.tamilvu.org/slet/servlet/srchlxpg?editor=%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF&key_sel=Tamil&GO.x=44&GO.y=13 என்ற இணைப்பைச் சொடுக்கிப் பாருங்கள். ஆங்கொரு வரியில் "குரங்கு. கவிக்குல மவற்றுக்கெல்லாம் நாயகன் சுக்கிரீவன் (கம்பரா. உருக்காட்:29)." என்றிருந்தது. ஆயினும், புலவர் வெற்றியழகன் அவர்கள் தெரிவித்த கருத்தும் இருந்தது.

http://ta.wiktionary.org/s/gy6 என்ற  இணைப்பைச் சொடுக்கிப் பாருங்கள். அதிலும் கவி என்றால் குரங்கு என்றும் இருந்தது.

என் உள்ளம் நிறைவடையவில்ல; மீண்டும் தேடினேன்.

http://ta.wiktionary.org/s/4jt6 என்ற  இணைப்பைச் சொடுக்கிப் பாருங்கள். அங்கே கபி என்றால் குரங்கு என்று நேரடியாகச் சுட்டப்பட்டிருந்து.

இவற்றைக் கருத்திற் கொண்டு கபி என்றால் குரங்கு என்பதை கவி என்றால் குரங்கு என்றும் புழக்கத்தில் வந்திருக்கலாம் தானே! தொல்காப்பியக் காலத்தில் இல்லையாம், நன்னூல் காலத்திலேயே தமிழ்-வடமொழிக் கலப்பு இடம் பெற்றிருக்கலாம் எனத் தனது நூலில் புலவர் வெற்றியழகன் அவர்கள் தெரிவிக்கின்றார். எனவே, புலவர் வெற்றியழகன் அவர்கள் கபி, கவி, கவிஞன், கவிதை என்பன தமிழ் சொல்கள் எனச் சான்றின்றித் தெரிவித்திருக்க மாட்டார்.

எனவே புலவர் வெற்றியழகன் அவர்களின் கருத்துப்படி கபி, கவி, கவிஞன், கவிதை என்பன தமிழ் சொல்கள் இல்லை என்று கூற முடியாதுள்ளது. இந்நான்கு சொல்களும் தமிழ் சொல்கள் இல்லை என்பதற்கு உங்களால் சான்று பகிர முடியுமா? இல்லையேல், தமிழ் சொல்கள் என முற்றுப்புள்ளி வைக்கலாமா? அறிஞர்களே! உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்.