Friday, October 18, 2013

சுகமாகப் பா (கவிதை) புனைய

இலக்கியம் தோன்றிய பின் இலக்கணம் தோன்றியதாகக் கூறப்பட்டாலும் இலக்கியம் படைக்க இலக்கணம் தேவையற்ற ஒன்று என எண்ணிவிட முடியாது. அதாவது, எந்தவொரு இலக்கியத்தைப் படைக்க முயன்றாலும் அதன் வடிவம் குறித்தவொரு இலக்கணத்தை ஒட்டியே காணப்படுகிறது. தமிழ் இன்னும் வாழுகிறது என்றால், அதில் காணப்படும் இலக்கண வரையறை தான் காரணம் என்பேன்.

இலக்கண வரையறை அல்லது சொல்லாட்சி (தூய தமிழ் சொல், அசைசீரால் அமைந்த சொல், தனியசையாலோ தனியெழுத்தாலோ ஆன சொல்) அல்லது குறியீட்டுப் பாவனை என ஏதாச்சும் நம்மாளுகள் தெரிந்து வைத்துப் பாபுனையலாம். மரபுக்கவிதை, புதுக்கவிதை ஆகிய இரண்டு தரப்புக் கவிதைகளை வாசித்து மகிழ (இரசிக்க) ஒரு தனிப் பக்குவம் தேவைப்படுகிறது. சிலர் கவிதை எழுதினால் பலருக்குப் பொருள் விளங்குவதில்ல. எல்லாவற்றுக்கும் பாட்டு இலக்கணம் தான் காரணம். வாசகரும் வாசித்து மகிழ (இரசிக்க) பாட்டு இலக்கணம் சற்றுத் தெரிந்திருந்தால் நன்மை தருமே!

புதுக் கவிதையை இலகுவாகப் புரிவதற்கு இலக்கணப் பிணக்கில்லாமையே காரணம். இலக்கணப் பயிற்சி உள்ளவருக்கு மரபுக் கவிதை கூட இனிக்கிறதே! முடிவாக இருவகைக் கவிதையுமே தரமானவை தான். ஆனால், வாசகர் எண்ணிக்கை எதற்குக் கூட என்பது வாசகரின் மொழியாளுமையிலும் தங்கியிருக்கிறதே!

எடுத்துக்காட்டாக மரபுக்கவிதை, புதுக்கவிதை இரண்டையும் எடுத்துக்கொள்வோம். மரபுக்கவிதை என்றால் இலக்கணம் வேண்டுமென என எண்ணி, இலக்கணம் ஏதுமில்லாத புதுக்கவிதையை எவரும் எழுதிவிடலாமென எழுத முன்வரக்கூடாது. புதுக்கவிதைக்கும் இலக்கணம் உண்டென்பதை மறந்துவிடாதீர்கள்.

எவர் சொன்னார் புதுக்கவிதைக்கு இலக்கணம் இல்லை என்று? வரிக்(வசன)கவிதைக்கும் இலக்கணம் உண்டே!

உணர்வு வீச்சை அல்லது மூச்சான வரித்துண்டை முழுமையடையாத வரியாக எழுதுவதே புதுக்கவிதை!
எ-கா:
ஆவென்று அலறியவள்
"அம்" எனக் குழந்தை அழுகை கேட்க
அடங்கினாள் ஈன்ற தாய்!

உணர்வு வீச்சை, மூச்சான வரியாக முழுமையான வரியாக எழுதுவதே வரிக்(வசன)கவிதை!
எ-கா:
மகப்பேற்று வலியால் அவள் அழுகிறாள்.
குழந்தையின் அழுகை ஒலி கேட்க, அவளின் அழுகை குறைந்தது.

இவ்வாறான இலக்கணக் கோட்பாட்டோடு எழுதப்பட்ட கவிதைகளாகவே புதுக்கவிதையையும் வரிக்(வசன)கவிதையையும் நான் கருதுகிறேன். முடிவாக எந்தவொரு கவிதைக்கும் இலக்கணம்  இருக்கிறது. ஆனால், மரபுக் கவிதைக்குச் சற்று இலக்கணம் அதிகம் என்பேன். அதாவது அசை, சீர், அலகிடுதல், அடி, தொடை, பாவினம் போன்ற அறிவு தெரிந்திருந்தால் நன்று.

இதனடிப்படையிலேயே யாப்பறிந்து பாபுனைய வாருங்கள் என்ற தொடரை எழுதி வருகின்றேன். மேலும் "பாபுனையத் தெரிந்து கொள்வோம்" என்ற தலைப்பில் இவ்வலைப்பூப் பட்டி(Menu)யில் அடிப்படை இலக்கணத் தெளிவைத் தரக்கூடிய நூலொன்றை இணைத்துள்ளேன். (படிக்க: http://paapunaya.blogspot.com/p/blog-page_18.html) அதேவேளை விசாகப்பெருமாளின் யாப்பிலக்கணம் நூலைப் பகுதி பகுதியாகப் பதிவு(Posting) செய்கிறேன். இதேநோக்கில் இன்னும் பல அறிஞர்களின் நூலை இவ்வலைப்பூவில் இணைக்க எண்ணியுள்ளேன்.

எனது மின்நூல் களஞ்சியத்திலும் சுகமாகப் பா (கவிதை) புனைய "பாட்டு இலக்கணம்" என்ற பகுதியில் (Folder இல்) பல நூல்களைத் திரட்டி வைத்துள்ளேன். இவ்விணைப்பைச் http://wp.me/PTOfc-58 சொடுக்கி "தமிழறிஞர்களின் மின்நூல்களைப் பார்வையிட இங்கே சொடுக்கவும்." என்ற இணைப்பைச் சொடுக்கி அத்தனை நூல்களையும் பதிவிறக்கிப் படிக்கலாமே.

முடிவாகச் சொல்வதாயின் இன்றைய வாசகருக்காக படைப்பாளிகள் இலக்கணமின்றிய இலக்கியங்களை ஆக்கினாலோ அதனை வாசகர் ஏற்றுக்கொண்டாலோ தமிழ் அழிவது உறுதி. எனவே படைப்பாளிகள் இலக்கண வரையறையைக் கடைப்பிடித்தே இலக்கியம் எழுத வேண்டும். வாசகரும் அடிப்படை இலக்கண வரையறைகளைத் தெரிந்துகொண்டு நல்ல, இறுக்கமான, தரமான இலக்கியங்கள் மலரப் படைப்பாளிகளுக்கு ஒத்துழைப்பு நல்கினால் மட்டுமே தமிழை அழியாது பேணமுடியும்.

புதிதாகப் பாபுனைய விரும்பும் எல்லோரும் சுகமாகப் பா (கவிதை) புனையத் தேவையானவற்றைக் கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் படைப்புகள் இலக்கண வரையறையுடன் உயர்தரமாக இருப்பின் பேரறிஞர்களின் பாராட்டுகளைப் பெற வாய்ப்புண்டு. எளிமையாக இருப்பின் வாசகர் எண்ணிக்கை பெருகுமென நம்பினால்; அவ்வாறாக எழுதப்படும் இலக்கியங்கள் விரைவில் மறைந்துவிடும் அல்லது மக்கள் மத்தியில் நிலைத்திருக்காது என்பதை மறக்கவேண்டாம்.