Thursday, May 16, 2013

வளர்ப்புத் தாயிற்கு முலையில பாலூறாது


ஏதாவது
எழுத வேண்டும் என எண்ணினேன்
எழுத்துகள் வந்தன
சொல்கள் வந்து குவிந்தன
மீண்டும்
எதை எழுதலாமென எண்ணினேன்
பா புனைய உள்ளமும் உடன்பட்டது
பாவிலே
துளிப்பா, குறும்பா, புதுப்பா...
ஆசிரியப்பா, வெண்பா, வஞ்சிப்பா, கலிப்பா...
இன்னிசைப் பா என
எத்தனையோ என்னுள் மோதின
பாவைத் தெரிவு செய்வதற்கிடையில்
எழுதுகோலுக்கு மூச்சுப் போயிடுமென
எழுதத் தொடங்கினேன்!
அடுத்த வீட்டில்
"ஆவென்று அழுதது குழந்தை"
அப்படியே எழுதினேன்
குழந்தை ஏனழுமென எண்ண
"பாலென்று பிஞ்சழும் எனஎண்ணி" என
இரண்டாம் அடியைத் தொடுத்தேன்
மூன்றாம் அடியைத் தேடுகையில்
"பாலென்று பருக்கிட இயலாதவள்" என
மூன்றாவது அடியும் தலை நீட்டியதே!
வேண்டி வளர்ப்பவளுக்கு
மார்பை நெரிச்சுப் பிழிந்தாலும்
முலையால் பால் வராதென எண்ணி
"தானென்று தன்னையே நோவாள்
ஏனென்று எண்ணாமல் வளர்ப்பவள்" என
முடிக்க முனைந்த போது
"வளர்ப்புத் தாயிற்கு முலையில பாலூறாது" என
தலைப்பும் தானாக வந்ததே!
படித்துப் பாருங்கள்
நான் புனைந்த பாவிது!

ஆவென்று அழுதது குழந்தையுமே
பாலென்று பிஞ்சழும் எனஎண்ணி
பாலென்று பருக்கிட இயலாதவள்
தானென்று தன்னையே நோவாள்
ஏனென்று எண்ணாமல் வளர்ப்பவள்!

நானே
படித்துப் பார்த்த பின்
எனக்கோ குழந்தைகளில்லை
விருப்புக்கொரு குழந்தை வேண்டி
விரும்பியே வளர்க்கையில்
என்னவளும்
இப்படித்தான் துன்புறுவாளென
எண்ணிப் பார்க்கையிலே
என் உள்ளம் நோகிறதே!

4 comments:

  1. //வளர்ப்புத் தாயிற்கு முலையில பாலூறாது //

    75 ஆண்டுகளுக்கு முன் நடந்த உண்மைச் சம்பவம். ஒரு பிள்ளை பிறந்ததும் தாய் இறந்து விட்டார். அப்பிள்ளையை வளர்க்கும் பொறுப்பு அம்மம்மாவுக்கு வருகிறது. அந்த அம்மம்மா பிள்ளை அழும்போது தன் முலையைச் ஊட்டுவாராம். தொடர்ந்து பிள்ளை ஊட்டிய சில வாரங்களில் அவருக்குப்
    பால் சுரக்க ஆரம்பித்து, அப் பிள்ளை வயிறாற உண்டு , வளர்ந்து இன்றும் வாழுகிறார்.
    இதை நான் காணவில்லை. கூறக் கேட்டுள்ளேன். அந்த அம்மம்மா, பிள்ளை எனது உறவினரே!
    அவர் காலத்தில் புட்டிப்பாலில்லை. பசும் பால் அல்லது ஊரில் வேறு குழந்தை பெற்றவர்கள் இருந்தால், தாயில்லாப் பிள்ளைகளுக்கும் பாலூட்டும், பண்பும், அன்பும் அன்று இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. கடவளின் கருணையாக இருக்கலாம்.
      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.

      Delete
  2. நண்பரே.நிறைய மகளீர்களுக்கு தத்துப்பிள்ளை வந்தபின்தான் குழந்தைபேறு கிடைத்துள்ளது என்பதும் உண்மையே.காரணாம் அப்போதுதான் தாய்மை உணர்வு மேலோங்கி எல்லா அங்கங்களும் தாய்மையைப் பற்றிய உணர்வைத் தூண்டி விடும் பின்பு முலையில் பால் சுரக்கும் பின்பு அதுவே மருந்தாகி குழந்தைப் பெறும் தகுதியை வளர்த்து தாய்மை அடைத்தவர்கள் நிறையபேரைக் கண்டிருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. நம்ம ஊரிலும் தாங்கள் கூறியது போல நிகழ்ந்துள்ளது. உளவியல் நோக்கிலான மாற்றங்களால் நிகழும் நிகவே அது. தங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்கிறேன்.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.