Thursday, May 16, 2013

பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?


நிலாவில் இறங்கி
நேரில் பார்த்தது போல
தரைக்குக் கீழே
இருக்கும் நிலைமையை
படம் பிடித்தாற் போல
கருங்கல் வேலிக்கு அப்பாலே
நடப்பதைக் கூட
நேரில் கண்டது போல
மக்களாயம்(சமூகம்) என்ற
வட்டத்திற்கு உள்ளே
ஊடுருவிப் பார்த்தது போல
நேற்றைய நடப்புகளை வைத்து
நாளைய எதிர்வைக் கூறக் கூடியதாக
சூழல் மாற்றங்கள் சுட்டும்
செய்திகளைக் கூறக் கூடியதாக
மூட நம்பிக்கைகளை
தூக்கி எறியக் கூடியதாக
வருங்கால வழித்தோன்றல்களுக்கு
வழிகாட்டக் கூடியதாக
வாழைப்பழத்தில
ஊசி ஏற்றுவது போல
நல்லறிவை ஊட்டக் கூடியதாக
எந்தச் சிக்கல்களுக்கும் எளிதான தீர்வை
முன்வைக்கக் கூடியதாக
வெள்ளையனை வெளியேற்ற
பாவாலே போரிட்ட பாரதியைப் போல
பாக்களைப் புனைபவனே
உண்மைப் பாவலன்(கவிஞன்)!
செந்தமிழில் விளையாடிய
பாரதிதாசனைப் பாரும்
பொதுவுடைமைக் கருத்துகளை முன்வைத்த
பட்டுக்கோட்டையாரைப் பாரும்
கோட்பாடுகளால்(தத்துவங்களால்) குறிவைத்து
நம்மாளுகளுக்கு வழிகாட்டிய
கண்ணதாசனைப் பாரும்
மக்கள் நினைவில் உருளும்
அவர்களது பாக்களில் உள்ள
எண்ணங்களை(கற்பனைகளை)
கணக்கிட்டுப் பாரும்
கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும்
பா(கவி) பாடுமளவுக்கு
கம்பனின் பா(கவி) புனையும் திறத்தை
பலரும் உவமிப்பதையும் பாரும்
எத்தனையோ பாவலர்களைப் போல
எத்தனையோ எண்ணங்களை(கற்பனைகளை)
வெளிப்படுத்தினால் தானே
நல்ல பாவலன்(கவிஞன்) ஆகலாம்!
தெருவால போன அழகியைக் கண்டதும்
ஆடைகளைக் களைந்து
பாவிலே அழகை விவரிப்பதோ
காதலித்துத் தோல்வி கண்டதாலோ
காதல் உணர்வு தோன்றியதாலோ
பாவிலே காதலை விவரிப்பதோ
பாவலன்(கவிஞன்) என்று
அடையாளப்படுத்த உதவாதே!
தெருவிலே வாழ்வோர் நிலையை
தெருவில் கையேந்துவோர் நிலையை
பட்டினி வயிற்றின் நிலையை
ஊருக்குள்ளே உள்ள சீர்கேட்டை
பணி செய்யும் இடங்களில்
இடம் பெறும் கையூட்டு நிகழ்வை
கல்வி ஊட்டுவோர்
படிப்போரைக் கெடுக்கும் செயலை
அரசுகளின் ஓட்டை உடைசலுகளை
எண்ணிப் பார்த்தால்
இன்னும் எத்தனையோ இருக்கலாம்
அத்தனையையும் பொறுக்கி
உங்கள் பாவிலே எடுத்தாள முனைந்தால்
நீங்கள் பாவலன்(கவிஞன்) தான்!
ஊரைச் சீர்படுத்தவும்
அரசை ஆட்டம் காண வைப்பதும்
உலகை ஒரு கணம் உலக்கவும்
எதைத்தான் சொன்னாலும்
பாவலனால்(கவிஞனால்)
முடியாதது ஏதுமுண்டோ?
சான்றுக்கு
கவிகாளமேகம் ஒருவரே
போதுமென்பேன்!
எந்த எழுத்தில் தொடங்கி
அந்த எழுத்திலே முடிப்பதற்கும்
எந்தச் சொல்லில் தொடங்கி
அந்தச் சொல்லிலே முடிப்பதற்கும்
எந்தப் பொருளிலும் எந்த நிகழ்வையும்
தன் பாவால் எடுத்தாண்டு
பொறாமை கொண்ட பாவலர்களை அடக்கி
அரசனிடம் பரிசு பெற்றதாக
காளமேகத்தின் பா புலமையைக் கூறும்
பொத்தகமொன்றில் படித்தேனே!
பாவலர்களாக(கவிஞர்களாக)த் துடிக்கும்
புதியவர்களே...
பாடுபொருள் மட்டுமல்ல
சிறந்த எண்ண வெளிப்பாடு
(கற்பனைத் திறன்)
பா புனையும் ஆற்றல்
எல்லாவற்றையும் கண்டு
வாசகர் களிப்படைந்தாலே
உங்கள் பாக்கள் வெற்றி பெறும்!
பாவலனாகும் எண்ணத்தில்
நான் படித்ததை
உமக்குரைத்த நான் கூட
உங்களைப் போன்ற புதிய பாவலனே!

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.