Thursday, May 16, 2013

என் கிறுக்கல்கள்


எத்தனையோ படிப்பிருக்க
இலக்கியப் படைப்பாக்குவதை
படித்தமையாலே தான்
பாக்கள், கதைகள், நகைச்சுவைகள், என
என்னென்னவோ கிறுக்குவதாக
எவரும்
நினைத்துப் போடாதையுங்கோ...
மூ.மேத்தாவின் பொத்தகத்தைப் படித்தால்
புதுப் பா(புதுக்கவிதை) எழுத வருமென்றார்கள்...
கண்ணதாசனின் பொத்தகத்தைப் படித்தால்
நல்ல பாட்டு எழுத வருமென்றார்கள்...
சொன்னவர் சொற்கேட்டுப் படித்தேன்
பாவோ(கவிதையோ) பாட்டோ
என்னாலே எழுத முடிந்ததில்லையே!
சின்னஞ் சிறு அகவையிலே
படிக்கிறதென்றால் புளிக்குமே - நான்
படிக்கையிலே புளிக்கையிலே
உள்ளத்தால் உணர்ந்ததை எல்லாம்
எழுதிப் பார்த்த போது தான்
என் கிறுக்கல்களும் பாக்களோ என
என்னாலே உணர முடிந்தது என்பேன்!
"சிவாஜி, சாவித்திரி இருவருமே
பள்ளிக்குப் போகமலிருக்க - நான்
நடிச்சது போல நடிக்க மாட்டார்களே...
பாரதிராஜா, பாக்கியராஜா இருவருமே
தேர்வு எழுதாமிலிருக்க - நான்
சாட்டுப் போட்டு ஒளித்தது போல
ஒரு படமும் இயக்க மாட்டார்களே..." என
என்னாலே உணர முடிந்ததை
எழுதுகையில் தான்
பாவோ(கவிதையோ) பாட்டோ
எழுத முடிந்ததே!
"படிப்பில பிடிப்பில்லாத வரை
எப்படித்தான் படித்தாலும்
படிப்பும் புளிக்கும் தானே...
படிக்கிறது என்பது விரும்புகிற வரை
எப்படித்தான் பார்த்தாலும்
படிப்பும் இனிக்கும் தானே..." என
என்னாலே வழிகாட்ட முடிந்ததை
எழுதுகையில் தான்
பாவோ(கவிதையோ) பாட்டோ
எழுத முடிந்ததே!
நல்ல தலைப்பைப் போட்டிட்டு
பாப்புனையக் குந்தினால்
என்னாலே பாப்புனைய முடிந்ததில்லை...
"இப்படி எழுதுகையில்
எப்படியோ பா(கவிதை) அமைகிறதே..." என
எழுதி முடிக்கையிலே தான்
தலைப்பு ஒன்றை வைத்து
பா(கவிதை) ஒன்று எழுதியதாக
நிறைவடைகிறேனே!
உண்மையைச் சொல்லப் போனால்
உள்ளம் நொந்த போதும்
மாற்றார் சுடுசொல் கேட்ட போதும்
எண்ணியதெல்லாம் எடுத்துச் சொல்ல
விரும்பிய போதெல்லாம்
தாளோடும் எழுதுகோலோடும்
விளையாடியதன் விளைவே
என் பாக்(கவிதை)கள் என்பேன்!
என் உள்ளத்தைப் புண்ணாக்கிய
என் உள்ளத்தைச் சுகப் படுத்திய
எதுவும் கூடத் தப்பாமல்
எவ்வாறு எனக்கிருந்தது என்பதை
அவ்வாறே எழுதியதால் தான்
என் கிறுக்கல்கள் கூட
பா(கவிதை) போல எனக்கிருக்கிறதே!

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.