Tuesday, September 2, 2014

உன் கழிவறையில் முணுமுணுப்பது பாட்டா? கவிதையா?

நேர்காணல் (பேட்டி) காணும் ஊடகவியலாளர்
"உங்களால் பாட முடியுமா?" என்று கேட்க
"கழிவறையில் முணுமுணுப்பேன் - ஆனால்
பாட்டா பாடவே வராது" எனப் பதில் தரும்
நம்ம திரைப்பட நடிகைகள்
கழிவறையில் படிப்பது
பாட்டா? கவிதையா?
பாட்டும் கவிதை தானே
ஓசை அழகு கவிதைக்கு அழகென்றால்
இசையோடு இசையும் பாவரிகளே
பாட்டிற்கு அழகு என்பேன்!
"என்னடி மீனாச்சி சொன்னது என்னாச்சு" என்ற
பாவரிகளில் எதுகை முட்டுவதே இசை!
"என்னத்தான் உன்னைத்தான்" என்றும்
"மயக்கமா கலக்கமா" என்றும்
பாடும் போது பாரும்
ஈற்றில் வரும் "தான்" உம் "மா" உம் தானே
இசையோடு இசைய வைக்கிறதே!
எழுதுதாளை எடுத்து
எழுத்துகோலைப் பிடித்ததும்
கவிதை வந்து விடுமா?
கவிதை வரும் வரை
எத்தனையோ எண்ணுவோம்
ஈற்றில் ஏதாவது கிறுக்குவோம்
ஓசை அழகோடு அமைந்தால்
கவிதை என்கிறோம் - அந்த
முயற்சி தானே பாடல் எழுதவும்
வழிகாட்டி நிற்கிறதே!
"பள்ளிக்குப் போகும் தோழியின்
துள்ளிப் பறக்கும் தோள் துண்டை (சோலை)
அள்ளிக் கொண்டு போனது காற்று!" என
பள்ளி, துள்ளி, அள்ளி என அமைத்து
பா/கவிதை புனைவது போலத் தான்
"என்னை நீ பார்த்த போதும்
உன்னை நான் பார்த்த போதும்
கண்கள் தானே இணைந்த போதும்
எண்ணம் தானே இணையாத போதும்
காதல் தானே துணையாக வருமா?" என
போதும், போதும், போதும், போதும் என
இசையோடு இசையும் வரிகளால்
பாடல் புனைவது இலகு அல்ல!
வழிநெடுகப் படித்தாலும் சரி
கழிவறையில் முணுமுணுத்தாலும் சரி
பாடிப் பாடிப் பழகினால் வரும்
பாடல் புனையும் ஆற்றல் என்பேன்!
"எண்ண எண்ணப் பெண்களடா
 வண்ண வண்ணக் கண்களடா" என
எடுப்பு (பல்லவி) எழுதிப் பின்
"மின்ன மின்ன நடப்பாளவை
கன்னம் நோகவே அடிப்பாளவை" என
தொடுப்பு (அனுபல்லவி) எழுதிப் பின்
"காதல் வந்து அவளைத் தொடர
மோதல் வந்து அவள் அடிக்க
கன்னம் சிவக்க அடி வேண்ட
கனவும் கலைய நானும் விழித்தேனே!" என
கண்ணி (சரணம்) அமைத்து கவிதை எழுதி
கழிவறையில் முணுமுணுத்தாலும் பாடலாகுமா?
கவிதை எழுதிப் பாடிப் பாருங்கள்
பாடலாக இருந்தால் பரவாயில்லை
பாடல் போலப் பாடிப் பாருங்கள்
பாடலாக இருந்தால் எழுதுங்களேன்...
ஈற்றில் என்னை மறந்தாலும்
எங்கள் தாய்த் தமிழை மறவாது
பாடலாக எழுதியே வெளிப்படுத்தவே
பாப்புனையத் தானே விரும்புங்களேன்!


யாப்பறிந்து பாப்புனைய வாருங்கள்-012 வரை எழுதிய, நான் புதுக்கவிதை விரும்பிகளையும் இணைத்துச் செல்லவே இடைவெளி விட்டேன். ஆயினும், விரைவில் இதனைத் தொடரவுள்ளேன்.

6 comments:

  1. இடைவெளி இன்றி தொடருங்கள் பாவாணரே,ரசிப்பதற்கு நாங்கள் தயார் !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  2. //எங்கள் தாய்த் தமிழை மறவாது
    பாடலாக எழுதியே வெளிப்படுத்தவே
    பாப்புனையத் தானே விரும்புங்களேன்!// உண்மை

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  3. நன்றாக எடுத்து சொன்னீர்கள் நன்று நன்று தொடருங்கள்.

    ReplyDelete
  4. தொடருங்கள் தோழரே நானும் அன்போடு தொடர்கிறேன்

    ReplyDelete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.