Saturday, January 11, 2014

இசைப் (திரைப்) பாடல் புனைவோமா!

நம்மாளுகள் திரைப் (சினிமாப்) பாடல் எழுதுவதைத் தெரிந்துகொள்ள விரும்பலாம். இன்றைய திரைப் (சினிமாப்) பாடல்கள் எல்லாம் புதுக்கவிதை அமைப்பிலே இருந்தாலும் அன்று மரபுக்கவிதை அமைப்பிலே இசைப் (திரைப்) பாடல்கள் இருந்தனவாம். கவிதைக்கு இசையூட்டினால் பாடல் ஆகாது; இசைக்குக் கவிதை அமைத்தால் பாடல் ஆகாது; இசையுள்ள கவிதைக்கு இசையூட்டினால் தான் பாடல் ஆகுமே!

இன்றைய திரைப் (சினிமாப்) பாடல், அன்றைய தொல்காப்பியனாரின் பண்ணத்தி (இசைப் பாடல்) என்று சொன்னாலும் கூட, நம்மவூரு நாட்டார் பாடல் காலத்தில் இருந்தே தோன்றியிருக்கணும். ஆயினும் பண்ணத்தி (இசைப் பாடல்) என்பது பண் என்றால் இசை; அத்துச் சாரிகை; இ - பெயர் விகுதி என்று ஒரு பொத்தகத்தில் படித்தேன். அதாவது, பண்ணத்தி என்றால் இசையை உடைய பாடல் எனலாம்.

பண்ணத்தி (இசைப் பாடல்) ஆனது எடுப்பு (பல்லவி), தொடுப்பு (அனுபல்லவி), கண்ணிகள் (சரணங்கள்) ஆகிய பகுதிகளைக் கொண்டிருக்கிறது. திரைப் (சினிமாப்) பாடல் புனைவதை ஒரு பூமாலை கட்டுவதற்கு ஒப்பிடலாம். அதாவது எடுப்பை அரும்பு என்றும் தொடுப்பை பூ (மலர்) என்றும் கண்ணிகள் (சரணங்கள்) ஆனது மாலையாக்கியது என்றும் சொல்லலாம்.

இது பற்றிய விரிப்பைப் பிறிதொரு பதிவில் விளக்கமாகத் தரவுள்ளேன். ஆயினும் இச்சிறு குறிப்பைப் பாபுனைய விரும்புவோர் கருத்திற்கொண்டு புதுப்பாவிலும் (புதுக்கவிதையிலும்) இசைப் (திரைப்) பாடல் புனையலாம் வாருங்கள்.

அண்ணே! அண்ணே! - என்
கண்ணான கண்ணே!
                                               (அண்ணே!)

எடுப்பை மீண்டும் ஒரு தடவைப் படிக்க வேண்டும். அதற்காக எடுப்பின் முடிவில்; எடுப்பின் முதற் சீரை அடைப்புக்குள் இடுங்கள்.

பெண்ணைக் கண்டேன்! - நான்
கண்ணாலே கண்டேன்!
                                                (பெண்ணைக்)
                                                (அண்ணே!)

எடுப்பைப் போன்று தொடுப்பையும் மீண்டும் ஒரு தடவைப் படிக்க வேண்டும். பின்னர் எடுப்பையும் தொடுப்பையும் மீண்டும் ஒரு தடவைப் படிக்க வேண்டும். அதற்காக அவற்றின் முதற் சீரை அடுத்தடுத்து அடைப்புக்குள் இடுங்கள்.

என் கண்ணாலே கண்ட - அவள்
என் முன்னாலே நின்றாள்!
என் விருப்பைச் சொல்ல - அவள்
உன் காதலி என்றாள்!
                                                   (அண்ணே!)

எளிமையாக இப்படிக் கண்ணி (சரணம்) அமைக்கலாம். கண்ணியைப் படித்த பின் மீண்டும் எடுப்பையும் தொடுப்பையும் படிக்க வேண்டும். அதற்காக எடுப்பின் முதற் சீரை அடைப்புக்குள் இடுங்கள். ஒரு கண்ணி ஒரு பூ மாலை ஆகாதே! அடுத்தடுத்துப் பல கண்ணிகளை (சரணங்களை) அமைக்கலாம்.

அண்ணே! அவளைக் கண்டேன் - அவள்
கண்ணில் உன்னைக் கண்டேன்!
பெண்ணே! அழகுக்கு அவளே - அவள்
மண்ணில் உனக்கே அண்ணே!
                                                    (அண்ணே!)

இப்படி நான்கைந்து கண்ணிகளை (சரணங்களை) அமைத்தால் பூ மாலை ஆகிடுமே! ஆமாம், இப்படிப் புதுப்பாவிலும் (புதுக்கவிதையிலும்) இசைப் (திரைப்) பாடல் புனையலாம் எனச் சொல்ல வந்தேன். முயன்று பாருங்கள்; எதுகை, மோனை எத்துப்பட்டால் இசை அமையுமே! இசையுள்ள கவிதைக்கு இசையூட்டினால் இன்றைய திரைப் (சினிமாப்) பாடலோ, அன்றைய தொல்காப்பியனாரின் பண்ணத்தியோ (இசைப் பாடல்) அமையலாம். எல்லாவற்றுக்கும் முதலில பாபுனைய விரும்புங்கள். பாபுனைகையிலே தூயதமிழைப் பேணித் தாய்த் தமிழை வாழ வையுங்கள்.

5 comments:

  1. விளக்கம் மிகவும் அருமை ஐயா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
      தங்களுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரா !
    இலகுவாகன முறையில் விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள். கற்றுக் கொண்டு பா எழுதுவது சுலபமா தெரியவில்லை. முயற்சி செய்கிறேன். ஆசை தான் பார்க்கலாம். தொடர்கிறேன்.
    நன்றி ...! வாழ்த்துக்கள்....

    ReplyDelete
    Replies
    1. "பறக்கவேணும் என்று நினைத்தால்
      காற்றே வந்து சிறகாய் முளைக்கும்" என
      பாவலன் ஒருவர் கூறியது
      நினைவுக்கு வருகிறது...
      அதாவது
      நம்பிக்கை இருந்தால்
      பாடல் புனையலாம்
      நம்பித் தொடருங்கள்!

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.