Sunday, November 17, 2013

பாரதியைப் போல கேலி பண்ணுவீரா?

பாபுனைய விரும்பும் உறவுகளே! பாவலனுக்கு (கவிஞனுக்கு) பழிப்பும் நெழிப்பும் கேலியும் நையாண்டியும் நகைச்சுவையும் என எல்லாம் தெரிந்திருக்க வேண்டும். அப்பதான் வாசகர் மகிழ்வடையத்தக்க பாபுனையலாம்.

புகழ்வது போல இகழலும் இகழ்வது போலப் புகழலும் தமிழில் பாபுனையும் போது கையாளப்படுவதுண்டு. எடுத்துக்காட்டாக ஓரிரு வரிகள்:
"சிறிலங்காப் படையில் சேருவோம் வாருங்கள்!
அழகான தமிழ்ப் பெண்களைக் கெடுக்கலாம்...
ஆயிரம் தமிழர் வீடுடைத்துத் திருடலாம்...
இலட்சம் கோடி பொன்பணம் பொறுக்கலாம்...
யாழ்போய் போராடினால் அத்தனையும் ஈட்டலாம்...
வாருங்கள் சிறிலங்காப் படையில் சேருவோம்!" என்றவாறு அமைய

ஈழத்து யாழ்பாணத்துப் பாவலர் பண்டிதர் சா.வே.பஞ்சாட்சரம் அவர்கள் 1990களில் கவியரங்கொன்றில் பாடிய கவிதையை நான் மறந்தாலும் எனது வரிகளில் அவரது பாபுனை திறனைச் சொல்ல முனைகிறேன்; தவறிருந்தால் என்னை அடித்து நொருக்குங்கள் (ஒறுப்புத் தரலாம்).

ஈழத்தில் போர் இடம்பெற்ற காலத்தில் சிங்களத் தலைவர்கள் எனது வரிகளில் குறிப்பிட்டவாறே ஆள்திரட்டினர். அப்படியாயின் சிங்களவருக்குப் புகழ் சேர்க்கும் வரிகள். அப்படிப் புகழ்ந்து பாடித் தமிழர் படும் துயரை வெளிப்படுத்தல்; சிங்களப் படையை இகழ்வதாகவே முடியும். இவ்வாறு சிங்களப் படையைப் புகழ்வதாகப் பாடி இகழ்ந்து, தமிழர் துயரை வெளிப்படுத்திய சா.வே.பஞ்சாட்சரம் அவர்களின் பா (கவிதை) கிடைத்தால் பிறிதொரு பதிவில் தருவேன்.

இனி "பாரதியைப் போல கேலி பண்ணுவீரா?" என்ற கதைக்கு வருவோம். பாரதியைப் பற்றிய கதை ஒன்றைச் செய்தி ஏடு ஒன்றில் படித்தேன். அதனைச் சுருக்கிச் சொல்கிறேன்.

எட்டையபுர அரசவையில் புலவர்கள் எல்லோரும் குழுமித் தங்கள் கவித்திறத்தை அரங்கேற்றும் பொன்னந்திப் போழ்து நிகழ்வில், அரசவைத் தலைமைப் புலவரான காந்திமதி நாதர் (அவரது அகவை 16 - 17 தானாம்) பாரதியை இகழ (அவமானப்படுத்த) எண்ணியிருந்தார். அதற்கு அவர் "பாரதி சின்னப் பயல்!” என்று ஈற்றடி அமையும் வண்ணம் ஐந்து மணித்துளிகளில் பாடலியற்றிவிட வேண்டும் என்றார்.

இந்த நிகழ்ச்சி 1895லிருந்து 1898க்குள் நடந்திருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது. அதாவது பாரதிக்குப் 13 முதல் 16 அகவைக்குள். அப்படியாயின் புலவர் காந்திமதி நாதருக்கு பாரதி இளையவர் தான். புலைமையை அரங்கேற்றும் அந்நிகழ்வில் பாரதி கையாண்ட நுட்பத்தைப் பாருங்களேன்.

"ஆண்டில் இளையவனென் றந்தோ அகந்தையினால்
ஈண்டிங் கிகழ்ந்தென்னை ஏளனஞ்செய் – மாண்பற்ற
காரிருள்போ லுள்ளத்தான் காந்திமதி நாதனைப்
பாரதி சின்னப் பயல்." என்ற வெண்பாவில்

"தான் இளையவன் என்ற இறுமாப்பில், தன்னை இகழ்ந்து கேலி செய்ய முறையற்ற இருண்ட உள்ளத்தான் காந்திமதி நாதனைப் பார் அதி சின்னப் பயல்" என மேற்படி பாரதி கேலி பண்ணிப் பாடினார். அதைக் கேட்ட புலவர் காந்திமதி நாதரோ தலையைக் கீழே போட்டார். எப்படியோ புலவர் காந்திமதி நாதரின் தலைக்குனிவைப் போக்க பாரதி இன்னொரு பாடலையும் பாடினாராம்.

"ஆண்டில் இளையவனென் றைய அருமையினால்
ஈண்டின்றென் றன்னைநீ யேந்தினையால் – மாண்புற்ற
காரதுபோ லுள்ளத்தான் காந்திமதி நாதற்குப்
பாரதி சின்னப் பயல்." என்ற வெண்பாவில்

அகவையில் இளையோன் என்று அன்போடு என்னை நேசிக்கும் மண்புமிகு காந்திமதி நாதரின் முன் பாரதி சின்னப் பயல் என்று பொருள் வரும்படி பாடலை மாற்றியமைத்துப் புகழ்ந்து பாடினார்.

முடிவாக முதற் பாடலில் தன்னை ஒரு சிறந்த பாவலன் (கவிஞன்) என்றும் இரண்டாம் பாடலில் தன்னை ஒரு சிறந்த மனிதன் என்றும் பாரதி நிருபித்துக் காட்டியுமுள்ளான். இப்படி நம்மாளுகளில் எத்தனை பேருள்ளனர்.

பாபுனைய விரும்பும் உறவுகளே! பாரதியைப் போல கேலி பண்ணுவீரா?  பார் + அதி = (ர் + அ = ர) பாரதி என்ற சொல்லாட்சியைப் பார்த்தீரா? மேலும் பாவலனுக்குக் (கவிஞனுக்குக்) கேலி பண்ணத் தெரிந்தால் போதாது, தமிழில் இலக்கண திறமையும் வேண்டும். பாபுனைய விரும்புங்கள்; அதேவேளை பாபுனையத் தேவையான தமிழிலிலக்கணத் திறமையையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.

பிற அறிஞர்களின் பதிவுகளுடன் மீண்டும் சந்திப்பேன்.
(தொடரும்)

6 comments:

  1. இலக்கணம் தேவைதான் தலைக்கணம் இருக்கக் கூடாது

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை உளப்பூர்வமாக வரவேற்கிறேன்.

      Delete
  2. அருமையான சரித்திர நிகழ்வுடன்
    கவிஞர்களுக்கு வேண்டிய சிறப்பியல்புகளைச்
    சொல்லிப்போனவிதம் மிக மிக அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துகள் எப்போதுமே என்னை வளப்படுத்துகின்றது.
      மிக்க நன்றி ஐயா!

      Delete
  3. பாரதி கையாண்ட நுட்பம் மிகவும் அருமை... சிறப்பாக பகிர்ந்து கொண்டமைக்கு வாழ்த்துக்கள் ஐயா... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.