Sunday, July 14, 2013

யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்-011

எழுதப்படுவது எழுத்துப் போல
பாடப்படுவது பாட்டுப் போல
இசைக்கப்படுவது இசையைப் போல
அசைக்கப்படுவது 'அசை' என்போம்!
யாப்பிலக்கணத்திலே
எழுத்துகளால் அசைத்து
இசை கொள்ளுதலே அசையாம்!
உயிர், குறில், நெடில், ஆயுதம்,
மெய், வல்லினம், மெல்லினம்,
இடையினம், உயிர்மெய்,
குற்றியலுகரம், குற்றியலிகரம்,
ஐகாரக்குறுக்கும், அளபெடை
எல்லாமே அசைக்கும் உறுப்புகளே!
(இதுவரை இவைபற்றி எழுதிவிட்டேன்.)
இயலசை, உரியசை என
அசை இரண்டாகுமே!
நேரசை, நிரையசை என
இயலசை இரண்டாகுமே!
நேர்பு அசை, நிரைபு அசை என
உரியசை இரண்டாகுமே!
அசை பற்றி
நன்கு தெளிவு பெற்றால்
நாள், மலர், காசு, பிறப்பு என
நான்கு வகை வாய்ப்பாடு
அறிய வரும் - அதனை
வெண்பாவின் ஈற்றுச் சீராக
பாவிக்க வேண்டி வருமே!
குறில்(எ.கா.: க, ங), நெடில்(எ.கா.: கா, ஙா), ஒற்று(எ.கா.: க், ங்) என்னும்
மூவை எழுத்துகளால் ஆக்குவோம்
பாவின் முதுகெலும்பான "அசை"ஐ!
குற்றெழுத்துத் தனித்தோ (எ.கா.: க)
குற்றெழுத்து ஒற்றடுத்தோ (எ.கா.: கல்)
நெட்டெழுத்துத் தனித்தோ (எ.கா.: கா)
நெட்டெழுத்து ஒற்றடுத்தோ (எ.கா.: கால்)
எழுத்தமைதல் நேரசையாம்!
இருகுறில் இணைந்தோ (எ.கா.: கட)
இருகுறில் இணைந்து ஒற்றடுத்தோ (எ.கா.: கடல்)
குறில் நெடில் இணைந்தோ (எ.கா.: கடா)
குறில் நெடில் இணைந்து ஒற்றடுத்தோ (எ.கா.: கடாண்)
எழுத்தமைதல் நிரையசையாம்!
தனிக்குறில் ஒழிந்த(தவிர்ந்த)
எஞ்சிய மூன்று நேரசைகளோடு
கு, சு, டு, து, பு, று என்னும்
வல்லின உகரம் இணைதலே
நேர்பு அசையாகும்!
எடுத்துக்காட்டாக
"பந் + து = பந்து" என்றும்
"கா + டு = காடு" என்றும்
"காப் + பு = காப்பு" என்றும்
அமைந்து வருவதைக் காண்பீரே!
எண்ணிப் பாருங்களேன்
தனிக்குறில் நேரசையோடு
வல்லின உகரம் இணைந்தால்
வருவது நிரையசை அன்றோ!
(எ.கா.: ககு, கசு, கடு, கது, கபு, கறு)
நான்கு நிரையசைகளோடு
கு, சு, டு, து, பு, று என்னும்
வல்லின உகரம் இணைதலே
நிரைபு அசையாகும்!
எடுத்துக்காட்டாக
"விற + கு = விறகு" என்றும்
"வடக் + கு = வடக்கு" என்றும்
"தகா + து = தகாது" என்றும்
"நடாத் + து = நடாத்து" என்றும்
அமைந்து வருவதைக் காண்பீரே!
இரண்டு அசைகள் இணைந்து வருதலே
சீர்(சொல்) என்று
யாப்பில் கையாளப்படுகிறதே!
வெண்பாவின் ஈற்றடி ஈற்றுச் சீர்
தனியசையில் தான் முடியணுமாம்
அதற்கமைய
வாய்ப்பாடு ஒன்றும் வகுத்தனரே!
எடுத்துக்காட்டாக
வெண்பாவின் ஈற்றடி ஈற்றுச் சீரில்
நேர் அசை வரின் "நாள்" என்றும்
நிரை அசை வரின் "மலர்" என்றும்
நேர்பு அசை வரின் "காசு" என்றும்
நிரைபு அசை வரின் "பிறப்பு" என்றும்
யாப்பில் அழைக்கப்படுகிறதே!
பா புனையும் போது
அசை எப்போதும்
சீர், தளை போன்ற
எஞ்சிய பா உறுப்புகளோடு
இணைந்தே வரும் ஆகையால்
'சீர்' பற்றியே - அடுத்து
நாம் தொடர்வோமே!
(தொடரும்)

முன்னையதைப் பார்க்க
http://paapunaya.blogspot.com/2013/06/010.html

2 comments:

  1. எடுத்துக்காட்டுடன் நல்ல விளக்கம் ஐயா... நன்றிகள்...

    தொடர்கிறேன்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.