Showing posts with label நான் படித்ததில் எனக்குப் பிடித்தது. Show all posts
Showing posts with label நான் படித்ததில் எனக்குப் பிடித்தது. Show all posts

Wednesday, May 28, 2014

பாப்புனைக - கள்ளுக் குடித்தவர் பெண் பனையோடு மோதினால்...

1961 இல் யாழ்ப்பாணப் பிரதேசக் கலைமன்றம், நாட்டுப்பாடல் நடன நாடகக்குழு வெளியிட்ட "வாய்மொழி இலக்கியம்" என்ற பொத்தகத்தில் இருந்து "என் செய்வாய் பெண் பனையே" என்ற தலைப்பில் நாட்டார் பாடலொன்றைப் படித்துச் சுவைத்தேன். அதாவது, கள்ளுக் குடித்தவர் வெறியேறியதும் கதைத்துக்கொள்ள ஆளின்றி பெண் பனையோடு பேச்சுத் தொடுப்பதாக அப்பாடல் அமைந்திருந்தது. அதற்குப் பெண் பனை  பதிலளிப்பதாக பனையின் சிறப்பைப் பகிருவதாக அப்பாடல் அமைந்திருந்தது.

அதனைப் படிக்கு முன் மேற்காணும் கதைக்கு ஏற்பப் பாப்புனைய முயற்சி செய்வோமா!
வெறியேறிய கள்ளுக் குடித்தவர் இப்படிப் பெண் பனையைக் கேட்பதாக எண்ணிப் பாருங்கள். இவ்வாறு உங்கள் எண்ணத்தைக் கொட்டிப் பாப்புனைக.

பெண் பனையே! பெண் பனையே!
கள்ளுக் குடித்தேன் நானே...
குடிச்ச புளிச்சல் கள்ளு
உன்னாலே என்னதான் பண்ணுவாய் என்றே
என்னாலே உன்னைக் கேட்க வைக்குதே!

பெண் பனைக்கு வாயிருந்தால் கள்ளுக் குடித்தவரை எப்படியெல்லாம் கேட்டிருக்கும். பனை சார்பாகக் கீழே இருப்பது எனது கைவண்ணம். உங்கள் மூளைக்கு வேலை கொடுங்கள்; தோன்றும் உங்கள் எண்ணத்தைக் கொட்டிப் பாப்புனைக.

சீவல் தொழிலாளி வெட்டி வீழ்த்திய
பச்சையோலைப் பக்கம் தள்ளாடி வந்தால்
கருக்குகள் உன் காலறுக்குமே!
வீசும் காற்றோடு மோத இயலாத
காவடியாடும் காவோலை விழுந்தால்
விழுந்த வீச்சிலே உன் கழுத்தறுக்குமே!
என் அடிப்பகுதில் இருந்து - நீ
என் உச்சிப்பகுதியை அண்ணாந்து பார்த்தால்
வானத்து ஞாயிற்று வெயில் எறிக்க
உன் கண்ணைத் தாக்க - நீயும்
பிடரியில் அடிவிழ வீழ்வாய் என்பேனே!

உங்கள் யாழ்பாவாணன் ஒரு சின்னப் பொடியன் ஆகையால் அவரது எண்ணம் பெரிதாக அமையாவிட்டாலும் பரவாயில்லை. பாபுனைய விரும்பும் எல்லோரும் இவ்வாறு முயற்சி எடுக்கலாம் தானே. நீங்கள் முயற்சி எடுத்ததையும் கீழே தரப்படும் நாட்டார் பாடலையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.
வாய்மொழி இலக்கியம்
உண்மையில் நாட்டுப் பாடல்கள் தூய தமிழிலேயே உள்ளன. அதேவேளை இசை, இலக்கணம், எளிமையான சொல்லாட்சி எனப் பல இருப்பதால் தான் அவை இன்றும் வாழ்கின்றன. உங்கள் முயற்சியையும் மேற்காணும் பாடலையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

ஒவ்வொருவர் எண்ணமும் வேறுபடுவது இயல்பு. எனவே, பலரது படைப்புகளை ஒப்பு நோக்குவதன் மூலம் ஒவ்வொருவரது எண்ணம், எழுத்து, நடை, பாபுனையும் ஆற்றல் ஆகியவற்றை அறிய முடியுமே! மேலே தரப்பட்ட பாடல் உள்ள பொத்தகத்தைப் பதிவிறக்கக் கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கித் தேடுக.

https://mega.co.nz/#F!dVh3SIab!UiF3-DAnSBR9T3LWAGF0cg!hdp2UDoQ

Sunday, January 27, 2013

பாரதியாரின் 'தமிழ்' என்னும் பா(கவிதை)


நான் படித்த பாவலர்களின் பாக்களிலே
பாரத நாட்டுப் பாவலர் பாரதியாரின்
தமிழ் எவ்வாறு மேம்பட வேண்டுமென
'தமிழ்' என்று தலைப்பிட்டுப் பாடிய பா
தமிழில் பாபுனைவோருக்கு அறிவுப் பா!

பாவலன் பாடும் பாடுபொருளைவிட
பாவலன் பாட்டில் வரும் தூரநோக்கு
எண்ணங்களை எண்ணிப் பாருங்களேன்...
முடிந்தால் பாரதியின் எண்ணங்களைப் போல
பாபுனைய விரும்புவோர் பாடுங்களேன்!

தமிழ்

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
      இனிதாவது எங்கும் காணோம்;
பாமர ராய், விலங்குகளாய், உலகனைத்தும்
      இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு
      வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
      பரவும்வகை செய்தல் வேண்டும்.

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
      வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்,
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை;
      உண்மை, வெறும் புகழ்ச்சி யில்லை;
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
      வாழ்கின்றோம்;ஒருசொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
      தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்!

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
      தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள்
      தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
      சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்;
      அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.

உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
      வாக்கினிலே ஒளியுண்டாகும்;
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
      கவிப்பெருக்கும் மேவு மாயின்,
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
      விழிபெற்றுப் பதவி கொள்வார்;
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
      இங்கமரர் சிறப்புக் கண்டார்.

ஆக்கியோன் பாரத நாட்டுச் சுப்பிரமணிய பாரதியார்

Sunday, January 20, 2013

சோமசுந்தரப்புலவர் பா(கவிதை)


பாபுனைய விரும்பும் ஒவ்வொருவரும் சிறந்த பாவலர்களின் பாபுனையும் நுட்பங்களை கண்டறிதல் மிகவும் பயனுள்ளதாகும். இங்கு எளிமையான ஆடிப்பிறப்பில் நல்ல சாப்பாடாக
கூழும் கொழுக்கட்டையும் உண்ணும் நிகழ்வை புதுமையாக ஈழத்து யாழ்ப்பாணத்து நாவாலியூர் சோமசுந்தரப்புலவர் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளார். அவரது பாவைப் படித்ததும் நாவூறும் பாருங்கோ... பாபுனைய விரும்புவோர் அவரது நுட்பத்தைப் படித்து சிறந்த பாக்களைப் புனைய வாழ்த்துகிறேன்.

ஆடிப்பிறப்பு

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
பச்சை அரிசி இடித்துத் தெள்ளி,
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,

வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரில் சக்கரையுங்கலந்து,
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.

வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
வெல்லக் கலவையை உள்ளே இட்டு
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!

பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டு மாவுண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக வாயூறிடுமே

குங்குமப் பொட்டிட்டு பூமாஇலை சூடியே
குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் பாடிப்பும் படைப்போமே

வன்னப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே

வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல
மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தந் தோழர்களே
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

ஆக்கியோன்: ஈழத்து யாழ்ப்பாணத்து நாவாலியூர் சோமசுந்தரப்புலவர்